சித்திரையே வருக! சிறப்பெல்லாம் தருக!
மேதினியைச் சுற்றிவரும்
மெய்க்காவல வெய்யோன் ஒருசுற்றை முடித்து
மறு சுற்றைத்தொடங்கி
மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம்!
கானகத்தே ஒரு காஞ்சனமலையென
வானகத்தே உயர்ந்து நிற்கும்
கொன்றைமலர்கள் கொத்தென பூக்க
கன்னியரின் விழியன்ன கருவண்டுகள் அதில்
தேனுண்டு மயங்க!
வந்ததே வசந்தமென புன்னைகள் எலாம்
புதுப்பச்சை பூசி பூத்துச்சொறிய
நற்றவ மங்கையரின் நளின மேனியின்
உற்ற வாசமென வேம்பூக்கள் மலர்ந்திட
முக்கனியில் முதற்கனி மாங்கனி
பிஞ்சாக பிறப்பெடுக்க முத்துப்பல் வரிசையென
கொத்தாக பூத்திடுமே மல்லிகைகள்! ஓங்கி உயர்ந்த
மரமதன் உச்சியிலே ஒளிர்ந்திடுமே மூன்று கண்கள்!
வெயிலுக்கு இதமாகும் அதன் பெயர் நுங்கு!
வெய்யோனின் வெம்மைதனை
வேனில் காற்று இதமாக்கிட
வீதியெலாம் தோரணங்கள் வரவேற்க
வீடெல்லாம் மங்கலம் சூழ
வருகை தரும் சித்திரைப் பெண்ணே வருக!
இத்திரையின் துன்பமெல்லாம் போக்கி
நித்திரையின் நீடு துயரிலிருந்து நீக்கி
நித்தமெலாம் இன்பத்தினை நீ எனக்கு தருக!
மெத்தனமெல்லாம் போக்கி மேன்மைதனை பொலிக!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!