குழந்தை!
பூச்சாண்டிகளுக்கும் ஆசைதான்
குழந்தைகளை பிடித்துப்போக
காலம் காலமாக காத்து நின்றும்
அனுப்ப அம்மாக்கள் தயாரில்லை!
தடுக்கி விழவிட்டு அனைத்து
மகிழ்கிறது பூமித்தாய்!
ஈர உதடுகளால் முத்தம்பதிக்கையில்
உலர்ந்த இதயங்களிலும்
அன்பை விளைவித்து விடுகிறது குழந்தை!
எல்லாச் சுமைகளையும் இலேசாகிப் போகின்றது
கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பை காண்கையில்!
ஒற்றை விரலால் தீண்டி ஓடி ஒளிகையில்
சுற்றியெல்லாம் மறந்து சொர்கம் திரும்புகிறது!
பிள்ளைகளின் விளையாட்டில் கடவுளும்
கலந்துகொள்கிறார் குழந்தையாக!
காட்சியில் பதிபவை எல்லாம் பொதிந்து போகையில்
பெரிய மனுச அவதாரம் எடுக்கிறது குழந்தை!
குழந்தையினை காண்கையில் விழிகளை
அகலமாக்குகிறது பவுர்ணமி நிலா!
அலங்கோலமாக இருந்தாலும் அழகாக இருப்பதாக
உணர்கிறது குழந்தை கொஞ்சும் வீடு!
குழந்தை தின்ற மிச்சத்தை உண்டு குதுகலப்படுகின்றன
குடியிருக்கும் எறும்புகள்!
பாட்டி தாத்தாக்களை பால்யத்துக்கு
அழைக்கின்றன பாப்பாக்கள்!
உப்பு மூட்டை சுமந்தாலும் இனிக்கவே
செய்கிறது தாத்தாக்களுக்கு!
குறும்புகள் அரும்புகையில் குழந்தைகள்
கற்கின்றன பாடம்!
எல்லோர் கவனத்தையும் எளிதில்
தன்பால் இழுத்தாலும் அதன் கவனம்
அம்மாவின் மீதே! குழந்தைகள் பேசுவதை
தலை அசைத்து ரசிக்கின்றன மரங்கள்!
ஜேஜா கும்பிடுகையில் குழந்தை ரோஜாவை ரசிப்பதை
ரசித்துக்கொண்டிருக்கிறார் கடவுள். எதைக் காண்கிறதோ அதை தாமாக உருவகப்படுத்திக் கொள்கிறது குழந்தை!
அப்பாவின் வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன
குழந்தைகளை சுமப்பதற்கு!
குழந்தைகள் ஏறியதும் குதுகலம் வந்து விடுகிறது
இரும்பு இயந்திரங்களுக்கும்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!