கனவில் வந்த காந்தி 10 (கரந்தை ஜெயக்குமார்)
நமது அன்பர் நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் கனவில் வந்த காந்தி பத்து கேள்விகள் கேட்டுள்ளார். அவர் பதில் சொல்லியதோடு இன்னும் பத்துபேரை போய் கேளுங்கள் என்று காந்தியை அனுப்பிவிட்டார். அவரும் பாவம் என்னத்தான் செய்வார்? தமிழை விரும்பி கற்க வேண்டும் என்று எண்ணியவராயிற்றே கரந்தையார் திரு ஜெயக்குமாரின் தனது கேள்விக் கணைகளை வீசினார். அந்த கணைகளை சாமர்த்தியமாக தடுத்து பதிலளித்த கரந்தையார் இன்னும் பத்துபேரை இதில் கோர்த்துவிட்டார். பதிவுலகில் இந்த தொடர் கேள்விக்கணைகளும் பதில்களும் ஒருவாரமாக ஒரு கலக்கு கலக்கி வருகின்றன. கரந்தையார் கோர்த்த பதின்மரில் நான் பத்தாம் நபர். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல என் அனுபவம் பத்தாது! அதனால் கொஞ்சம் தயக்கம்! அப்புறம் ரஜினிமாதிரி தயங்கிக் கொண்டே இருந்தால் எப்படி? கேப்டன் மாதிரி இறங்கித்தான் பார்ப்போமே என்று இதோ பதில் அளிக்க கோதாவில் இறங்கி விட்டேன்! இன்னுமொரு விஷயம்! இந்த தொடரில் நான் யாரையும்கோர்க்கப் போவது இல்லை! எனவே தைரியமாய் பதில்களை படித்து ரசியுங்கள்!
நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?
நிறையபேர் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்பார்கள். எனக்கு அதில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. இதைப்பற்றி விரிவாகவே ஓர் பதிவு எழுதலாம். மறுபிறவி எடுத்தால் இதே இந்தியாவில் பிறக்கவேண்டும் என்பதும் கடவுளின் நகரமான கேரளாவில் இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே இருக்க அங்கே பிறக்க வேண்டும் என்ற ஆசை உண்டு
ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?
ஒருவேளை அப்படி நடந்து எனக்கு முழு அதிகாரம் கிடைத்துவிட்டால் இந்தியாவை இன்னும் ஒளிர வைக்கும் ஆசை இருக்கிறது. அதே சமயம் இப்போதைய ஆட்சி முறையில் அந்த ஆட்சி அமையுமானால் என் கனவு பலிக்காது. குறிப்பாக பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுத்தல் ஜனாதிபதி பதவியை ஒழித்தல் போன்றவையோடு கிராமங்களை சுடுகாடாக மாற்றாமல் விவசாயம் செழிக்கவும் சுதேச தொழில்கள் வளர்ச்சிக்கும் உதவுவேன்.
இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?
இந்தியர்கள் யாரும் வெளிநாட்டில் பணி செய்யக்கூடாது என்பதே என் ஆட்சியின் முதல் கொள்கையாக இருக்கும். அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் இந்தியாவிலேயே கிடைக்க உறுதி செய்யப்படும். ஆனால் அவர்கள் அதற்கேற்ப அவர்களின் திறமைகளை இந்தியாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.அதனால் கட்டாயம் எதிர்ப்பார்கள் ஆனால் பெரும்பான்மையோர் என்பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர் உதவித்தொகை போன்றவை சலுகைகள் அனைத்தையும் ரத்து செய்வேன். வயது முதிர்ந்த பெற்றோரை அவர்களது மகன் –மகள்களே கவனித்துக் கொள்ளவேண்டும். அப்படி கவனிக்க மறுக்கப்படும் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை சலுகைகள் ரத்து செய்வேன். பிள்ளைகள் இல்லாத முதியோர்களுக்கு அரசாங்க காப்பகங்கள் உருவாக்கப்படும்.
அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?
வட்டம், மாவட்டம் ஒன்றியம் என்ற கட்சி பதவிகளை வைத்து ஆட்டம் போடுபவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பேன். அரசியலுக்கு வருவோர் தனது மொத்த சொத்து மனைவி- மகன் பெயரில் இருந்தாலும் அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்னரே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற திட்டம் கொண்டு வருவேன். இதனால் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வருவோர் குறைந்து போவார்கள்.
மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?
மதிப்பெண் முறையே தவறென்று அதை ஒழித்து விடுவேன்! திறமைக்கு முதலிடம் எண்களுக்கு அல்ல! எனவே இந்த கேள்வி எழ வாய்ப்பு இல்லை!
விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?
செவ்வாய் புதன் நிலா ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு இந்திய கிராமங்களை முன்னேற்ற விவசாயம், கால்நடை, மருத்துவம் போன்றவற்றில் ஆராய்ச்சிகள் செய்ய முன்னுரிமை வழங்கப்படும். அவர்களுக்கென சுதந்திரம் வழங்கப்படும்.
இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
விதைப்பதுதான் கடினம். அந்த விதை முளைத்துவிட்டால் அதை வளர்க்கும் வரை சிரமம். வளர்ந்தபின் விருட்சமாக மாறும். அதனால் விதைத்து பார்க்கிறேன்! விருட்சமாக்குவது மக்களின் கடமை!
மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
அனைவருக்கும் இலவச கல்வி, சுகாதார வசதியுடன் கூடிய குடியிருப்புக்கள் அளிக்க வேண்டும் என்பது ஆசை
எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?
தெய்வப்பிறவிக்கு அடுத்து மானுடப்பிறவிதான்! அதுவும் இல்லையெனில் தெய்வமாகவே இருந்துவிடுகிறேன்! வேறுபிறவி வேண்டாம் என்பேன்!
என்ன நண்பர்களே! ஏதோ என்னால் முடிந்ததை உளறி இருக்கிறேன்! பொறுத்துக்கொள்ளுங்கள்! நன்றி!