கதம்பசோறு பகுதி 51
ஓடிக்கொண்டே இருக்கும் மோடியும்! ஓடாத ஓபிஎஸ்ஸும்!
நம்முடைய மாநிலத்தையோ நாட்டையோ எடுத்துக்கொண்டால் ஆட்சி முறை கூட்டாட்சி தத்துவம். எனவே பிரதமரும்- முதல்வரும் முக்கியமானவர்கள். நமக்கு வாய்த்த நல்லவர்கள் வல்லவர்களாக இல்லாதது நாம் செய்த பெரும்பாக்கியம்தான் என்ன செய்வது? பிரதமருக்கு சொந்த நாட்டில் இருப்பதை விட வெளிநாடுதான் பிடிக்கிறது! தினம் ஒரு நாடு என்று கணக்குவைத்து சுற்றிப் பார்க்கிறார் அன்னிய முதலீடு என்கிறார் அது இது என்று எல்லா நாடுகளுக்கும் சுற்றிவருகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ரெகார்டை முறியடித்துவிடுவார் போலிருக்கிறது. அவராவது ஒரு அணுகுண்டு வெடித்து கார்கில் போரை வெற்றிகரமாக சமாளித்தார். இவருக்கு நாட்டில் குப்பையை அகற்றவும் கழிப்பறைகட்ட வெளிநாட்டில் நிதிகேட்கவே நேரம் போதவில்லை! இதற்கிடையில் மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கவும் விளம்பரங்களில் நடிக்கவும் வேறு நேரம் ஒதுக்க வேண்டும். எப்படியோ குஜராத்தை மாற்றிவிட்டேன் என்று ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இந்தியாவை மாற்றுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். சரி இவராவது பரவாயில்லை! ஓபிஎஸ் ஒண்ணுக்கு இருக்க வேண்டுமானால் கூட பர்மிசன் கேட்கவேண்டும் போல! ஆனாலும் சளைக்காமல் நாற்காலியைவிட்டு அசையாமலே கலைஞருக்கு பதில் அறிக்கை விட்டுக்கொண்டு அம்மா விசுவாசம் காட்டுகிறார். மழை வெள்ள நிவாரணங்களோ, போதுமான உரங்களோ கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். ஒருபக்கம், டெங்கு, தர்மபுரி சிசுமரணம் என்று சுகாதாரத் துறையில் அலட்சியம், சென்னை நகர சாலைகள் மட்டுமின்றி தமிழக கிராமங்களில் பல சாலைகள் பராமரித்தே பலவருடங்கள் ஆகிவிட்டது. இருந்தும் இவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை! தட்டு நிறைய லட்டு இருந்தும் தின்ன முடியாத சர்க்கரைவியாதிக்காரன் போல அவதிப்படுகிறார். இந்த கூத்துக்களையெல்லாம் பார்த்துக் கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் நாம். இதுவும் கடந்துபோகும்!
திருடப்படும் கதைகள்:
கத்தி படக்கதையை என்னுடையது என்றார் மீஞ்சூர் கோபி. அதற்கு சில ஆதாரங்களையும் வைத்தார். இப்போது லிங்கா படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முல்லைவனம் 999 என்ற நாவலை தழுவியே படமாக்கப்பட்டுள்ளது என்று அதன் உரிமையாளர் வழக்குபோட இதற்கும் அந்த நாவலுக்கும் சம்பந்தம் இல்லை என்று இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு விடாமல் பென்னிகுயிக் வாழ்க்கை வரலாறு ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல என்று கூறியிருக்கிறார். இணையத்திலும் வலைப்பூக்களில் இந்த திருட்டு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பிரபலமான பதிவர்களின் பதிவுகளை திருடி தன் பதிவில் போட்டுக்கொள்வது சிலரது வழக்கமாகவே உள்ளது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் பல கதைகள் திருடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது என்று அவரே முகநூலில் தகவல் பகிர்ந்துள்ளார். சிந்தனை திருட்டு என்பது கண்டிக்க கூடியது என்றாலும் இதில் இருந்து தப்பிக்க திருடுபோகாமல் எப்படி காப்பது என்பதற்கு எந்த ஒருவழியும் இருப்பதாக தோணவில்லை! திருட்டு விசிடி என்று அலறும் திரைப்பட இயக்குனர்கள் திருடி படம் எடுக்கலாமா? பல ஹாலிவுட் படங்களை தழுவி எடுத்தவர்கள் ஒரு பெயருக்காவது இதில் இருந்து தழுவி எடுத்தோம் என்று கார்டு போடுகிறார்களா என்றால் இல்லை! இதில் என்ன கொடுமை என்றால் என்னுடைய பேய்கள் ஓய்வதில்லை தொடரில் இருந்து சில சீன்களை சமீபத்தில் வந்த பேய்ப்படத்தில் சுட்டுள்ளார்களாம். அனானியாக கருத்துச்சொல்லும் ஒருவர் இதைச்சொன்னார். நாமெல்லாம் இந்த அளவுக்கு வொர்த்தாயிட்டோம் என்று சந்தோஷப்படுவதா சங்கடப்படுவதா தெரியவில்லை!
வியக்க வைத்த விராத் கோலி!
கிரிக்கெட் பார்ப்பதை இப்போதெல்லாம் தவிர்த்துவிடுகிறேன்! ஒரு காலத்தில் இந்தியா விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக ஸ்கூலுக்கு லீவ் போட்டெல்லாம் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு கிரிக்கெட் பைத்தியம் கொஞ்சம் விளையாடவும் செய்வேன். கிரிக்கெட் சூதாட்டங்கள் இந்தவிளையாட்டிலிருந்து என் ஆர்வத்தை கொஞ்சம் விளக்க குடும்பம் குழந்தைகள் என சமீபத்தில் முழுவதும் விலகி இருந்தேன். இருந்தாலும் என்றாவது ஒருநாள் ஓர் அரைமணிநேரம் ஒருமணிநேரம் பார்ப்பது உண்டு. அப்படித்தான் இந்தியா இலங்கை விளையாடிய ஐந்தாவது ஒருநாள்போட்டியை பார்த்தேன். முழுவதும் பார்க்கவில்லை! இந்தியா விளையாடுகையில் 20 ஓவர் கழித்து பார்த்தேன். விராத் கோலியின் தலைமைப் பண்பும் ஆட்டமும் கொஞ்சம் வியக்கவைத்தது. தோனிக்கு பிறகு இவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர்தான் என்று தோன்றுகிறது. இளம் வீரர்களை ஆட விட்டு அவர்களின் திறனை தன்னம்பிக்கையை அதிகரிக்கச்செய்தார். தோனியே கூட கடைசி கட்டத்தில் ஓவருக்கு பத்து ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் டெயிலெண்டர்களுடன் பேட்டிங் செய்தால் அவர்களை நிறைய பந்துகளை எதிர்கொள்ள செய்ய மாட்டார். ஆனால் கோலி புதியவர்களை நம்பினார். கேதர் ஜாதவ், மற்றும் அக்சர் பட்டேலுக்கு நிறைய பந்துகளை சந்திக்க வாய்ப்பு தந்தார். அந்த நம்பிக்கையை ஜாதவ் பூர்த்தி செய்யாவிடிலும் அக்சர் நன்கு பூர்த்தி செய்தார். அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட்டுவிடும் கோலி இப்போது கொஞ்சம் பக்குவப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதே சமயம் கொஞ்சம் கூட போராட்ட குணம் இல்லாத இலங்கை அணியை இப்போதுதான் பார்த்தேன் அதற்கு என்ன ஆயிற்று. கேப்டன் மாத்யூஸ் மட்டுமே இந்த தொடரில் குறிப்பிடத்தக்கபடி ஆடியுள்ளார் என்று புள்ளிவிவரங்களில் இருந்து தெரிகிறது. மற்றபடி பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை! மட்டையாளர்களும் ஜொலிக்கவில்லை! சங்ககரா இந்த தொடரில் ஆடவில்லை போலும். அணித் தலைவன் என்பவன் தன்னை நம்புவதோடு அணியினரையும் நம்ப வேண்டும். அந்தவகையில் கோலியின் இந்த ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்து போயிற்று.
படிச்ச புத்தகம்!
ஒரத்தநாடு கார்த்திக் தளத்தில் நிறைய நாவல்கள் வாரப்பத்திரிக்கைகள் டவுண்லோடு லிங்க் கிடைக்கிறது. அதில் அவ்வப்போது பல நாவல்கள் புத்தகங்கள் டவுண்லோடு செய்து கொள்வேன். என்னுடைய ஓய்வு நேரம் மதியம் இரண்டு மணிக்கு மேல்தான் இருக்கும் அப்போது வலைப்பூக்களை படிக்கவும் முகநூலில் மேயவும் பதிவு எழுதவுமே நேரம் சரியாகிவிடும். அதிலும் நேரம் கிடைத்தால் ஒன்றிரண்டு புத்தகங்கள் படிப்பதுண்டு. இந்த வாரம் மைண்ட் ரிலாக்ஸ் செய்ய ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல் ஒன்று டவுண்லோடு செய்து படித்தேன். அவசரம் விவேக் அவசரம் என்ற நாவல் அது.
பாக்கெட் நாவல் வெளிவந்த புதிதில் வந்தது போலிருக்கிறது. அடையாறு பார்க்கில் தலையில்லாத ஓர் உடல் பின்பு ஒரு சிதைக்கப்பட்ட தலை கிடைக்கிறது. இதைக்கொண்டு இறந்தவன் யார் கொலையாளி யார் என்று சுவைபட கொண்டு செல்கிறார் க்ரைம் கதை மன்னர். இடையில் இரண்டு லவ் டிராக் வேறு. கொலையாளியை ஊகிக்க முடியாத வகையில் கொண்டு சென்று திடீர் திருப்பமாக இவன் தான் கொலையாளி என்று சொல்லுவது சுலபமன்று. அதை சுலபமாக செய்கிறார் நாவலாசிரியர். விறு விறு நாவல்.
படிக்க வேண்டுமெனில் இங்கு டவுண் லோடு செய்து கொள்ளுங்கள்! ராஜேஷ்குமார் நாவல்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் செய்து கேட்டால் அனுப்பி வைக்கிறேன்! நன்றி!
சமையகட்டு!
சென்றவாரம் முப்பருப்பு வடையை நிறைய பேர் ருசித்து பாராட்டினீர்கள். இந்த வாரம் கருணைக்கிழங்கு மசியல் பற்றி எழுதலாம் என்று அம்மாவிடம் கேட்டேன். அவர் பிசியாக இருந்ததால் அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். அதனால் பழைய மங்கையர் மலரில் படித்த மாம்பருப்பு வத்தக் குழம்பு பற்றி பகிர்கிறேன்.
தேவையான பொருட்கள்!
மிளகுசீரகம் 1 டீஸ்பூன்
தனியா 2 டீஸ்பூன்
வரமிளகாய், 4, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா 1 டீஸ்பூன்
பச்சரிசி புழுங்கல் அரிசி தலா ½ டீஸ்பூன்
சுண்டல் வற்றல் 3 டீஸ்பூன்
மாங்கொட்டையின் உள்ளே உள்ள மாம்பருப்பு 1
மணத்தக்காளி வற்றல் 1 டீஸ்பூன்
கடுகு வெந்தயம் தலா ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை, வதக்கிய பூண்டு தலாஒரு கைப்பிடி
வெல்லம் சிறிது, நல்லெண்ணை, உப்பு, தேவையான அளவு.
மாங்கொட்டையை கேஸ் தணலில் காட்டினால் அது கருகி உள்ளிருக்கும் மாம்பருப்பு வெளிப்படும். அதை சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
ஒரு எலுமிச்சை அளவு புளி எடுத்து அதே அளவு கல் உப்பு போட்டுக் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான வாணலியில், மிளகுமுதல் கருவேப்பிலை வரை மேற்சொன்ன எல்லா பொருள்களையும் சிறிது நல்லெண்ணை விட்டு வதக்கவும். மிக்சியில் மைபோல அரைத்து புளிகரைசலில் கரைக்கவும்.
வாணலியில் தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து கரைசலை கொதிக்க விடவும். வதக்கிய பூண்டை குழம்பு கொதித்தபின் போடவும். வெல்லம் சிறிதளவு தேவையென்றால் சேர்க்கவும்.
இதை பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து ஒருமாதம் வரை உபயோகிக்கலாம். வயிறுவலி, அல்சர் போன்றவைகளுக்கு நல்ல மருந்து.
குறிப்பு எழுதியவர்: வேதவள்ளி ராஜம் ஸ்ரீ வில்லிப்புத்தூர்.
டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
சாப்பிட்டு முடித்ததும் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும். உணவு செரிமானம் விரைவில் ஆவதுடன் உடல் எடை குறையும்.
அடைமாவில் வாழைப்பூ பொடிப்பொடியாக அரிந்து சேர்த்தால் சுவையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும்.
சீயக்காய் அரைக்கும் போது ஒரு கைப்பிடி வேப்பிலையும் ஒரு கைப்பிடி மாந்துளிர் இலையையும் சேர்த்து காயவைத்து அரைத்து தலைக்கு குளித்தால் தலையில் ஏற்படும் அரிப்பும் வியர்வை நாற்றமும் போய்விடும்.
உப்புக்கு நடுவில் எலுமிச்சை பழங்களை அமிழ்த்தி வைத்தால் ஒருவாரம் வரையில் எலுமிச்சம் பழங்கள் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியது. பொருட்களின் அடியில் முக்கோணவடிவில் 1 முதல் 7 வரை எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். 1 என்பது உபயோகித்த பின்னர் தூக்கி எறியப்பட வேண்டியவை. 7 என்பது உயர்தரமானது. நீடித்து உழைக்கக் கூடியது.
பதிவர் அறிமுகம்!
ஐயா முத்துநிலவன் அவர்கள் ஒரு பதிவில் நிறைய பதிவர்கள் சிறப்பாக எழுதினாலும் வெளியே தெரிவதில்லை! பிரபல பதிவர்கள் அவர்களை தங்கள் பதிவில் அறிமுகம் செய்துவைத்தால் நன்றாக இருக்கும் என்றார். நான் பிரபலம் இல்லைதான் இருந்தாலும் என்னை சிலர் தொடர்கிறார்கள். அவர்களுக்கு நான் தொடரும் ஓர் புதிய பதிவரை அறிமுகப்படுத்துவதுதான் இந்த பதிவு.
இந்த வாரம் ஊமைக் கனவுகள் விஜி.
தமிழாசிரியரான இவர் தமிழ்மேல் ஆர்வம் கொண்டு இலக்கணங்களை சொல்லிக் கொடுக்கிறார். அதோடு கணித புதிர்களையும் போடுகிறார். கவிதைகளும் அருமையாக எழுதுகிறார்.தற்போது வெண்பா எப்படி எழுத வேண்டும் என்று கற்றுத் தருகிறார். தமிழார்வம் உள்ளவர்கள் இவரது தளம் சென்று பதிவுகளை படித்தே தீரவேண்டும். அவ்வளவு சிறப்பாக எழுதுகின்றார். இதோ லிங்க்.யாப்பு சூக்குமம்
இவர்களை தெரிந்து கொள்ளுங்கள்!
தலைவராக வந்து கொள்ளையடிப்பவர்கள் மத்தியில் இப்படியும் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறார் ஓர் ஊராட்சித்தலைவர். லிங்கை சொடுக்கி விவரம் அறிக!

படிச்சதில் பிடிச்சது!
வெள்ளைக்காரன் ஆட்சியில் நிறுவப்பட்டதுதான் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி. அதில் அனைவரும் வெள்ளையரே பின்னாளில் இந்தியரும் சேர அனுமதித்தனர்.
அப்போது ஓர் மாணவன் கட்டுக்குடுமி, நெற்றிப்பட்டை விபூதியோடு வந்து சேர்ந்தான். அவன் பெயர் சூரிய நாராயணன். அட்டெண்ட்ஸ் எடுக்கும் ஆங்கில பேராசிரியருக்கு அவன் பெயரை உச்சரிக்க சிரமமாக இருந்தது. மாணவனிடம் பெயரை மாற்றிக்கொள்ள சொன்னபோது மறுத்தான். தாய் தந்தையர் வைத்த பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தான். விஷயம் பிரின்ஸ்பாலுக்குச் சென்றது. அவர் மாணவனை கூப்பிட்டு உன் பெயரை வேறுவிதமாக மாற்றிக்கொள் என்று உத்தரவிட்டு விட்டு கிளார்க்கிடம் இந்த மாணவன் சொல்லும் வேறு பெயரை அட்டெண்ட்ஸில் எழுதிவிடு என்றார்.
மறுநாள் அட்டெண்ட்ஸ் எடுத்தபோது மாணவன் பெயர் மாறித்தான் இருந்தது. ஆனால் பேராசிரியருக்கு மயக்கம் வந்துவிட்டது. ஏன்? சூரிய நாராயணன் என்ற பெயரை சூரிய நாராயண சாஸ்திரி என்று மாற்றியிருந்தார் மாணவர். பிரின்ஸிபாலாலும் பேராசிரியரால்ம் ஒன்றும் கூறமுடியவில்லை! அவர்கள் சொன்னபடி வேறு பெயரை மாற்றிக்கொண்டாகிவிட்டதே!
அப்படிப்பட்ட அந்த மாணவன் பிற்காலத்தில் தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டு தன் பெயரையே பரிதிமாற்கலைஞர் என்று தமிழில் மாற்றிக் கொண்டார்.
(பழைய புத்தகமொன்றில் படித்தது)