நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்!
வழிபாடு எத்தனையோ விதம்! நம்மை படைத்து ஆட்டுவிக்கும் இறைவனுக்கு விதவிதமாய் அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து நிவேதனங்கள் படைத்து ஆராதித்து மகிழ்வது தமிழர் பண்பாடு.
விதவிதமான மலர்கள், பட்டாடைகள், காய் கனிகள் என்று வகைவகையாக அலங்காரங்கள் செய்வதுண்டு. அதே போல படையலும் விதவிதமான அன்னங்களுடனும் பட்சணங்கள் பழங்களுடன் படைப்பது உண்டு.
அதில் வித்தியாசமான ஒன்றுதான்! படைக்கும் படையலில் ஆண்டவன் பிம்பத்தை காண்பது. சர்க்கரை பொங்கலை குளமாக்கி அதனுள் நெய்யை உருக்கி விட்டு அதில் சுவாமியின் பிம்பத்தை கண்டு வழிபடுவது ஓர் மரபு.
இதை அன்னப்பாவாடை, மஹா நைவேத்தியம், பள்ளயம், என்று பலவாறாக சொல்லுவர். பெயர் வேறு வேறாக இருந்தாலும் செயல் ஒன்றுதான். ஆண்டவன் தரிசனமும் அவனது கருணையும் பெறுவதுதான் நோக்கம்.
அன்னம் விஷேசமான ஒன்று. எத்தனைதான் பொருளும் பணமும் கொடுத்தாலும் மனம் நிறையாது. அன்னத்தை தானம் அளிக்கும் போது மனசு மட்டுமல்ல வயிறும் நிறைகிறது. அரிசி லிங்க வடிவில் அமைந்துள்ளது. அதை சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணும் போது சாதம் பிரசாதம் என்ற பெயர் பெறுகின்றது.
நம்மையும் உலகையும் படைத்து காக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் ஒரு சிறு நன்றியே படையல்! இறைவன் என்று சொல்லும் போது சிவனும் சக்தியும் சேர்ந்தே நினைவுக்கு வரும். உமையொரு பாகனான இறைவனை சேர்த்தே வழிபடுவது சிறப்பு.
அம்பிகைக்கு மிகவும் பிடித்த அன்னம் சர்க்கரை பொங்கல். குடான்ன ப்ரீத மானசாய நம : என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவில் வருகின்றது. அத்தகைய சர்க்கரை பொங்கலில் நெய்யை உருக்கிவிட்டு குளம் செய்து அதில் அம்பிகையின் உருவை காணும் போது மெய் உருகி நிற்போம்!
இத்தகைய நெய்க்குள தரிசனம் தமிழகத்தில் திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
வட தமிழகத்தில் பொன்னேரி அருகே அமைந்துள்ள ஸ்ரீ காரிய சித்தி கணபதி, ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயத்தில் நான்காவது வருடமாக இந்த முறை 26-1-2015 அன்று கும்பாபிஷேக மூன்றாவது வருட நிறைவையோட்டி காலையில் நவகலச பூஜை, விஷேச திரவிய ஹோமம், விஷேச திரவிய அபிஷேகம், பூர்ணாஹுதி நடைபெற்று கலச அபிஷேகம் நடைபெறும்.
அன்று மாலை ஆறு மணி அளவில், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு அன்னப்பாவாடை எனப்படும் மஹா நைவேத்தியம் படைக்கப்படும்.
இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிரன்னம், வடை, பாயசம், பலவகை கனிகள், பட்சணங்கள், இளநீர், பானகம் போன்றவை படைக்கப்படும்.
சர்க்கரை பொங்கலில் நெய்க்குளம் செய்து நெய் உருக்கி விடப்பட்டு அதில் அம்மனின் பிம்பம் தோன்றும்.
நெய்க்குளத்தில் அம்மனின் தரிசனம் காண்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி பாராயணம் செய்த பலனை நல்கும். இந்த நெய்க்குளத்தில் அம்மனை சர்வலங்கார பூஷிதையாக காணுகையில் நம் மெய் சிலிர்க்கும்.
ஆண்டுக்கு ஒரு முறையே இத்தகைய காட்சியை காண முடியும். இதனால் ஆலய சுற்றுவட்டார கிராம மக்களும் பக்தர்களும் திரளாக வந்திருந்து இந்த காட்சியை கண்டு அம்பிகையை வழிபட்டு மகிழ்வர்.
இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானது. பரிகாரஸ்தலம், திருமணத்தடை, ராகு-கேது- சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும்.
சென்னை- கும்முடிபூண்டி மார்க்கத்தில் பஞ்செட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து ஆட்டோ வசதிகள் இல்லை!
ஆலயம் காலை 7. மணி முதல் 12 மணிவரை மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
சிறப்பான இந்த நினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனத்தை கண்டு ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பிகையின் அருளினை பெற்றுய்யுவோமாக!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!