கதம்ப சோறு பகுதி 60
“ஜெய” லலிதா!
சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லா ஊகங்களையும் மீறி விடுதலை ஆகிவிட்டார் ஜெயலலிதா. அம்மா இந்தவழக்கில் விடுதலை ஆக யாகங்களும் பூஜைகளும் பரிகாரங்களும் செய்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் இனியாவது பணிக்குத் திரும்புவார்களா என்று தெரியவில்லை! நீதிபதி குமாரசாமி அவர்கள் ஜெ வருமானத்திற்கு அதிகமாக பத்து சதவிதத்திற்கும் குறைவாகவே சேர்த்திருக்கிறார். அதுவும் 8.13 சதவீதம் மட்டுமே எனவே குற்றவாளி இல்லை என்று ஒரு கணக்கை கொடுத்து இருக்கிறார். அந்த கணக்கே தவறு என்று திமுகவும், ஆச்சார்யாவும் இன்ன பிற எதிர்கட்சிகளும் முழக்கமிட்டு மேல் முறையீடு செய்யவேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளன. அப்பீல் செய்தாலும் கூட இப்போது ஜெ விடுதலை ஆகிவிட்டார். இதுவே மற்றைய கட்சிகளுக்கு கொஞ்சம் கிலிதான். இன்னும் ஒருவருடங்களே சட்டமன்ற தேர்தலுக்கு இருக்கும் நிலையில் ஜெ முதல்வரானால் ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆகவேண்டும். அதற்கு 23ம் தேதிக்குள் ஒருவர் ராஜினாமா செய்ய வேண்டுமாம். ஜெ ஊழல் செய்தார் என்பதை மறந்து அவர் எப்போது பதவி ஏற்பார்? யாரை பதவியிழக்கவைப்பார்? என்று தமிழ்நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. ஆக பத்து சதவீதத்திற்கு குறைவாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்ற புதிய நீதியும் வழங்கப் பட்டு இருக்கிறது. யார் திருடினான் என்பதல்ல கேள்வி? குறைந்த அளவு திருடியவன் யார்? என்பதே கேள்வி? இந்த மனோபாவத்திற்கு மக்களும் பழகிவிட்டார்கள்! மன்னன் எவ்வழி? மக்கள் அவ்வழி!
ஐந்தாண்டு ஜெயிலும் சல்மானும்!
பாலிவுட் ஹீரோ சல்மான் குடித்துவிட்டு சாலையில் படுத்திருந்த ஒருவரை கார் ஏற்றி சாகடித்துவிட்டு ஜாலியாக சினிமாக்களில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது அந்த வழக்கு முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. உடனே உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்து தீர்ப்பை நிறுத்தி வைத்ததோடு ஜாமீனையும் உடனே வழங்கிவிட்டது. இன்னும் பல ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் பல ஆண்டுகளாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் தண்டணைக் காலத்தைவிட அதிகம் கழித்துக் கொண்டிருக்க இவருக்கு இந்த சலுகை கிடைத்திருக்கிறது. பேரறிவாளன் பேட்டரி வாங்கி கொடுத்ததற்கே தூக்குத் தண்டணை! ஆளைக் கொன்றவருக்கு ஐந்துவருடம்! அதுவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஏதாவது பேசினால் நீதித்துறையை விமரிசிக்கக் கூடாது என்று சாட்டையடி! அடப் போங்கப்பா!
போலீஸ் விரட்டியதில் இளைஞன் மரணம்!
சென்னையில் குடிநீர் விற்கும் இளைஞனை போலீஸ் துரத்தியதில் செண்டர்மீடியன் கம்பி குத்தி இறந்து போயுள்ளார். மூன்று பேர்களாக பைக்கில் வந்த அவர்களை சிக்னலில் போலீஸ்காரர் துரத்தியுள்ளார்.லத்தியால் அடித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க வண்டியை ஓட்டியதில் செண்டர் மீடியன் கம்பி குத்தி அவர் இறந்துவிட்டார். உடன் வந்தவருக்கு காயம். பிணத்தை வாங்க மறுத்து போராட்டம் என நடந்து இறுதியில் சமாதானம் ஆகியுள்ளது. பிடிக்க வேண்டியவர்களை விட்டுவிடும் போலீஸ் இப்படி அஞ்சுக்கும் பத்துக்கும் அப்பாவிகளை துரத்துவது எதற்கு என்று புரியவில்லை!
பொதுப்பணித்துறையில் ஊழல்!
ஊழலுக்கு எதிராக திடீரென ஒப்பந்த தாரர்கள் கொடிபிடிக்க ஆரம்பித்து உள்ளனர்.சென்னையில் பொதுப்பணித்துறையில் ஒப்பந்தப்பணிக்கு லஞ்சம் கேட்ட ஊழியர்களின் பெயரை வெளியிட்டு ஓப்பந்த தாரர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து திருச்சியிலும் பெயர்களை வெளியிடப்போவதாக போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்துள்ளனர். கமிஷனுக்கு பெயர் போன பொதுப்பணித்துறையில் இதனால் ஊழியர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். லஞ்சமும் பொதுப்பணியும் பிரிக்க முடியாதது என்று சொல்லலாம். என்னதான் பட்டியல் வெளியிட்டாலும் ஊழியர்களை பகைத்துக் கொண்டு ஒப்பந்த தாரர்கள் பணி செய்யமுடியுமா என்பதும் சந்தேகம்தான். ஆனால் இவர்களிடையே நடக்கும் இந்த போராட்டம் சூடுபிடித்து உள்ளது.
கிச்சன் கார்னர்!
நட்ஸ் போளி
தேவையான பொருட்கள்: மைதாமாவு 1 கப், பாதாம் பருப்பு 15, முந்திரி 15 பிஸ்தா 15 அக்ரூட் பருப்பு- 15 பேரிச்சை பழம் விதை நீக்கியது சிறிது, உப்பு சிறிது, ஏலக்காய் தூள் 1 சிட்டிகை, நெய்- தேவையான அளவு, பால் பவுடர் 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் 1 கப், தேங்காய் துருவல், கால் கப்.
செய்முறை: மைதாவுடன் உப்பு ஏலக்காய்த் தூள் சேர்த்து நீர் விட்டு கெட்டியாக பிசையவும். அதில் நெய் தடவி 1 மணி நேரம் ஊறவிடவும். அனைத்து பருப்புக்களையும் பேரிச்சையுடன் 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவிடவும். ஊறியதும் பாதாம் பருப்பை தோல் நீக்கி மற்ற பருப்பு மற்றும் பேரிச்சையோடு வெல்லம் தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். போளிக்குள் வைக்கும் பூரணம் தயார் செய்ய இக்கலவையை அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் அடுப்பை குறைந்த தணலில் தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கி பால்பவுடர் சேர்க்கவும். நட்ஸ் ரிச் பூரணம் தயார்.
தோசைக் கல் சூடானதும் நெய் ஊற்றி போளியை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும். பூரணம் இளகினதாக தெரிந்தால் பால்பவுடர் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு தந்தவர், சென்னை, சுதா செல்வகுமார்.
டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
துணிகளில் அல்லது கையில் ஸ்கெட்ச் பேனா கறை படிந்துவிட்டதா? அசிட்டோன் எனப்படும் நகபாலிஷ் அழிக்கும் திரவம் கொண்டு கறையை சுத்தப்படுத்தலாம்.
மிதியடிக்கு அடியில் அதே சைஸில் பழைய நியுஸ் பேப்பர் போட்டு வைத்தால் மிதியடி அழுக்குகள் அந்த பேப்பரில் சேர்ந்துவிடும்.
வாழைப்பழம் கருக்காமல் இருக்க ஈரத்துணியால் சுற்றிவைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.
சிறிது டால்கம் பவுடரை ரப்பர் பேண்ட் வைத்திருக்கும் டப்பாவில் போட்டுவைத்தால் ரப்பர் பேண்ட் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
வீட்டின் மரச்சாமான்களுக்கு அடிக்கும் பெயிண்டினை முறத்திற்கு அடித்து காயவைத்து உபயோகித்தால் முறம் நீண்ட நாள் உழைக்கும். பூச்சிகள் அரிக்காது.
கிழங்குகள் சீக்கிரம் வேக பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து போகும்.
கார்பன் – டை – ஆக்ஸைடு அதிகரிப்பு:
பூமியின் காற்று மண்டலத்தில் கார்பன் – டை – ஆக்ஸைடு விகிதம் வரலாறு காணாதவகையில் அதிகரித்து உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் புயல், கடுமையான வெப்பம், வறட்சி போன்றவை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருக்கும் மவுனா லோவா என்ற கண்காணிகப்பகத்தில் எடுக்கப்பட்ட கார்பன் –டை –ஆக்ஸைடு அளவு 400 பி.பி, எம் ஆகும் இது மிகவும் அபாயகரமானது.இந்த ஆய்வகத்தில் எடுக்கப்படும் அளவைக் கொண்டுதான் பூமியின் ஒட்டு மொத்த காற்று மண்டலத்தின் அளவுகள் கணக்கிடப்படும். இந்த வகையில் இந்தியா காற்று மாசு பாட்டில் 178 நாடுகளில் 174வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக பெங்களூரு நகரம் காற்று மாசுபாடு அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெங்களூருவின் கார்பன் அளவு310 பி.பி.எம். சென்னை 179 பி.பி, எம். இந்த அளவு அதிகரிப்பு வெப்பத்தை அதிகப்படுத்தும் நிலப்பகுதியை மட்டுமில்லாமல் நீர்ப்பகுதிகளையும்பாதிக்கும். மோடி அரசு இந்த கார்பன் அளவை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளதாம்.
தள அறிமுகம்:
நிசப்தம் வா. மணிகண்டன்.
பெங்களூருவில் வசிக்கும் எழுத்தாளர் வா. மணிகண்டனின் தளம் நிசப்தம். தினமும் எழுதும் இவரின் எழுத்துக்கள் நம்மை வசிகரிக்கின்றன. எதை எழுதினாலும் அதை எல்லோருக்கும் புரியும் படியும் எளிமையாகவும் எழுதுவது இவரின் பாணி. பெரும்பாலும் சொந்த அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொடுக்கிறார். நிசப்தம் அறக்கட்டளைத் துவங்கி சப்தமில்லாமல் பலருக்கும் உதவிக் கொண்டு இருக்கின்றார். வளரும் பதிவர்கள் இவரது தளத்திற்கு சென்று வாசிப்பது தங்களை வளர்த்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும். இவரது தளத்திற்கான இணைப்பு இதோ நிசப்தம்
படிச்சதில் பிடிச்சது!
ஒருவர் இறந்ததும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருந்தார்கள். இரவில் மகன்களின் அறையில் சத்தம் அதிகமாக இருந்தது. மகள் கூர்ந்து கேட்டாள்.
தம்பி சொன்னான், “அண்ணா நீதான் மூத்தவன் எனவே இரண்டுலட்சத்தை நீயும் மீதி ஒரு லட்சத்தை நானும் எடுத்துக் கொள்கிறேன்”
அதற்கு அண்ணன் சொன்னான். “ இல்லையடா தம்பி! ஆளுக்குப் பாதி என்று ஒன்றரை லட்சத்தை சமமாக எடுத்துக் கொள்வோம்.” என்றான்.
இதைக்கேட்டதும் தங்கைக்கு பொறுக்கவில்லை. அப்பாவின் பணத்தை இருவர் மட்டுமே எடுத்து கொள்கிறார்களே என்று பதட்டத்தில் உடனடியாக அறைக்குள் நுழைந்தாள். “நானும் உங்க கூட பிறந்தவள்தானே! ஆளுக்கு ஒரு லட்சம் என பிரிக்க வேண்டும்” என்றாள்.
அதற்கு சகோதரர்கள், “நீ திருமணம் ஆகிப்போய்விட்டாய், உன் கணவன் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்… வேண்டாம்” என்றனர்.
“இல்லையில்லை சமமாகத்தான் பிரிக்கணும்!” அடம்பிடித்தாள் தங்கை.
உடனே அண்ணன் சொன்னான். “ சரி… அப்படியானால் ஆளுக்கு ஒரு லட்சம் என அப்பா வைத்துப் போன மூன்று லட்சம் கடனையும் சமமாக பிரித்துக் கொள்ளுவோம்!”
தங்கை மயக்கம் போட்டு விழுந்தாள்>
(தி இந்துவில் படித்தது)