அப்பாவுக்குத்தெரியாமல்!
சூரியன் மறையும் மாலை வேளை. அலுவலகத்திலிருந்து வந்தார் தெய்வநாயகம். அவர் உதடுகள் கோபத்தால் துடித்துக் கிடந்தன. “ ஏய் மங்களம்! எங்கேடி உன் புத்திர சிகாமணி? கூப்பிடுடி அவனை! ”என்று கத்தினார்.
அடுக்களையிலிருந்து அவர் மனைவி மங்களம் வெளிப்பட்டாள்.
“என்னங்க என்னாச்சு ஏன் இப்படி வந்ததும் வராததுமா கோபப்பட்டு குதிக்கிறீங்க? இந்தாங்க காபி குடிச்சிட்டு நிதானமா என்ன விஷயம்னு சொல்லுங்க! ” என்று காபியை நீட்டினாள்.
காபியை வாங்கி ஒரு துளி பருகிய வேத நாயகம் மீண்டும் கேட்டார். “எங்க அவன்?”
“ யாரைக் கேக்கறீங்க?”
“ அதான் நீ பெத்து வச்சிருக்கிறியேஅவனைத்தான் கேக்கறேன்.” என்றார் தெய்வநாயகம்.
”ஏன் அவன் உங்களுக்கு மட்டும் பிள்ளை இல்லையாக்கும் உங்க சத்புத்திரன் தானே அவன் ?”
“சரி சரி கேட்டதுக்கு பதில் சொல்லு?”
“ நம்ம நவீன் காலையில வெளியே போனவன் இன்னும் வரலைங்க?”

“ஐயையோ வேண்டாங்க அவன் நம்ம பையங்க! தப்பா எதுவும் செஞ்சிருக்க மாட்டான். உங்க கோபத்தை அவன்கிட்ட காட்டாம இதமா விசாரிங்க! “
“சரிசரி நீ போ நான் பார்த்துக்கறேன்”. வேதநாயகம்
சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்தான் நவின்.
“டேய் நில்லுடா எங்கே போய் ஊர் சுத்திட்டு வரே? நான் உங்கப்பா என்கிட்ட சொல்லாம ஊர் சுத்தினா எனக்குத் தெரியாம போயிடுமா? இன்னிக்கு தெரிஞ்சிடுச்சு பாத்தியா?”
“அ.. அப் அப்பா அ.. அது .. அது வந்து ...!”என்று இழுத்தான் நவீன்
“என்னடா திணறறே? ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லிடு!”
“அப்பா நான் எங்கேயும் ஊர் சுத்தலைப்பா!”
“பொய் சொல்லாதே நான் இன்னிக்கு உன்னை டவுன்ல பார்த்தேனே?”
“அ.. அது வந்து... ”
“சொல்லுடா! ”தெய்வநாயகம் மிரட்டினார்.
“அப்பா நான் ஒரு எலக்ட்ரிகல் கடையில வேலை செய்யறேம்பா முதலாளி கூட சாமான்கள் வாங்க வந்தப்பதான் நீங்க என்னை பார்தீங்க!” என்றான் நவீன்.
“என்னது வேலை பார்க்கறியா? ”தெய்வநாயகத்தின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
“ ஆமாப்பா! நான் ஒருமாசா லீவுல தற்காலிகமா வேலை செய்யறேன். வெளிநாட்டு மாணவர்கள் இந்த மாதிரி விடுமுறையில வேலை செஞ்சு அடுத்த வருட படிப்புக்கு பணம் சேர்க்கறதா ஒரு பத்திரிக்கையில படிச்சேன். நாமும் ஏன் அந்த மாதிரி செய்யக்கூடாதுன்னு தோணுச்சு. ஆனா உங்க கிட்ட சொன்னா ஒத்துக்கமாட்டிங்க நீ சம்பாதித்து ஒண்ணும் ஆகப் போறது இல்லன்னு சொல்லுவீங்க அதான் உங்க கிட்ட சொல்லாம வேலையில சேர்ந்துட்டேன்.விடுமுறையில வீணா பொழுது கழிக்கிறது எனக்குப் பிடிக்கலை! இப்ப பொழுதும் போகுது பணமும் கிடைக்குது தொழிலும் கத்துக்கறேன் இப்ப சொல்லுங்கப்பா நான் செஞ்சது தப்பா?” நவின் கேட்க அவனை வாரி தழுவிக்கொண்டார் தெய்வ நாயகம்.
“இல்லடா நவீன் நீ செஞ்சது தப்பே இல்லை. நாந்தான் உன்னை தப்பா புரிஞ்சிகிட்டேன். வெளிநாட்டுப் பொருள்கள் மேல மோகம் கொண்டு அலையும் நாம அவங்க கிட்ட இருக்க சில நல்ல பழக்கங்களை எடுத்துக்கிறதே இல்லை. ஆனா நீ அவங்க கிட்ட்யிருந்து ஒரு நல்ல பழக்கத்தை பயன் படுத்தியிருக்கே யூ ஆர் ரியலி கிரேட்!” என்று மகனை அணைத்தபடி சொன்னார் தெய்வநாயகம்.
“அவன் என் மகனாக்கும் என்று மகிழ்ச்சி பொங்க கூறினாள் மங்களம்.”
(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!