Quantcast
Channel: தளிர்
Viewing all 1537 articles
Browse latest View live

“விதி நீட்சி”

$
0
0

(மொழிபெயர்ப்புக் கதை) ஆங்கிலத்தில் எழுதியவர் ஏ.ஜி. கார்டினர்.

தமிழில் எனது மோசமான மொழிபெயர்ப்புக்கு மன்னிக்கவும்.


அது ஒரு கடுமையான குளிர்கால இரவு.  இங்கிலாந்தில் இதுபோன்ற குளிர்கால இரவுகள் சகஜம். அந்த பேருந்து காற்றைக் கத்திப்போல கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அது ஒரு மாடிப்பேருந்து. அதன் கீழ் தளத்தில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன். ஜன்னல் மூடியிருந்தாலும் ஆங்காங்கே திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக குளிர் என்னை ஊடுருவிக் கொண்டிருந்தது. அணிந்திருந்த குல்லா கையுறையை மீறிய அந்த குளிர் இரவில் பேருந்து ஓர் நிறுத்தத்தில் நின்றது. இரண்டு பெண்களும் ஓர் ஆணும் ஏறி காலியாக இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

    இரண்டு பெண்களில் இளையவள் கம்பளி ஆடை உடுத்தி இருந்தாள். அவள் கைகளில் பெக்கினிஸ் வகை நாய்க்குட்டி ஒன்று புசுபுசுவென்று சப்பை மூக்குடன் சின்னஞ்சிறு பாதங்களுடன் அமர்ந்திருந்தது. படிக்கட்டுக்கு பின் இருக்கையில் அவள் அமர்ந்து இருந்தாள்.

   வண்டியின் கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக் கொண்டே வந்தார். அந்த கம்பளி ஆடைப் பெண்ணைக் கோபத்துடன் நோக்கினார். அத்துடன் அவள் கையில் இருந்த நாய்க்குட்டியை  எரித்துவிடுவது போல பார்த்தார். நான் வம்பு ஆரம்பம் ஆவதை உணர்ந்தேன்.

   பொதுவாக இங்கு வளர்ப்புபிராணிகளுடன் பேருந்தில் ஏறுபவர் மேல்தளத்திற்கு சென்றுவிடவேண்டும். கீழ்தளத்தில் வளர்ப்பு பிராணிகளுக்கு அனுமதி கிடையாது. இதனால்தான் கண்டக்டர் முறைத்தார். அந்த கண்டக்டர் இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்துக்கிடந்தான் போல. பொதுவாகவே பயணிகளுக்கு நடத்துனருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். எந்த ஒரு நடத்துனரும் பயணியை கனிவாக நடத்தியது கிடையாது. தன் சீட்டில் அமர்ந்தவாறே டிக்கெட் கொடுப்பார். வாங்காத பயணிகளை அர்ச்சிப்பார். சில்லறை சரியாகக் கொடுக்க மாட்டார்.இதெல்லாம் வாடிக்கையான ஒன்று. இது  இங்கு மட்டும் அல்ல உலகம் முழுவதுமே இப்படித்தான் இயங்குகின்றதோ என்னவோ?

   அந்த கண்டக்டர் கோபமாக, நாய்களுக்கு கீழ் தளத்தில் அனுமதி இல்லை என்று தெரியாதா? இந்த பிராணியைத் தூக்கிக்கொண்டு மேலே செல்! என்று உத்தரவிட்டான். சட்டம் அதுதான். விதியும் அதுதான்.

  ஆனால் அந்தப் பெண் மறுத்தாள்.  “நான் கண்டிப்பாக மேலே போக மாட்டேன். கடுமையான பனி பெய்கிறது! குளிர் என்னை வாட்டிவிடும். நீ வேண்டுமானால் என் பெயரையும் முகவரியையும் வாங்கிக் கொள். உன் மேலதிகாரியிடம் புகார் செய்துகொள்!”

  அந்தப் பெண்ணின் இந்த சவாலான பதில் கண்டக்டரின் ஈகோவைத் தட்டி எழுப்பிவிட்டது.
  “ எனக்கு உன்பெயர் முகவரி தேவையில்லை! நீ இந்த பேருந்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமானால் மேல் அடுக்கிற்கு செல்ல வேண்டும்! இது என் ஆணை!” என்றான் கண்டிப்புடன்.
  “ பனி என்னைக் கொன்றுவிடும்!”  “கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள்!” அந்தப் பெண் இப்போது சற்று இறங்கி வந்தாள்.
 “உண்மைதான்! கடுமையான பனிபெய்கின்றது!” பக்கத்து இருக்கை  பெண்மணி சொன்னார்.
 கூட வந்த பெண்ணும் கூறினாள். “ உனக்கு சளியும் கடுமையான இருமலும் இருக்கின்றது!”
“உன்னை வெளியேற்றுவது பைத்தியக்காரத்தனமானது! உடன் வந்த ஆண் கூறினான்.

இத்தனை பேரும் அந்த பெண்மணிக்கு ஆதரவாக இருப்பது கண்டக்டருக்கு எரிச்சலைக் கிளப்பி இருக்க வேண்டும். அவன் விசிலை ஊதினான். பஸ் நிறுத்தப்பட்டுவிட்டது. கண்டக்டர் இப்போது கூறினான்.
  “ இந்த பெண் மேல் தளத்திற்கு செல்லும் வரை இந்த பஸ் கிளம்பாது!”
   இதைச் சொல்லிவிட்டு படிக்கட்டுகளில் இறங்கி நின்று கொண்டான். டிரைவருடன் பேச ஆரம்பித்துவிட்டான். இத்தனை பயணிகளைப் பற்றிய நினைவு அவனிடம் சிறிதும் இல்லை. அவன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். அவன் பக்கம் நியாயம் இருப்பதாக நினைத்துக் கொண்டான்.

பயணிகள் இப்போது முணுமுணுக்கத் தொடங்கினர்.   “வெட்கக்கேடு! போலீஸைக் கூப்பிடுங்கள்! உன்னைப்பற்றி புகார் செய்யப் போகிறோம்”

 “எங்கள் கட்டணங்களை திருப்பிக்கொடு!”
இப்படி ஆளுக்கு ஆள் பேசினார்கள். அந்த பெண்மணிக்கு ஆதரவாகவே குரல்கள் எழுந்தன.
  “ எங்களுக்கு டிஸ்டர்பா இருந்தாத்தானே உனக்கு சங்கடம்! நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்! வண்டியை எடுக்கச் சொல்!”

 “இராத்திரி பொழுது! இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம்!”

  அவன் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை! இப்போது ஓர் பயணி ஆவேசத்துடன் கண்டக்டரை நோக்கி உன் நம்பர் என்ன? என்றார்.
  அவனும் தன் அடையாள அட்டையை கோபமுடன் நீட்டினான். இந்தா! இதுதான் என் அடையாள அட்டை வேண்டுமானால் மேலதிகாரியிடம் புகார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த பஸ்ஸின் விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு பயணம் செய்கின்றீர்கள். உங்கள் கட்டணம் திருப்பித் தர முடியாதது! என்றான் கெத்தாக.


  இருள் கவிழ்ந்த அந்த பனிப்பொழுது! அருகில் வீடு உள்ள இரண்டு மூன்று பயணிகள் முணுமுணுத்தபடி இறங்கி இருளில் மறைந்தனர். கண்டக்டர் எதையும் லட்சியம் செய்யாமல் டிரைவரிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

  அந்த பக்கம் செல்லும் கடைசிப் பேருந்து அவ்வழியே வந்து நின்றது. பயணிகள் கூச்சலிட்டனர். ஏம்பா! லாஸ்ட் பஸ்ஸும் வந்துருச்சு! அதிலேயாவது மாற்றிவிடு. அதற்கும் கண்டக்டர் அசைந்து கொடுக்கவில்லை.
 
 சிலர் கோபத்துடன் வண்டியின் பெல்லை அடித்து கிளம்புப்பா! என்றனர்.
   டிரைவர் கோபத்துடன்  “நீங்க யாரு என்னை கிளம்ப சொல்ல! கண்டக்டர் சொல்லட்டும் வண்டியை எடுக்கிறேன்! யாருப்பா அது பெல் அடிச்சது! நீ என்ன கண்டக்டரா? உன் பேரைச் சொல்லு!” என்று கேட்க, அந்த பயணி பம்மினார். டிரைவர் தன் இருக்கையில் அமர்ந்து சோம்பல் முறித்தார். நேரம் கடந்து கொண்டிருந்தது.

  அந்தவழியாக ரோந்து வந்த போலீஸ்காரர்கள் இருவர் நின்று கொண்டிருக்கும் பேருந்தை கவனித்துவிட்டு வந்து விசாரித்தார்கள். கண்டக்டர் அவர்களிடம் நடந்ததைச் சொல்ல “ நீ உன் கடமையை ஒழுங்காத்தான் செய்யறே! என்று பாராட்டிவிட்டு அந்த பெண்மணியிடம் உன் பெயரையும் முகவரியையும் தா! என்றார்கள்.

   அட்ரஸ் வாங்கிட்டு கிளப்பிட்டு போய்யா! நேரமாச்சு! என்றார்கள். ஆனால் கண்டக்டர் நான் விதி மீற மாட்டேன்! இந்த பெண் மேல் தளம் சென்றால்தான் வண்டியை எடுப்பேன் என்றான். சரி நீ உன் வேலையைப்பார்! நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்! அவர்கள் சொல்லிவிட்டு அடுத்த கேஸை பார்க்க சென்றுவிட்டார்கள்.

  கார் விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த பெக்கினிஸ் நாயின் கண்களை மூடிமூடித் திறந்தது. கண்டக்டர் பஸ்ஸினுள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். பஸ்ஸில் இருந்த ஒவ்வொருவராக இறங்கி நடக்கத்தொடங்கினர். பாதி இருக்கைகள் காலியாகி இருந்தது.

  இப்போது கண்டக்டரிடம் நம்பர் கேட்ட இளைஞன் தணிந்த குரலில் கேட்டான், “ அப்படியானால் நாங்கள் இரவு முழுக்க இங்கேயேதான் இருக்க வேண்டுமா?”
 
    “ அது அந்த பெண்மணியின் முடிவில்தான் இருக்கிறது!” என்றான் கண்டக்டர்.


  ஏறக்குறைய ஒரு மணிநேர டிராமா முடிவுக்கு வந்தது. முடிவில் அந்தப் பெண் நான் மேலே செல்கின்றேன். என்று படிகளில் ஏறினாள். தான் வென்றுவிட்ட மகிழ்ச்சியில் கண்டக்டர் விசில் ஊத பஸ் கிளம்பியது.

சிறிது தூரம் சென்றிருக்கும். மீண்டும் பஸ் நின்றது. “இப்போ என்ன ஆச்சு?”
 நீண்ட நேரம் பனிக்குளிரில் நின்றிருந்ததில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுவிட்டதாக டிரைவர் சொன்னர். கண்டக்டரும் அவரும் சேர்ந்து அதை சரி செய்து கொண்டிருந்தனர். குளிர் மிக அதிகமாக இருந்தது.
   இப்போது மேலே சென்ற பெண் சத்தம் போடாமல்  கீழ்தளத்திற்கு வந்து கடைசி சீட்டில் அமர்ந்து கொண்டாள். உடல் முழுவதும் போர்த்தி இருந்தாள். பனி அவளை பாதித்துஇருந்தது.  எஞ்சின் பழுது நீக்கப்பட்டு பஸ் கிளம்பியது.

சில நிமிடத்தில் மங்கிய விளக்கொளியிலும் நாயின் பளபளக்கும் கண்களை கண்டக்டர் பார்த்துவிட்டான். விசிலை ஊதினான்.
  டிரைவர் எரிச்சலுடன் வண்டியை நிறுத்தி, என்ன ஆச்சு? என்றான்.
கண்டக்டர் அந்த பெண்ணைச் சுட்டினான்.

மீண்டும் விவாதம் தொடங்கியது.
“ ஏம்மா சொன்னா கேக்க மாட்டியா? மேலே போம்மா!” டிரைவர் கோபமாக சொல்ல
 பனிக்காற்று மிகவும் அதிகமாக இருக்கிறது என்னால் மேலே அமரமுடியவில்லை! கொஞ்சம் அனுமதி தாருங்கள்!” என்று அந்தப் பெண்மணி கேட்டாள்.

 “அப்படியானால் வண்டியில் இருந்து இறங்கிக் கொள்! இல்லை உன் வளர்ப்பு பிராணியை இறக்கிவிடு!” கண்டக்டரின் பதில் எல்லோருக்கும் எரிச்சலைத் தந்தது.

ஒரு நீண்ட விவாதத்திற்கு பின் அந்த பெண் மீண்டும் தன் பிராணியுடன் மேல் தளத்திற்கு சென்றாள்.
பஸ் கிளம்பியது. அவள் நிறுத்தம் வந்தபோது அவள் இறங்குகையில் பனியால் மிகவும் பாதிக்கப்பட்டதை உணர முடிந்தது.

கடைசி நிறுத்தம் வந்தது. நான் மட்டுமே எஞ்சி இருந்தேன். கடைசி பயணியான என்னிடம் கண்டக்டர் வந்து நின்றான். அவனிடம் வெற்றிக் களை தாண்டவம் ஆடியது. ஏறக்குறைய இரண்டு மணி நேர தாமதம் பற்றி அவன் உணரவில்லை.


என்னிடம் பெருமிதமாக தான் தன் கடமையைச் செய்ததாகக் கூறினான்.
நான் புன்னகைத்தேன்!
கண்டக்டர் சார்! நான் சொல்வதை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்! சட்டங்களும் விதிமுறைகளும் மனிதர்களுக்கு அவசியமானவைதான்! ஒழுக்கம் தவறினால் கேடுதான்.ஆகவேதான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. விதிகள் வகுக்கப் படுகின்றன. ஆனால் அவற்றில் இரண்டுவகை உண்டு. ஒன்று கட்டாயமாக கடைபிடிக்க வேண்டியது. மற்றவை விதிவிலக்குகள்.

உதாரணமாக நாம் வலக்கையால்தான் உணவு சாப்பிட வேண்டும். இது விதி. வலக்கையில் அடிபட்டு இருந்தால் இடக்கையால் ஸ்பூன் மூலம் சாப்பிடவில்லையா? இது விதிவிலக்கு. சாலைவிதிகளை மதிக்க வேண்டும். விதியை விலக்கினால் விபத்து ஏற்படும். இதை கட்டாயமாக மதிக்க வேண்டும். அதே சமயம் நீங்கள் யூனிபார்ம் அணிய வேண்டும். விதி! அது திடீரென்று கிழிந்துவிடுகின்றது. இப்போது நார்மல் உடையில் பணி செய்வது தவறில்லை! இதை புரிந்து கொள்ள வேண்டும்.
சிலவிதிகளும் சட்டங்களும் நம்மை வழிகாட்டத்தான் உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த விலங்குகள் பற்றிய விதியும்.

மனிதர்களின் மனோபாவத்தை பொறுத்தது எழுதப்படாத விதிகள். இதை நாம் தளர்த்திக் கொள்ளலாம். உடன் பயணிக்கும் பயணியின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை இது. இந்த விதிகள் அவர்களை பாதிப்பதாக அமைந்துவிடக் கூடாது. நீ உன்னுடைய சட்டங்கள் விதிகளுடன் கொஞ்சம் மனிதாபிமானத்தையும் நல்ல எண்ணத்தையும் கலந்து கொள்ள வேண்டும். உன் சுபாவத்தை மாற்றிக் கொண்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

  இன்று நீ விதியை கடைபிடிக்கிறேன் என்று சொல்லி பயணிகளின் நேரத்தை வீணாக்கினாய்! இரண்டுமணி நேரம் தாமதம் மேலும் எத்தனை பேர் வழியில் சிரமத்துடன் இறங்கினர். இந்த தருணத்தில் இதை நீ யோசித்தால் எது விதி என்பது உனக்கு நன்றாக புரிந்திருக்கும். அடுத்த முறை உன்னை சந்திக்கையில் மாற்றத்தை எதிர்பார்க்கிறேன் என்றேன் புன்னகையுடன்.

  கண்டக்டர் தன் தவறை உணர்ந்திருப்பான் போல. நான் பஸ்ஸை விட்டு இறங்கியதும் புன்னகையுடன் குட்நைட்! என்றான்.

(ஏ.ஜி கார்டினர் எழுதிய இந்த கதை பழைய பதினொன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் படித்தது. இதை நடத்திய எங்கள் ஆங்கில ஆசிரியர் அப்படியே கண்டக்டர்- பயணிகளை நடித்துக்காட்டியது என் கண் முன்னே நிற்கிறது. அதை நினைவில் கொண்டு என் கையெழுத்துபத்திரிக்கையில் எழுதி இருந்தேன். இப்போது அதில் சிறு மாற்றங்கள் செய்து பதிவிடுகின்றேன். உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


   

சுஷ்மாவின் மனிதாபிமானமும் ஓட்டைக்காசும்! கதம்பசோறு பகுதி 61

$
0
0
கதம்பசோறு பகுதி 61

ஏறக்குறைய ஒரு மாதங்கள் ஆகிவிட்டது இந்த பகுதி எழுதி, இதற்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்வுகள், வலைதளத்தில் தொடர்ந்து எழுதுவதில் எனக்கும் சில சிக்கல்கள், இதையெல்லாம் மீறி எழுத வேண்டும் என்ற ஆவல் தொடர்ந்து இயங்க வைக்கிறது. இதோ இந்த மாதத்தின் முதல் கதம்ப சோறு.

சுஷ்மாவின் மனிதாபிமானம்!

  லலித்மோடி! ஐ.பி.எல் மோசடிகளில் சிக்கியவர். இவருக்கு மனிதாபிமான அடிப்படையில் போர்ச்சுகல் செல்ல உதவி செய்துள்ளார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா. மோடியின் மனைவிக்கு உடல்நலக் குறைவாம். உடனே மனிதாபிமானத்துடன் அனுப்பி வைத்தாராம்! இந்த மனிதாபிமானம் மற்றவர்களுக்கு எல்லாம் எங்கே போனது. தவறு இழைத்தவர்கள் எல்லோருக்கும் இப்படி மனிதாபிமானம் பார்த்தால் அப்புறம் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று புதியதாக ஆராய வேண்டியதுதான். ஒரு குற்றவாளிக்கு உதவி விட்டு மனிதாபிமான அடிப்படைதான் என்று சொல்லி சுலபமாகத் தப்பித்துவிட பார்க்கிறார் சுஷ்மா. இதெல்லாம் சும்மாத்தான் செய்திருப்பார் என்று நம்பத்தோன்றவில்லை. இதைத் தட்டிக்கேட்க வலுவில்லாத எதிர்கட்சிகள் அதுவும் ஊழலில் ஊறிய கட்சிகள் இருப்பதுதான் நம் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு.

 ஆம் ஆத்மி- மத்திய அரசு மோதல்!

      ஆம்-ஆத்மி கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நடக்கும் அதிகாரப் போரில் ஏறக்குறைய மத்திய அரசு வென்றுவிட்ட நிலையில் உள்ளது.ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலை உருவாக்கி அதை ஒன்றுமில்லாமல் செய்துவிட துடிக்கின்றது பா.ஜ.க. டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்பதைவிட நம்மை மீறி எப்படி இந்த கட்சி ஆட்சியைபிடித்துவிட்டது? அதை என்ன செய்யப்போகிறேன் பார்! என்ற கோபமே இந்த மோதலில் பெரிதாகத் தெரிகின்றது. இதனால் எந்த திட்டங்களும் நிறைவேறாமல் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்து வெளியேறும் நிலைக்கு ஆம் ஆத்மி கட்சியை கொண்டுவர பா.ஜ.க முயல்கின்றது. ஆம்-ஆத்மியிலும் நிறைய உட்கட்சி பூசல்கள். ஊழலுக்கு எதிரான இயக்கமான அதிலேயே ஏகப்பட்ட ஊழல் புகார்கள். பாவம் கெஜ்ரிவால். அவர் கட்சியைக் காப்பாற்றுவாரா? இல்லை ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வாரா? ஒன்றும் செய்ய முடியாமல் அறிக்கை போர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஹெல்மெட் கட்டாயம்!

   ஜூலை ஒன்னாம் தேதிமுதல் தமிழகத்தில் இருசக்கர ஓட்டிகளுக்கு தலைக்கவசம் கட்டாயமாக்க படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தகவலை தமிழக அரசு வெளியிட்டு கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வாகன ஓட்டிகளை வலியுறுத்தவேண்டும். மீறுபவர்களின் லைசென்ஸ் பறிமுதல் செய்யவேண்டும் என்றுஅறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவு வந்து ஒருவாரகாலம் ஆகியும் அரசு இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. ஹெல்மெட் இல்லா பயணம் ஆபத்தானதுதான். அதே சமயம் ஹெல்மெட் முழு பாதுகாப்பு என்றும் சொல்லமுடியாது.  ஹெல்மெட் விஷயத்தில் இவ்வளவு தீவிரம் காட்டும் உயர்நீதிமன்றம் மது விஷயத்திலும் தீவிரம் காட்டினால் நன்றாக இருக்கும். ஹெல்மெட் போடாமல் சென்று உயிரிழப்பவரைவிட குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பவர்கள் அதிகம். இன்று குடியால் உயிர் இழப்பவர்கள் அதிகம். இதுவும் தீங்கான ஒன்றுதானே! இந்தவிஷயத்திலும் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிடுமா தெரியவில்லை! அதே சமயத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிச்சிறுவன் ஒருவர் ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு லட்டு கொடுத்து வாழ்த்து சொன்ன சம்பவம் நெகிழ்ச்சி அளித்த ஒன்று.

நடிகர்சங்க மோதல்!

    நடிகர் சங்க மோதல் வலுத்துள்ள நிலையில் குமரிமுத்துவை நீக்கியது செல்லாது என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக விஷால் அணிக்கும், சரத்குமார் அணிக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டு குமரிமுத்துவை சங்கத்தைவிட்டு விலக்கினர். இது செல்லாது என்று கோர்ட் அறிவித்த நிலையில் போராட்டம் தொடரும் என்று விஷால் கூறியுள்ளார். எத்தனையோ நலிவடைந்த நடிகர்கள் நடிகைகள் உள்ளனர். இந்த சங்கம் அவர்களுக்கு உருப்படியாக என்ன செய்தது என்று தெரியவில்லை. சங்கத்திற்கென கட்டிடம் கட்டிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்றும் தெரியாது. உருப்படியாக எதையும் செய்யாமல் யார் பதவிக்கு வருவது என்பது போன்ற தோற்றத்தில் இந்த சண்டை நடக்கின்றது. இதை மீடியாக்களும் பெரிதாக வெளியிட்டு வருகின்றன. இதனால் எல்லாம் எந்த நடிகருக்கோ அல்லது மக்களுக்கு பெரிதாக எந்த உபயோகமும் கிடையாது.

கிச்சன் கார்னர்:

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

தேவையானவை: பிஞ்சு கத்தரிக்காய் 1/4கிலோ, புளி, எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு தேவையான அளவு. தேவைக்கு பெங்களூர் தக்காளி 2, கடுகு கறிவேப்பிலை- தாளிக்க உரித்த சின்ன வெங்காயம் 15
அரைக்க: தேங்காய் ½ மூடி துறுவியது, காய்ந்த மிளகாய்-5 சீரகம் 1 டீஸ்பூன், வெந்தயம் ½ டீஸ்பூன் மல்லித்தூள் 2 டீஸ்பூன்.
செய்முறை: கத்தரிக்காயை காம்பை நீக்கி நீளவாக்கில் நான்காக முக்கால் காய்வரை நறுக்கிக் கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை 2 கரண்டி எண்ணெய்விட்டு வறுத்து ஆறியதும் இரண்டு பெங்களூர் தக்காளி சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய்விட்டு கத்தரிக்காயை நன்கு வதக்கி எடுக்கவும். கடுகு கறிவேப்பிலை தாளித்து அத்துடன் சின்ன வெங்காயத்தை வதக்கவும். பிறகு புளிக்கரைசல்,கத்தரிக்காய், அரைத்த விழுது  கலந்து சிறிது கெட்டியாகும்வரை கொதிக்கவிடவும். தேவைப்படுவோர் நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிடுகையில் சுவை அள்ளும்.
  எழுதியவர்: எஸ். கலைவாணி கோவை.

டிப்ஸ்!டிப்ஸ்!டிப்ஸ்!

வெளியூர் செல்லும் பொழுது தோசை ஊத்தப்பம் போன்றவை எடுத்து செல்வதாக இருந்தால் இலேசாக தண்ணீரைத் தடவி பிறகு பேக் செய்தால் வறண்டுபோகாமல் மிருதுவாக இருக்கும்.

வெண்டைக்காயை வதக்கும்போது உடைந்துவிடாமல் இருக்க இரண்டு துளிகள் எலுமிச்சம் சாறு விட்டால் வெண்டைக்காய் துண்டுகள் உடைந்துவிடாமல் இருக்கும்.

மழைக்காலத்தில் ஜன்னல்கதவுகள் சட்டத்தோடு ஒட்டி உறவாடி திறக்க மறுக்கும். கோலமாவை உப்புத்தூளுடன் ஜன்னல் விளிம்புகளில் தூவினால் சட்டம் ஜன்னலுடன் உறவாட மறுத்து பிரிந்துவிடும்.

பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத சமயத்தில் மூடி வைக்கக் கூடாது.

தீராத முதுகுவலிக்கு திராட்சை சிறந்த நிவாரணி ஆகும். தினமும் ஒரு கப் திராட்சைப்பழம் சாப்பிட்டுவந்தால் முதுகு நரம்புகளை தளர்த்தி ரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை வெகுவாக குறைக்கும்
.
ப்ளாஸ்க் அழுக்கடைந்து காணப்படுகிறதா? வெந்நீரில் சிறிது உப்பைக் கரைத்து அதை ப்ளாஸ்கில் ஊற்றி அரைமணிநேரம் ஊறவிடவும். பிறகு வேறு நீரில் கழுவினால் ப்ளாஸ்க் பளிச்சிடும்.

பதிவர் அறிமுகம்:

  எஸ்.பி. செந்தில் குமார். வலைத்தளம்: கூட்டாஞ்சோறு

எஸ்.பி செந்தில்குமார் என்ற பெயரை நீங்கள் பத்திரிக்கைகளில் பார்த்து இருக்கலாம். செய்தியாளரான இவர் கடல் பயணங்கள் சுரேஷ்குமார் அவர்களின் நண்பர். கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் தான் பத்திரிக்கைகளில் எழுதியதை பகிர்ந்து கொள்கின்றார். அனைத்தும் அருமையான கட்டுரைகள். தகவல்கள்.  ஏவி.எம் ஸ்டிடியோ குறித்து இவர் எழுதிய கட்டுரை வியக்க வைக்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை ஏன் குறிவைக்கிறது என்று அலசி ஆராய்ந்துள்ளார் ஓர் பதிவில் தன்னுடைய முதல் பதிவு என்று இவர் சொல்வது முத்தான பதிவு. இவரின் தளம் சென்று வாசிக்க வேண்டியது ஊக்கப்படுத்த வேண்டியது ஒவ்வொரு பதிவரின் கடமையும் கூட சிறந்த தளம் சென்று சிறப்பிப்போம்! இதோ இவரின் நூறாவது பதிவு படித்துப்பாருங்கள்! கூட்டாஞ்சோறு

இவர்களைத்தெரிந்துகொள்வோம்!
பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்.

தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும்.
விரிவான தகவல்களுக்கு சொடுக்குக: பிழையின்றி தமிழ் எழுத

படிச்சதில் பிடிச்சது:

அவன் ஒரு ஏழை. தன்னோட மிக குறைந்த வருமானத்தில்தான் வாழ்க்கை நடத்திவந்தான். ஆனால் நல்ல உழைப்பாளி.ஒருநாள் தெருவில் பழங்காலக் காசு ஒன்னு அவனுக்கு கிடைச்சது. அந்த காசின் நடுவில் ஓட்டை  இருந்தது.. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம்னு ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால் அதிர்ஷ்டம் என்னைத் தேடிவரும். நானும் பணக்காரன் ஆகிவிடுவேன்னு அவன் நினைச்சான்.
  அந்தக் காசை பத்திரமா தன் கோட்டுப்பையில் போட்டுக்கிட்டான். அன்னைக்கு அவனுக்கு மத்த நாளைவிட அதிக வருமானம் கிடைச்சது. எல்லாம் காசு கிடைச்ச நேரம்னு நினைச்சான். அன்னையிலிருந்து அவன் தினமும் கோட்டுப்பையில் இருக்கும் காசை தொட்டுப்பார்த்துக்குவான். ஆனா காசை வெளியே எடுக்க மாட்டான்.

 சிலவருஷங்கள்ல அவனுக்கு பணம், பதவின்னு அனைத்தும் வந்து சேர்ந்துருச்சு. பலவருஷங்கள் ஆகிப்போச்சு. ஒருநாள் அவன் தன் மனைவிகிட்ட அந்த காசை பார்க்கணும் போல இருக்குதுன்னு சொல்லிட்டு கோட்டுப்பையில் கைவிட்டு காசை எடுத்தான். அவனுக்கு அதிர்ச்சி! காரணம் அந்த காசில் ஓட்டை இல்லை. 
 என்ன ஆயிற்று! என்று குழப்பத்துடன் முழிச்சவன் மனைவிகிட்டே கேட்டான். அதுக்கு மனைவி “ என்னை மன்னிச்சிருங்க! உங்கள் கோட்டு தூசியா இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்து தெறிச்சு ஓடிருச்சு எவ்வளவோ தேடியும் கிடைக்கலை! நான் தான் வேறக் காசைப் போட்டு வச்சேன்னு சொல்லி முடிச்சா.

 இது எப்போ நடந்தது? என்றான் புருஷன். அந்தக் காசு கிடைச்ச மறுநாளேன்னு சொன்னா மனைவி. அவன் அமைதியா சிந்திச்சான்
உண்மையில் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தது அந்த காசு இல்லை. நம்முடைய தன்னம்பிக்கையும் உழைப்பும் தான்னு உடனே புரிஞ்சிகிட்டான். உடனே முன்னைவிட உற்சாகத்துடன் உழைக்க ஆரம்பித்தான்.

(பாக்யாவில் படிச்சது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 38

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 38


1.   தலைவர் ஊழல் வழக்குல மாட்டிக்கிட்டப்ப வருத்தப்படறேன்! வெட்கப்படறேன்னு! சொன்னாராமே திருந்திட்டாரா?
நீ வேற! எல்லோரும்  கோடிக்கணக்குல ஊழல்பண்ணி மாட்டிக்கிட்டாங்க நாம லட்சக்கணக்குலேயே மாட்டிக்கிட்டமேன்னுதான் அப்படிச் சொன்னாரு!

2.   கல்யாணப் பொண்ணோட கழுத்திலே எதுக்கு பெரிய போல்டு ஒண்ணை கட்டி விட்டிருக்கீங்க? புது பேஷனா?
நீங்கதானே நகை நட்டு போட்டு அனுப்புங்கன்னு சொன்னீங்க!

3.   மண்ணின் மைந்தன்னு சொல்லி ஓட்டுக் கேட்டாரே தலைவர் ஜெயிச்சு வந்தாரா?
மண்ணைக் கவ்வ வைச்சுட்டாங்க!

4.   ஆபிஸுக்கு லேட்டா வர்றது எங்க மேனேஜருக்கு பிடிக்காது!
அதுக்காக பத்தரைமணிக்கு ஆபிஸுக்கு வந்துட்டு வால்கிளாக்கை பத்துமணியா அட்ஜஸ்ட் பண்ணி வைச்சுட்டு போறதெல்லாம் ரொம்ப ஓவர்!


5.   மந்திரியாரே! நால்வகை சேனைகளும் போருக்குத் தயாராகிவிட்டனவா?
பேருக்குத் தான் தயாராகி உள்ளன மன்னா!

6.   காலையில் துன்பம் துரத்திவரும்னு ராசிபலன்ல படிச்சது சரியா நடந்துருச்சா எப்படி?
இன்னைக்கி நானே சமைக்கிறேன்னு மனைவி கிளம்பிட்டா!

7.   மனைவிகிட்ட அடிவாங்காம இருக்கிறதுக்கு பூரிக்கட்டையை ஒளிச்சு வைச்சது தப்பா போச்சு!
ஏன்?
பூரிக்கல்லாலே அடிக்க ஆரம்பிச்சிட்டா!

8.   குரங்கு ஜுரம்னு சொல்லி பையனை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணீங்களே எப்படி இருக்கு?
அடுத்த பேஷண்ட்கிட்ட தாவிருச்சு!

9.   டாக்டரை பார்க்கிறதுக்கு முன்னாடியே எல்லா பேஷண்ட்டும் அழுதுகிட்டே இருக்காங்களா? ஏன்?
வெயிட்டிங் ரூம்ல டீவி சீரியல் பார்த்துக்கிட்டு இருக்காங்களே!


10.எதிரியை பிடிக்காமல் கோட்டை விட்டுவிட்டார்கள் மன்னா!
அப்படியானால் நம் கோட்டையையும் வெகு சீக்கிரத்தில் விட்டுவிட வேண்டியதுதான்!

11. தலைவர் சட்டத்தை வளைச்சி வெளியே வந்தவர்னு சொல்றீங்களே அவ்வளவு சட்டம் தெரிஞ்சவரா?
  நீங்க வேற! இரும்பு ஜன்னல் சட்டத்தை வளைச்சி வெளியே வந்தவருன்னு சொல்ல வந்தேன்!

12. சதா பேசிக்கிட்டே இருந்த மாமியாருக்கு அல்வா கொடுத்திட்டியாமே எப்படி?
ஒரு கிலோ அல்வா கிளறிவாயிலே திணிச்சிட்டேன்! இப்ப வாயையே திறக்க முடியலை இல்லை!

13.டாக்டர் என்னோட ஜாதகத்துல எனக்கு எழுபத்து மூணு வயசுன்னு போட்டிருக்கு!
அதை தீர்மானிக்க வேண்டியது நானாச்சே! எப்படி போடுவாங்க!

14. என்னோட கல்யாணத்துக்கு ஓத்து வரமாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்!
  அப்புறம்?
ஒத்து ஊதறவர் இல்லாமலே நாயனத்தோட கல்யாணம் நடந்துருச்சு!

15. திருஷ்டிபூசணிக்காயை சுத்தி ஒடைச்சாங்களே! திருஷ்டி எல்லாம் உடைஞ்சி போச்சா?
  தெருவுல வண்டியிலே போன ரெண்டு பேரோட கால்தான் உடைஞ்சி போச்சு!

16. எவ்ளோதான் முயற்சி பண்ணாலும் பதினோறு மணிக்கு மேல தூக்கம் வர மாட்டேங்குது டாக்டர்!
படுக்கிற இடத்தை மாத்தி பாருங்களேன்!
ஆபிஸ்ல சீட்டை எல்லாம் மாத்த முடியாது டாக்டர்!

17.தலைவருக்கு கிறுக்கு முத்திப்போச்சு!
  எப்படிச் சொல்றே?
நான்கூட மக்களுக்கு சேவை செய்யறேன்! எனக்கும் சேவைவரி கட்டுங்கன்னு சொல்றார்!

18.ஊர்ப்பணத்தை எல்லாம் பெட்டியிலே போட்டு வச்சிருக்கேன்னு சொல்றாரே யார் அவர்?
சினிமா தயாரிப்பாளர்தான்!

19.மாப்பிள்ளை வெளிநாட்டுல இருக்கலாம்! அதுக்காக இப்படியா?
ஏன் என்ன ஆச்சு?
வீடியோ கான்பரன்சிங்க்ல தாலி கட்டறேன்னு சொல்றாரு!

20.வேலைக்காரி வரும்போது தூரமா எழுந்து போயிடறீங்களே ஏன்?
நீதானே சொன்ன வேலைக்காரிக்கிட்டே டிஸ்டர்ன்ஸ் மெயிண்டெயின் பண்ணனும்னு!

21.நம்ம கல்யாண நாளை நீங்க எப்படி மறப்பீங்க?!
நீதானே வாழ்க்கையிலே வர்ற துன்பங்களை கெட்ட கனவா நினைச்சு மறந்துடனும்னு சொன்னே!

22.உங்க கதைகளை படிக்கும்போதே சொக்கிப் போயிடறேன்னு சொல்றீங்களே அவ்ளோ உயிரோட்டமாவா இருக்குது!
  நீங்க வேற தூக்கம் சொக்கிட்டு வருதுன்னு சொல்றேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


மந்திர பொம்மை! பாப்பா மலர்!

$
0
0

 

மந்திரபொம்மை!

சோலைவனம் என்ற அழகிய கிராமத்தில் ரவி என்னும் இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த அவன் மிகுந்த உழைப்பாளி. அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து அந்த வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தான். அதில் சிறிது தொகையை தானமும் செய்து வந்தான்.

  ஊரில் உள்ளோர் நீ என்னப்பா ஒண்டிக் கட்டை அதான் தாராளமா தர்மம் பண்றே எங்களாலே முடியுமா? என்று அவனை குத்திக் காட்டுவர். எனினும் அவன் தன் தர்மங்களை விடவில்லை. அவனது தருமச் செயல்களை கேள்விப்பட்ட துறவி ஒருவர் அவனுக்கு உதவ நினைத்தார்.

   அந்த துறவிக்கு மந்திரவித்தைகள் தெரியும் அவரிடம் ஒரு மந்திர பொம்மையும் இருந்தது. அந்த துறவி சோலைவனம் வந்தடைந்தார்.அங்கிருந்த ஒரு மரத்தடியில் தங்கினார். ஊர் மக்கள் அனைவரும் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர். ஆனால் ரவி மட்டும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தான். என்னடா இது இவனை பெரிய தர்மவான் என்று கூறுகிறார்கள் ஆனால் அவன் என்னை சிறிதும் மதிக்கவில்லையே? ஊரே திரண்டு வந்து என்னை பார்த்துச் செல்கிறது அவன் வரவில்லையே என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தார் துறவி.

    அப்போது அங்கு ரவி வந்தான். துறவியை வணங்கி, துறவியாரே தாங்கள் காலையிலிருந்துஇந்த மரத்தடியில் தங்கியிருப்பதாக அறிகிறேன்.காலை முதல் வேலை செய்து கொண்டிருந்ததால் தங்களை தரிசிக்க வர முடியவில்லை. வேலையை விட்டு விட்டு வர என் மனம் ஒப்பவில்லை.எனவே வேலையை முடித்துக் கொண்டு வந்து தங்களை தரிசித்தேன். தாங்கள் என் வீட்டில் இன்று உணவருந்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டான்.

   துறவி அவனது செயலை பாராட்டி அப்பனே உன் செயல் நியாயமானதுதான்! வேலைதான் முக்கியம்! நான் சாதாரணமானவன் தான்! என்னை எப்போதும் சந்தித்துக் கொள்ளலாம்! உன் கடமையை மெச்சுகிறேன், உன் வீட்டில் உணவருந்துவதில் மகிழ்கிறேன் என்றுஅவனுடன் உணவருந்த புறப்பட்டார்.

  ரவியின் வீட்டில் உணவருந்திய துறவி அப்பனே ரவி! என்னிடம் ஒரு மந்திரபொம்மை உள்ளது. இதனிடம் தினமும் ஒரு முறை வணங்கி கையில் மண்ணாங்கட்டிகளை வைத்துக் கொண்டுமந்திர பொம்மையே மண்ணை பொன்னாக்கு என்று கூறினால் கையில் உள்ள மண்ணாங்கட்டிகளில் மூன்று பொற்காசுகளாக மாறும். இதை உண் உழைப்பிற்கு பரிசாக தருகிறேன் பெற்றுக் கொள் என்று கூறி பொம்மையை தந்து சென்று விட்டார்.

   மறுநாள் ரவி துறவி சொன்னதை பரிட்சித்து பார்க்க முடிவு செய்து கையில் சில மண்ணாங்கட்டிகளை வைத்துக்கொண்டு மந்திரபொம்மையே மண்ணை பொன்னாக்கு என்று வணங்கினான். உடனே அவன் கையில் மூன்று பொற்காசுகள் வந்தன. அவன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
அந்த மூன்று பொற்காசுகளை வைத்துக் கொண்டு ஆடம்பரமாக செலவு செய்ய ஆரம்பித்தான். காசு தீர்ந்ததும் மீண்டும் பொம்மையை வணங்கி காசு வரவைத்துக் கொண்டான்.

   அந்த பொம்மையை பாதுகாப்பாக வைப்பதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தான். மிகவும் பாதுகாப்பான இரும்பு பெட்டி ஒன்றை வாங்கி அதனுள் பொம்மையைப் பூட்டி வைத்தான். அதன் அருகிலேயே இருந்து வந்தான். உழைப்பின் இலக்கணமான அவன் உழைப்பையே மறந்துவிட்டான். யார் வேலைக்கு அழைத்தாலும் வேலைக்கு வர மறுத்துவிட்டான்.

     என்னடா இது! என்ன காரணம் வேலைக்கு வராமலே இவனிடம் எப்படி பணம் நடமாடுகிறது என்று மக்கள் ஏதேதோ கதை கட்ட ஆரம்பித்தனர். வேலை செய்யாமல் தின்று கொழுத்த ரவிக்கு உடல்நலம் பாதித்தது. மிகவும் சிரமப்பட்டான். அதே சமயம் அவன் வேலைக்கு வராமைக்கு காரணம் மந்திர பொம்மைதான் என்பதை அவனது நண்பன் அறிந்து கொண்டான். அந்த பொம்மையை எடுத்து காசு வரவழைப்பதை ஒளிந்திருந்து கண்டு பிடித்த அவன் ரவி நன்கு உறங்கும் சமயம் அவனது மடியில் இருந்து சாவியை எடுத்து பொம்மையை எடுத்துக் கொண்டுஅதே மாதிரி வெறொரு பொம்மையை வைத்துவிட்டான்.

    மறுநாள் காலை ரவி எழுந்து பொம்மையை வணங்கி மந்திர பொம்மை மண்ணை பொன்னாக்கிடு என்று வேண்டினான். ஆனால் மண்ணாங்கட்டிகள் பொன் ஆனால் தானே பலமுறை கூறிப் பார்த்த ரவி சரி இன்று மந்திரம் வேலை செய்யவில்லை! நாளை பார்க்கலாம் என்றிருந்தான். மறுநாளும் மந்திரம் பலிக்க வில்லை! ஒரு வாரம் ஒருமாதம் ஆகியும் மந்திர பொம்மை மந்திரம் வேலை செய்யாது போகவே ரவி மனம் உடைந்தான்.

   உணவுக்கே வழி இல்லாமல் மீண்டும் வேலைக்கு போக ஆரம்பித்தான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. மிகவும் கடினப்பட்டான். ஆனால் சிலவாரங்களில்  அவனது நோய்விட்டது. பழையபடி உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்தான்.

  அப்போது அவனது நண்பன் மந்திர பொம்மையுடன் வந்தான். நண்பா என்னை மன்னித்துவிடு! உழைக்காமல் உடல் வேதனைப் படும் உன்னை திருத்தவே இந்த பொம்மையை எடுத்து சென்றேன். உழைக்காமல் வரும் பொருள் நிலைக்காது இதை உணர்ந்து கொள் உழைத்து உண்டால் நோயின்றி வாழலாம். இதோ உன் மந்திர பொம்மை  என்று ரவியிடம் மந்திர பொம்மையை கொடுத்தான்.

  ரவியும் ஆம் நண்பா! பொம்மை மூலம் பணம் கிடைக்கவே உழைப்பை மறந்து விட்டு தறிகெட்டுப் போனேன். தக்க சமயத்தில் என்னை திருத்தினாய். இனி இந்த பொம்மை நமக்கு தேவை இல்லை! இதை துறவியிடமே திருப்பி தந்து விடலாம் உழைப்பே உயர்வாகும் இதை உணர்ந்து கொண்டேன் என்றான்.

     அந்த சமயத்தில் அங்கு வந்த துறவி உழைப்பாளியான உன்னை இந்த பொம்மை சோம்பேறியாக்கிவிட்டதே! எனினும் திருந்திய உன்னை பாராட்டுகிறேன் என்று அந்த பொம்மை வாங்கி சென்றுவிட்டார். அது முதல் ரவி உழைத்து சிறப்பாக வாழ்ந்து வந்தான்.

( மீள்பதிவு)

டிஸ்கி} இது நேற்று வெளியாக வேண்டிய பதிவு! வேளைப்பளுவினால் இன்று வெளியாகின்றது. புதிய கதை எழுத நேரம் ஒத்துழைக்கவில்லை. இந்த கதை வெளியானபோது நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பில்லை! அதனால் மீண்டும் பதிவாகிறது. நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

பிச்சைக்காரனுக்கு எதற்கு விழா? தித்திக்கும் தமிழ்! பகுதி 11

$
0
0
பிச்சைக்காரனுக்கு எதற்கு விழா? தித்திக்கும் தமிழ்! பகுதி 11

நாட்டில் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் ஐயா சாமி தருமம் போடுங்க என்று கேட்பார்கள். போடும்வரை விடமாட்டார்கள். பஸ் நிலையம், கோயில்கள், இரயில் நிலையம் என இவர்கள் தொல்லை அதிகம் இருக்கும். இது ஒருவகை என்றால் கிராமங்களில் வீட்டுக்கு வீடு வந்து அரிசியோ நெல்லோ துணிமணியோ வாங்கிச்செல்வார்கள்.

 குடுகுடுப்பை காரர்கள் என்று ஒரு வகையினர் இருப்பர். இவர்கள் இரவில் வந்து குடுகுடுப்பை அடித்து ஏதாவது குறி சொல்லிச் செல்வார்கள். பின்னர் காலையில் வந்து துணி கேட்பார்கள்.  அது மட்டும் இன்றி பூமால் எருதுக் காரர்கள் என்று ஒரு வகையினர் மாடு ஓட்டிவந்து பிச்சை எடுப்பார்கள்.

  கிராமத்தினரும் சளைக்காமல் இவர்களுக்கு பிச்சை கொடுப்பார்கள். இன்று கிராமங்களில் கூட இத்தகைய பிச்சைக் காரர்கள் அதிகம் காணப்படுவது இல்லை. ஆனால் வேறுமாதிரியான பிச்சைக்காரர்கள் அதிகரித்து விட்டார்கள். ஒரு டீ குடிக்கணும் பத்து ரூபாய் கொடு! என்று அதிகாரத்துடன் கேட்கிறார்கள். ஒரு ரூபாய் ரெண்டுரூபாய் போட்டால் யாரும் லட்சியம் செய்வது இல்லை. இப்படி அதிகாரப் பிச்சை அதிகரித்து விட்டது.

  இந்த நிலையில் பிச்சை எடுத்து உண்பவனுக்கு யாராவது விழா எடுப்பார்களா? எடுத்தார்கள் இன்னும் எடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்கிறார் ஓர் புலவர். அவரின் தமிழாற்றல் வியக்க வைக்கிறது. படியுங்களேன் இந்தப் பாடலை!
  
  ஒருமாடும் இல்லாமல் மைத்துனனார்
    உலகம்எலாம் உழுதே உண்டார்;
  நரைமாடோ ஒன்றிருக்க உழுது உண்ண
   மாட்டாமல் நஞ்சை உண்டீர்!
 இருநாழி நெல்இருக்க  இரண்டுபிள்ளை
  தான் இருக்க இரந்தே உண்டீர்!
திருநாளும் உண்டாச்சே, செங்கமலை
 பதிவாழும் தியாக னாரே

சுப்ரதீபக் கவிராயர் எழுதிய பாடல் இது!

கமலாலயம் என்று அழைக்கப்படுவது எது? பி.ஜே.பி அலுவலகம் என்று நினைத்து விடாதீர்கள்.  திருவாரூரைத்தான் கமலாலயம் என்று சொல்லுவார்கள். அத்தகைய கமலாலயத்தில் வீற்றிருப்பவர் தியாகேசர். அவரைக் குறித்துத் தான் இந்தப் பாடல்.

  தியாகேசப் பெருமானே! உன் மைத்துனரான திருமால் ஒரு மாட்டின் உதவியும் இல்லாமல் பன்றி அவதாரம் எடுத்து உலகம் எல்லாம் உழுது உண்டார்.
உமக்கு வெள்ளை நிறமுடைய மாடு ஒன்று இருக்கவும் உழுது உண்ணாமல் நஞ்சை உண்டீர். உன் மனைவியான உமையம்மையிடம் இருநாழி நெல் விதைப்பதற்கு இருக்கவும், விநாயகர், முருகர் என்ற இருமகன்கள் இருக்கவும் உழுது பயிர் செய்து வாழாமல் பிச்சை எடுத்து உண்டீர்! இத்தகைய உமக்கு திருவிழாவும் நடக்கப் போகிறது! இது வேடிக்கையே!

 திருவாரூர் தியாகராச பெருமானுக்கு நடக்கும் திருவிழாவை மனதில் வைத்து எத்தனை அருமையாக கவி படைத்துள்ளார் பாருங்கள். திருமாலின் வராக அவதாரம், சிவபெருமான் நஞ்சு உண்டது, பிச்சை எடுத்தது என அத்தனைத் தகவல்களை  இந்த எண்சீர் விருத்தத்தில் எத்தனை அருமையாக சொல்லிவிட்டார் பாருங்கள்.

இன்று போனசாக ஓர் பாடல் சென்றவாரம் விடுகதை போட்ட மாதிரி இதுவும் ஓர் விடுகவி. விடையை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

 முன் ஒரு ஊரின் பேராம்; முதல் எழுத்து இல்லாவிட்டால்
 நன்னகர் மன்னர் பேராம்; நடு எழுத்து இல்லாவிட்டால்
 கன்னமா மிருகத் தின்பேர்; கடை எழுத்து இல்லாவிட்டால்
 உன்னிய தேனின் பேராம்; ஊரின் பேர் விளம்பு வீரே!

பாடலின் விளக்கம் சொல்லிவிடுகின்றேன்! விடையை சொல்லுங்கள்!
ஒரு பெயரை முழுவதுமாக சொன்னால் ஊரின் பெயராக இருக்கும். அந்த பெயரின் முதல் எழுத்தை நீக்கினால் மற்றபகுதிகள் ஊர்த் தலைவனைக் குறிக்கும். நடுவில் உள்ள எழுத்தை நீக்கினால் அருகம்புல்லை தின்னும் மிருகத்தின் பெயராகும் கடைசி எழுத்தை நீக்கினாலோ தேனின் பெயரைக் குறிக்கும். எந்த ஊர் அது?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



சுகமான வாழ்வளிக்கும் சுக்கிரவாரப் பிரதோஷம்!

$
0
0

பிரதோஷம் என்றால் என்ன? 

      ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை திரயோதசி திதி, தேய் பிறை திரயோதசி திதிகளில் மாலை 4.30 மணி முதல் 6..00 மணி வரை சிவவழிபாடு மேற்கொள்ள உகந்த நாளாகும். இந்த நேரத்தில் சிவன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடுகின்றார். எனவே நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதுவே பிரதோஷகாலம் என்றும் சொல்லப்படுகிறது.

  பிரதோஷத்துக்கு 'ரஜனீ முகம்’ என்ற பெயர் உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'ரஜனீ’ என்றால் இரவு என்று பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் முன்பகுதியான சாயங்காலத்தைக் குறிக்கும்.
வளர்பிறை திரயோதசி திதி அன்றும், தேய்பிறை திரயோதசி திதி அன்றும் - மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் 'பிரதோஷ காலம்’ எனப்படுகிறது.
தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிவபெருமான் அருள் புரிந்தது, ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது

பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.
பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.
மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் 'மாதப் பிரதோஷம்’ எனப்படும்.
மகா பிரதோஷம்: சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'மகா பிரதோஷம்’ எனப்படும்.
பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.

திவ்யப்பிரதோஷம் : 

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்''ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும். 
சுக்கிர பிரதோஷம்: வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சுக்கிரப்பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. சுக்கிரன் சுகமளிக்கும் கடவுள். போக காரகன். வெள்ளியன்று பிரதோஷ வழிபாடு செய்வதால் வாழ்வில் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகி சுகம் அடையலாம்.
பொதுவாகவே பிரதோஷம் தேவர்களை சிவபெருமான் ஆலகால விஷத்தில் இருந்து காத்தருளிய நாள் ஆகும். பாற்கடலில் பொங்கிய விஷத்தை உண்டு தேவர்களுக்கு நன்மை அருளிய சிவபெருமான் நம்முடைய வாழ்க்கை பெருங்கடலில் பொங்கும் பல்வேறு துன்பங்களை விலக்கி நன்மைகளை தருவார். எனவே பிரதோஷ விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.

பிரதோஷ காலத்தில் நந்திக்கு காப்பரிசி நிவேதனம் செய்யப்படுகிறது. அது எதற்கு? ஆலகால விஷத்தை சிவன் உண்டதும் பதறிய பார்வதி சிவனின் கழுத்தை தடவினார். அது கழுத்தோடு நின்று சிவன் நீலகண்டன் ஆனார். அப்போது அங்கிருந்த நந்தி இந்த விஷம் கொல்லக் கூடிய அளவிற்கு கொடுமை உடையதா? என்று எள்ளி நகையாடினார். ஆணவத்தால் இவ்வாறு பேசிய நந்தியை திருத்த சிவன் முடிவு செய்து, நந்தியே என்னுடைய கையை முகர்ந்து பார் என்று விஷம் வைத்திருந்த கையை நீட்டினார். அதை முகர்ந்த நந்தி மூர்ச்சை அடைந்ததோடு பின்னர் தெளிந்த பின்னரும் பித்து பிடித்து பைத்தியம் போல் சிரித்துக்கொண்டும் பிதற்றிக் கொண்டிருந்தார்.
 பார்வதி தேவி நந்தியை மன்னிக்க வேண்டினார். அப்போது சிவன் அரிசிப்பொடியை வெல்லத்துடன் கலந்து கொடுத்தால் நந்தி குணம் அடைவார் என்று கூறினார். அப்படியே செய்தாள் பார்வதி. இதை நினைவு கூறும் விதமாகத்தான் பிரதோஷ காலத்தில் நந்திக்கு காப்பரிசி நிவேதனம் செய்யப்படுகின்றது.

சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே 'சோமசூக்தப் பிரதட்சிணம்’.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக - அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரதோஷமும் வழிபாட்டுப் பலன்களும்!
lஞாயிற்றுக்கிழமை பிரதோஷ தரிசனம் - நல்ல மங்களங்களைத் தரும்.
lதிங்கட்கிழமை பிரதோஷ தரிசனம் - நல்ல சிந்தனைகள் உண்டாகும். அஸ்வமேத யாகங்கள் செய்யக்கூடிய பலன்கள் கிட்டும்.
lசெவ்வாய்க் கிழமை பிரதோஷ தரிசனம் - பஞ்சமும், பட்டினியும் விலகிப் போகும்.
lபுதன் கிழமை பிரதோஷ தரிசனம் - புத்திரப் பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை உண்டாகும்.
lவியாழக்கிழமை பிரதோஷ தரிசனம் - குருவருளோடு திருவருளும் கைகூடும். வெள்ளிக்கிழமை பிரதோஷ தரிசனம் – எதிர்ப்புகள் நீங்கும்
lசனிக்கிழமை பிரதோஷ தரிசனம் – அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும். எல்லா பிரதோஷங்களிலும் சனிப் பிரதோஷம் உயர்ந்தது. அதனால் மஹாபிரதோஷம் என்கிறார்கள்.

இன்று துவாதசியோடு கூடிய திரயோதசி நாள். திவ்யப் பிரதோஷம் என்று வழங்கப்படுகின்றது. அத்துடன் சுக்கிரவாரமும் கலந்து வருவது மிகச்சிறப்பாகும். துன்பங்களை போக்கி இன்பங்களை தரும் ஈசனை இந்த திவ்யப் பிரதோஷ நாளில் வழிபாடு செய்து வாழ்வில் வளம் பெறுவோமாக!

(படித்ததில் தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0
தளிர் ஹைக்கூ கவிதைகள்!

 மொழி மறந்து
  விழி பேசியது!
  காதல்!

குழந்தையோடு
விளையாடுகையில் குழந்தையாகிறது
மனசு!

துள்ளி துள்ளி வந்து
தள்ளி தள்ளி போகிறது
கடல் அலைகள்!

விழுந்தும்
அடிபடவில்லை!
அருவி!

புதைந்த நியாபகங்கள்
தோண்டப்பட்டன!
சந்திப்பில்!

போர்வை விலக்கின
புற்கள்!
கதிரவன் உதயம்!

பச்சை சேலையில்
வெள்ளை ரோஜாக்கள்!
வயலில் கொக்குகள்!

தலையில் 
கொள்ளிவைத்துக்கொண்டன!
தெருவிளக்குகள்!

கண்ணாமூச்சி ஆடியது
கதிரவன்!
மேகம்!

பிறந்ததும்
விழுந்து இறந்தது!
நீர்க்குமிழி!

தாய்ப்பாலுக்கு விலைகூட
தள்ளிக் கட்டப்பட்டது!
கன்று!

நீந்தத் தெரியாது
மூழ்கியது குதிரை!
குளத்தில் நிழல்!


கழுவிவிட்டது வானம்!
நனைந்தது பூமி!
மழை!

உள்ளம் குமுறுகையில்
வார்த்தைகளில் வெடிக்கிறது!
கோபம்!

பறவைகளின் இசையில்
பயிர்களின் நாட்டியம்!
மாலைத் தென்றல்!

வசதிகள் அதிகமாகையில்
சுருங்கிப் போகிறது!
மனசு!

ஒடுங்கும் முதுமையில்
ஓடும் குழந்தையாகிறது!
மனசு!

பாட்டு எசப்பாட்டில்
பயணித்தது இரவு!
பறவைகள்!

இரவில் பூத்தன
மரங்கள்!
மின்மினி பூச்சிகள்!


டிஸ்கி)  தமிழ்த்தோட்டம் என்ற போரமில் 2011ல் நான் எழுதி பாராட்டுப்பெற்ற சில ஹைக்கூக்களை இங்கு பதிவிட்டுள்ளேன்! சிலவற்றை என் முன் பதிவுகளில் படித்திருக்கலாம்! பொறுத்துக்கொள்ளவும்!  வீட்டம்மா வெளியில் சென்றதால் சுமை கூடியுள்ளது! சிந்தனைக்கு நேரமில்லை! சோறாக்க போகனும் ஹிஹி! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

பாடம்! சிறுகதை!

$
0
0


பாடம்
       
டிகிரி முடித்து வேலைக்கு அலைந்த்து அலைந்து கால்கள் கூட தேய்ந்து விட்டது ஆனால் வேலைதான் கிடைத்தபாடில்லை. வேலைக்குச் செல்பவர்களை கண்டு பொறாமைப்படத்தான் முடிந்ததே தவிர வேலைக்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை!.

இன்னும் எத்தனை நாள்தான் வீட்டில் இண்டர்வியுவிற்கும் அப்ளிகேசன் போடவும் காசு கேட்டுக் கொண்டிருப்பது. வெளியில் சென்றால் பார்ப்பவர்களின் பார்வையே நக்கலாக தென்பட்டது கணேஷிற்கு.

   இன்று கூட கம்பெனி ஒன்றிர்கு இண்டர்வியுவிற்கு போய் ஏமாந்து திரும்பினான். நூற்றுக்கணக்கான நபர்களை வரவழைத்தவர்கள் எம்.எல்.ஏ சிபாரிசோடு வந்தவனுக்கு வேலைக் கொடுத்துவிட்டு மற்றவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள். ச்சே இதென்ன பிழைப்பு ஃபைலை தூக்கிக் கொண்டு வேலை கிடைக்குமா என்று அலைந்து கொண்டு அனைவரும் கேலியாக பார்க்கிறார்கள்.

 இன்று தான் கடைசி. இனி வேலை தானே கிடைத்தால் கிடைக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்! நாமாக அலைந்தால் கிடைக்கவில்லையே தாமாக எங்கே கிடைக்கப்போகிறது? என்று சிந்திக்காமல் சலித்துக் கொண்டான் கணேஷ்.

     அப்போது ராமசாமி தாத்தா எங்கோ சென்று திரும்புவதை பார்த்து, எங்க தாத்தா போய் வர்ரீங்க? வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி வர்ரீங்களே? என்று விசாரித்தான்.

   நான் வேலை பார்த்த ஆபிசுக்குத் தான் தம்பி பென்ஷன் கேட்டு போயிட்டு வரேன்!.

   என்ன தாத்தா அவங்கதான் ஒரேப்பிடியா பென்ஷன் எல்லாம் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்களே அப்புறம் எதுக்கு வெட்டியா அலைஞ்சிட்டு வர்ரீங்க?

      ராமசாமித் தாத்தா வேலைப் பார்த்தது ஒரு தனியார் கம்பெனி ரிட்டையர் ஆனதும் டாட்டா காண்பித்து விட்டது. இவர் பென்சனுக்கு நடையாக நடக்கிறார். இவரைப்போல பலர். ஆனாலும் கம்பெனி அசைந்து கொடுக்க மறுக்கிறது.அதனால் தான் அப்படி கேட்டான் கணேஷ்.

   என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க? கம்பெனி ரூல்ஸ்படி அவங்க கட்டாயம் பென்சன் தந்து ஆகனும் முடியாதுன்னு சொல்ல முடியாது.

   தாத்தா உங்களுக்கு இருக்கிற வசதிக்கு இந்த பென்சன் பிச்சை காசு. வந்தா வருது வராவிட்டால் போகுதுன்னு விடாமா இந்த வயசான காலத்தில வெயில்ல அலைஞ்சிகிட்டு இருக்கீங்களே?

    தம்பி சிறுதுளிதான் பெரு வெள்ளம்! நாற்பது வருசமா சம்பாதிச்சதாலே இப்ப வசதியா இருக்கேன்! நான் வசதியா இருக்கிறதாலே எனக்கு சேரவேண்டியதை விட்டுக் கொடுத்திட முடியுமா? தானா எதுவும் கனியாது தம்பி! நாலுகல்லு அடிச்சாத்தான் ஒரு கல்லுல மாங்கா விழும்! அதான் விடாம முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்! எனக்கு நம்பிக்கை இருக்கு தம்பி! நான் கட்டாயம் பென்சனை வாங்கிடுவேன்! அது வரை முயற்சியை விடமாட்டேன்! ஆமாம் தம்பி இன்னிக்கு இண்டர்வியுவிற்கு போனியே என்ன ஆச்சு? என்றார்.

   இன்னிக்கு தோல்விதான் தாத்தா! ஆனா நாலைக்கு வெற்றிதான் என்றான் கணேஷ் பாடம் கற்றவனாக.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் அன்பர்களே!

(மீள்பதிவு)

தோனி விலக வேண்டுமா? கதம்ப சோறு! பகுதி 62

$
0
0
கதம்ப சோறு! பகுதி 62

மேகியைத் தொடர்ந்து காம்ப்ளான்!

         மேகிநூடுல்ஸில் தீங்கு விளைவிக்கும் பொருள் இருக்கிறது என்று தடைசெய்யப்பட்டது விற்பனைக்கு வைத்திருந்த பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டது. இத்தனை நாள் சும்மா இருந்த சுகாதாரத்துறை திடீரென விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கின்றது. இதில் என்னென்ன உள்குத்துக்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதைத்தொடர்ந்து இப்போது உ.பி யில் ஒருவர் வாங்கிய காம்ப்ளான் பவுடரில் புழுக்கள் நெளிந்தது என்று பகீர் பட வைக்கின்றார். அதே போல குளுக்கான் டி யிலும் புழுக்கள் இருந்தது அதையும் தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் ஒருவர். பையில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் எதுவுமே பாதுகாப்பானது அல்ல என்ற ஓர் விழிப்புணர்வு இப்போது மக்களுக்கு வந்திருக்கிறது அந்த வகையில் இந்த சம்பவங்கள் நல்லதுதான். அதே சமயம் இந்தப் பொருள் உடல்நலனுக்கு தீங்கானது என்று பாக்கெட்டில் பொறித்துவிட்டு விஷத்தைக் கூட விற்றுக் கொள்ளலாம் என்ற இந்திய சட்டம் வினோதமானது. சிகரெட், பீடி, குட்கா, பான், சாராயம் போன்றவை இந்தியச் சந்தையில் பொருளாதார அளவில் பெரிய இடத்தை பிடித்துள்ளன. இவற்றை முழுவதுமாக தடை செய்ய ஓர் அரசும் முன் வரவில்லை என்பது வெட்கமான விஷயம்.

உங்க ரூபாய் நோட்டுக்களை மாற்றிவிட்டீர்களா?

      2005க்கு முன் வெளியான ரூபாய் நோட்டுக்களை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப்பெற்று அழித்து வருகின்றது. பாதுகாப்பு குறைபாடு மற்றும் கருப்பு பணப் புழக்கத்தை மட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் வரை இந்த நோட்டுக்களை மாற்ற வழங்கப்பட்ட அவகாசம் நீடிக்கப்பட்டது. அந்த அவகாசம் இந்த ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிகின்றது. இந்த நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.அல்லது நமது கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம். ஜூன் மாதம் 30ம் தேதிக்குப்பின் இவ்வகை நோட்டுக்கள் இருந்தால் அவை செல்லாக்காசாகிவிடும். ரூபாய் நோட்டின் பின்புறம் மையத்தில் புதிய நோட்டாக இருப்பின் அந்த ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும். இந்த மாதிரி நோட்டுக்களே இனி செல்லுபடியாகும்.

மீண்டும் மவுசுக்கு வரும் வணிகவியல் படிப்புக்கள்!

     ஒருகாலத்தில் கல்லூரிகளில் ஓஹோவென்றிருந்த பி.காம் எனப்படும் வணிகவியல் படிப்புக்கள் மவுசிழந்து எடுப்பார் இல்லாமல் போயின. இஞ்சினியரிங் படிப்புக்களில் மாணவர்கள் கவனத்தை செலுத்தினர். இப்போது நிறைய இஞ்சினியர்கள் உருவாகி வேலைவாய்ப்பற்ற சூழ்நிலையில் கல்லூரிகளில் பிகாம் படிப்புக்கு கிராக்கி அதிகரித்து வருகின்றது. நூறு சீட் இருந்தால் மூவாயிரம் வரை விண்ணப்பங்கள் இந்த படிப்பிற்கு குவிகின்றது. இந்த துறையில் நிறைய வேலைவாய்ப்பு இருப்பதும் மேற்படிப்புக்கள் படிக்கையில் பொறியியல் துறையைவிட அதிக சம்பாத்தியம் பெறமுடியும் என்ற சூழ்நிலையில் அனைவரும் இந்த துறையை நாடுகின்றனர். வணிகவியலிலும் இப்போது பாடப்பிரிவுகள் பிரிக்கப்பட்டு மூன்று வகையில் பிகாம் பொது, பி.காம் கார்பரேட் செக்ரெட்டரிஷிப், பி.காம் கணிணி அறிவியல் என படிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தோனி விலக வேண்டுமா?

    வங்காள தேசத்திற்கு எதிராக தொடரை இழந்ததும் மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அணியிலும் பிளவு இருப்பதாக சொல்கின்றனர். ஆஸ்திரேலியா போன்று நமது அணிக்கு இரட்டை கேப்டன்கள் என்ற பாணி சரிபட்டு வராது. ஓர் உறையில் இரண்டு வாட்கள் என்பதெல்லாம் இந்தியாவுக்கு பொருந்தாது. இந்த தொடரை பொறுத்தவரை தோனியின் தலைமை மீது குறை சொல்ல ஒன்றும் இல்லை என்றே தோன்றுகின்றது. விரைவாக ரன்களை சேர்க்கவில்லையே தவிர பொறுப்பில்லாமல் அவர் ஆடவில்லை. மிடில் ஆர்டரில் யாரும் சிறப்பாக ஆடி அணியை கரை சேர்க்கவில்லை. துவக்கத்திலும் ரோகித் சோபிக்கவில்லை! பந்துவீச்சிலும் அஸ்வினைத் தவிர யாரும் சிறப்பாக வீசவில்லை. இப்படி ஓர் அணியைவைத்துக் கொண்டு கத்துக்குட்டி அணியைக் கூட வெல்ல முடியாதுதான். இப்போது அனைவருக்கும் கோஹ்லி மீது ஓர் நம்பிக்கை ஏற்பட்டு அவரை தலைவராக்க முயல்கின்றனர். என்னைக் கேட்டால் கோஹ்லிக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுத்தது கூட சரியில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படும் ஒருவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவியை கொடுத்து நிறைய வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது இந்திய அணி நிர்வாகம். தோனி தலைமையில்தான் நிறைய வெற்றிகளை குவித்துள்ளது. கேப்டனாகவும் அவர் ஜொலித்துள்ளார். பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பராகவும் நிறைய சாதனைகள் படைத்துள்ளார். இந்த ஒரு தோல்வி அவரது சகாக்கள் சரியாக விளையாடாமையால் நிர்வாகத்தினரின் ஒத்துழையாமை கொள்கையால் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் ரவீந்திர ஜடேஜா போன்றோருக்கு அவர் தரும் அதிக வாய்ப்புகள் சந்தேகத்தை உண்டாக்குகின்றன.ஆனாலும் இவர் ஒரு வீரரின் மேல் வைக்கும் நம்பிக்கை வியக்கவைக்கிறது தொடர்ந்து பலவாய்ப்புகள் வழங்கி திறமையை மெருகெற்றுவார். இந்திய அணிக்காக பல வெற்றிகளையும் கோப்பைகளையும் தந்த இவரை வெறுக்காமல் இன்னும் ஓர் வாய்ப்பை அவருக்குத் தரலாம் என்பது என் கருத்து.

 டீவி கார்னர்:

  டீவி பார்ப்பது வெகுவாக குறைந்து போய்விட்ட சூழலில் மே மாத இறுதிவாரத்தில் தங்கை வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஜி தொலைக்காட்சியில் ஜோதா அக்பர் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். நானும் ஓர் ஆர்வத்தில் பார்க்க அப்படியே மூழ்கிப் போனேன். அக்பராக நடிப்பவர் மிகச்சிறப்பாக நடிக்கின்றார். தூயதமிழில் வசனங்கள் காட்சியமைப்புகள் வெகு ஜோராக இருக்கின்றன.  அதே போல பாலிமரில் ஒளிபரப்பாகும் இருமலர்கள்.  போன்ற மொழிமாற்றத்தொடர்கள் ரசிக்கவைக்கின்றன. ஜெயா டீவியில் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஜெய் வீர ஹனுமான் மற்றும் அதைத்தொடர்ந்து ஒளிபரப்பாகும் ராமாயணம் போன்றவையும் சிறப்பாக இருக்கின்றன. இதே போன்ற தொடர்களை நம் டீவிக்கள் வழங்காமல் இன்னும் பழிவாங்குதல் போன்ற அரதபழசான கதைகளையே அரைத்துக் கொண்டிருப்பது வேதனை.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

பூத்த முருங்கை பூக்கள் உதிர்ந்து காய்கள் காய்க்க வில்லையா? பெருங்காயம் சிறிதளவு எடுத்து வேரின் அடிப்பாகத்தில் தோண்டி புதைக்கவும். நீரூற்றிவிடவும். கூடியவிரைவில் காய்க்க ஆரம்பிக்கும்.

பிரம்பு நாற்காலிகள் தொய்ந்து போகாமல் இருக்க முதலில் சிறிது சோப்பு நீரால் நன்கு துடைத்து பிறகு இளஞ்சூடான உப்பு நீரால் துடைத்து வெயிலில் காய வைத்தால் பழைய நிலைக்கு வந்துவிடும்.

மேசைகளில் உள்ள இழுப்பறைகளை சுலபமாக திறந்து மூட ஓரங்களில் சிறிது சோப்பு அல்லது மெழுகைத் தேய்த்தால் சுலபமாக திறந்து மூடலாம்.

கண்ணாடிகளை ஒரு துண்டு உருளைக்கிழங்கைக் கொண்டு நன்கு தேய்த்து துடைத்தால் கண்ணாடி பளபளக்கும்.

கைகளில் பெயிண்ட் கரையா? சமையல் எண்ணையால் நன்கு தேய்த்தால் கறை மறைந்து போகும்.

ஊசியில் நூல் கோர்ப்பதற்கு முன் நூலின் முனையை நகபாலிஷில் நனைத்து பின் கோர்த்தால் ஊசியில் எளிதாக நூல் நுழையும்.

கிச்சன் கார்னர்!

வெஜ் பணியாரம்

 தேவையானவை:  இட்லிமாவு 2கப், துருவிய கேரட் கால் கப், நறுக்கிய வெங்காயம் 2 டேபிள் ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
கடுகு உளுந்து, கடலைப்பருப்பு- தாளிக்க, கறிவேப்பிலை கொத்துமல்லி சிறிதளவு. எண்ணெய்- உப்பு- தேவையான அளவு.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கடலைப்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். துருவிய கேரட வெங்காயம் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையை இட்லி மாவில் கொட்டி கலக்கவும். 
பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். நன்றாக வேகவிட்டு எடுத்தால் சுவையான வெஜ் பணியாரம் ரெடி
  எழுதியவர்: ஆதிரை வேணுகோபால். (தி. இந்துவில் படித்தது)

இவர்களை அறிந்து கொள்வோம்!

அமெரிக்காவில் விருது வாங்கிய இந்திய மாணவர்களை பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்! அமெரிக்க விருது வென்ற இந்திய மாணவர்கள்



பதிவர் அறிமுகம்:
  மரபுக் கனவுகள்
பதிவரின் பெயர் : ந.உ. துரை. 

எ,.பி. ஏ படித்துள்ள இவர் மரபுக் கவிதைகளை எளிய தமிழில் தருகின்றார். குறள் வடிவில் இவர் எழுதும் கவிதைகள் ரசிக்க வைக்கின்றது 2009 முதல் எழுதி வரும் சீனியர் வலைப்பதிவர் என்றாலும் நிறைய பேருக்கு இவரைத் தெரியவில்லை. மரபுக் கவிதைகள் விரும்புவோர் இந்த தளம் செல்லலாம் இதோமரபுக் கனவுகள்!


படிச்சதில் பிடிச்சது!
கவிஞர் கண்ணதாசன்


கண்ணதாசனும் , அறிஞர் அண்ணாதுரையும் 60 களில் , (கண்ணதாசன் தி.மு.க. வில் இருந்த போது) நெருங்கி பழகி வந்தனர் ! அவர்கள் உறவு அண்ணன் - தம்பி உறவு
போல் இருந்தது. அனேக மேடைகளில் ஒன்று சேர காணப்பட்டனர் ! பின்னர் வந்தது பிளவு !

கணணதாசன் தி.மு.க . வை விட்டுப் பிரிந்தாரா அல்லது அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை ! எனினும் கண்ணதாசன் மனதில் அண்னா செய்த செயல்கள் அவரது மனதைப் பாதித்தன ! எப்போது சமயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ! வேளை வந்தது !

சிவாஜி நடித்த "படித்தால் மட்டும் போதுமா ? "என்ற படத்தில் ஒரு பாடல் :

"என்ன "சிச்சுவேஷன் " ? --- கண்ணதாசன்.

'அண்ணே, அண்ணன் ( கே.பாலாஜி ) , தம்பிக்கு ( சிவாஜி ) ஒரு துரோகம் செய்கிறான். இதை நினைத்து தம்பி மனம் உடைகிறான் ! ஆனால் நடந்த உண்மையை வெளியே சொல்ல முடியாத நிலைமை தம்பிக்கு ! இது தான் "சிச்சுவேஷன் "" ---- எம்.எஸ். விஸ்வநாதன்.

கண்னதாசனுக்கு கேட்கவா வேண்டும் ! மனதில் இருந்த காயததை ஆற்ற இதை விட வேறு சந்தர்ப்பம் ஒரு கவிஞனுக்கு வேண்டுமோ ? எழுதினார் !

"அண்ணன் காட்டிய வழியம்மா - இது

அன்பால் விளைந்த பழி அம்மா !

கண்ணை இமையே பிரித்ததம்மா - என்

கையே என்னை அடித்தம்மா ! "

என்று பேனா வை வைத்து அண்ணாவை அடித்தார் ! அது மட்டுமா,

"அவனை நினைத்தே நான் இருந்தேன் - அவன்

தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் - இன்னும்

அவனை மறக்கவில்லை - அவன்

இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை "

என்று தன்னிலை விளக்கமும் கொடுத்தார் !

இந்த பாடல் படத்திற்கும் பொருந்தியது என்று சொல்லவும் வேண்டுமோ !


(ஈகரை தமிழ் களஞ்சியத்தில் படித்தது)


தித்திக்கும் தமிழ்! பகுதி 9 பணியாரம் தோசை தெரியுமா?

$
0
0
தித்திக்கும் தமிழ்! பகுதி 9


தொழில்நுட்பம் வளர்கையில் அது வளர்ச்சிக்கு பயன்படுவதைவிட அழிவுக்கு அதிகம் பயன்படுவது வேதனை. ஒரு காலத்தில் தகவல்தொடர்பு என்பது மிகவும் கஷ்டம் ஆகும். ஓரிடத்தில் இருந்து மற்றொர் இடத்திற்கு செய்தி போக ஆட்கள் மூலம்தான் செய்தி சொல்லமுடியும். பின்னர் புறாத் தூது வந்தது. பின்னர் அஞ்சல், தொலைபேசி என்று வளர்ந்து இன்று இமெயில், வாட்சப் என்று அதன் வளர்ச்சி பெரிதும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தாலும் அதன் மற்றொரு பக்கம் மிகவும் மோசமானதாக அமைகிறது.
பெண்களை இழிவாக சித்தரிக்கும் ஆபாசபடங்கள் வாட்சப்பில் அதிகமாக பகிரப்படுவதாக தற்போது வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இன்றைய குழந்தைகள் கூட வாட்சப் பயன்படுத்தும் நிலையில் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படவேண்டும்.
 இன்று இதுபோன்ற காரணிகள் ஒழுக்கத்தை கெடுக்கின்றன என்றால் அன்று எது கெடுத்தது என்று தெரியவில்லை! அன்றும் தேவதாசி முறை போன்றவை இருந்துள்ளது. பெண்கள் மேல் மோகம் கொண்டு பலர் இருந்துள்ளனர். பல அடியார்களும் குறிப்பாக அருணகிரி நாதர் முதலியவர்கள் கூட முதலில் பெண் மோகம் கொண்டு பின்னர் கடவுள் பக்திக்கு திரும்பியுள்ளனர்.

நமக்கு பணியாரம், தோசை பற்றி என்ன தெரியும்? உண்ணக் கூடிய பொருள் என்றுதான் தெரியும். நன்றாக சுவையாக செய்து கொடுத்தால் ஒரு கட்டு கட்டுவோம்! பணியாரம் தோசையை வைத்து பாட்டு எழுத முடியுமா? வேண்டுமானால் சினிமாவுக்கு ஓர் கானா எழுத முடியும்.  பணியாரம் தோசையை  நான்காக பிட்டு நன்றாக சாப்பிடத்தான் நமக்குத் தெரியும். ஆனால் இந்த புலவர் பணியாரம் தோசையை நான்காக பிட்டு வைத்து நல்லதொரு பாடலையும் அறிவுரையும் தருகின்றார்.

பெண்களை சேர்பவர் அடையும் பலன்கள் என்று பணியாரம் தோசை என்ற ஒரே அடியைக் கொண்டு மிக அழகாக பாடியுள்ளார் அந்தகக் கவி வீரராகவர்.

அந்தப்பாடலில்   அவர் என்ன சொல்கிறார்? இன்று வாட்சப்பில் பரப்பும்    இது போன்ற பாவச்செயல்களை செய்பவர்கள், பல்லி, பாம்பு, அந்துப்பூச்சி போன்ற ஒலியை வெளிப்படுத்த இயலாத பிறவிகளாக பிறப்பார்கள் என்று சாபம் கொடுக்கிறார். இன்றும் இது போன்ற பாவச்செயல்களை செய்பவர்கள் உணர வேண்டிய விஷயம் இது. பாடலையும் அதன் சுவையையும் படித்து மகிழ்வோமே!

   பணியாரந் தோசையி லக்கொங்கை
     தோய்ந்திடப் பார்ப்பர் பல்லி
   பணியாரந் தோசையி லாச்செந்து
      வாய்ப்பிறப் பார்களென்னோ
   பணியாரந் தோசைமுன் னோனுக்கிட்
       டேத்திப் பழனிச் செவ்வேள்
   பணியாரந் தோசைவ ராகாரன்
      னோர்க்கென்ன பாவமிதே
                       அந்தகக் கவி வீரராகவர்.


பாடலின் பொருள்:  பணியாரம், தோசை முதலிய பண்டங்களை விநாயகருக்கு படைத்து வழிபட்டு பழனியில் உள்ள முருகப்பெருமானை வணங்க இயலாதவர்கள் சைவசமயத்தவர்கள் ஆக மாட்டார்கள். மாதர்களின் அணிகள் பொருந்திய அழகிய இரண்டு மலைபோன்ற மார்புகளை சேர்த்து அனுபவிக்க நினைப்பார்களேயானால் அவர்கள் பல்லி, பாம்பு, அந்துப்பூச்சி, போன்ற ஒலியை எழுப்ப இயலாத சிற்றுயிர்களாக பிறப்பார்கள். ஐயோ! அவர்களுக்கு இது என்ன பாவத்தின் பயன்?

பாடலைவிளக்கமாக அடிபிரித்து பார்ப்போமா?

பணியாரந் தோசையிலக் கொங்கை  தோய்ந்திட பார்ப்பர் = பணி+ஆர்+அம்+தோ+சையிலம்+ கொங்கை + தோய்ந்திட பார்ப்பர் =
அணிகள் அணிந்த அழகிய இரண்டு மலைககள் போன்ற தனங்கள் உடைய பெண்களை சேர்ந்திட நினைப்பவர்கள்:

பணியாரந் தோசையிலாச் செந்துவாய்ப் பிறப்பார்களென்னா = பணி+ஆர்+அந்து+ஓசை +இலா+ செந்துவாய்+ பிறப்பார்களென்னா
பல்லியும், ஓசை இல்லாத அந்து போன்ற வாயில்லா பூச்சிகளாக பிறப்பார்கள்

பணியாரந் தோசை முன்னோனுக்கிட்டு ஏத்தி பழனிசெவ்வேன் = பணியாரம்+ தோசை+ முன்னோனுக்கு+ இட்டு + ஏத்தி +பழனி+ செவ்வேன்
பணியாரம், தோசை முதலிய பண்டங்களை முருகனின் முன்னவனான விநாயகருக்குப் படைத்து வழிபட்டு பழனி செல்லாதவர்கள்

பணியாரந் தோசைவ ராகாரன் னோர்க்கென்ன பாவமிதே = பணியார்+ அந்தோ+ சைவர்+ ஆகார்+ அன்னோர்க்கு+ என்ன+ பாவமிதே

இவ்வாறு பணிந்து வணங்காதவர்கள் சைவ சமயத்தவர்கள் ஆகமாட்டார்கள், அவர்கள் செய்த பாவம்தான் என்ன?

பணியாரம் தோசையினை பதமாக ருசித்தீர்களா அன்பர்களே! மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மேலும் ஓர் தமிழ்சுவையினை பருகுவோம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 39

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 39


1.   உங்க பெண்ணோட கவுரவம் மூழ்கிப் போயிரப்போவுது மாமா வந்து காப்பாத்துங்கன்னு மாப்பிள்ளை சொன்ன போது புரியலை போனப்புறம்தான் புரிஞ்சிது!
  என்ன ஆச்சு?
பொண்ணோட நகை எல்லாத்தையும் அடகுவைச்சு மூழ்கி போற ஸ்டேஜ்ல இருக்குது!

2.   தலைவருக்கு மருத்துவ அறிவு கம்மின்னு எப்படி சொல்றே?
டாக்டர் உங்களுக்கு சுகர் கம்ப்ளைண்ட் இருக்குன்னு சொன்னதும் யாரு அவன் சுகர் எம்மேல கம்ப்ளைண்ட் கொடுக்க எவ்வளவு தைரியம்னு கேக்கறாரு!

3.   வீட்டுக்கு வந்த திருடன் உங்க பெண்டாட்டியை மிரட்டறதை பார்த்துக்கிட்டு சும்மாவா இருந்தீங்க?
நம்மளாலே முடியாததை மத்தவங்க செய்யறப்ப ஏற்படற ஒரு சின்ன சந்தோஷத்துல திகைச்சு நின்னுட்டேன் சார்!

4.   மாப்பிள்ளைக்கூட நெருங்கிப் பழக முடியலைன்னு சொல்றீங்களே என்ன காரணம்?
அவர் கொஞ்சம் “தூரத்து உறவா” போயிட்டாரே!


5.   இந்த படத்தோட கதையை திருடி எடுத்திருக்கேன்னு ஒருத்தன் வந்து நிற்க முடியாது!
  எப்படி?
பலரோட கதைகளை உருவி எடுத்திருக்கேனே!

6.   தலைவர் எதுக்கு இப்ப நூறு லிட்டர் பெவிக்காலுக்கு ஆர்டர் கொடுக்க சொல்றாரு?
கட்சியில பிளவு அதிகம் ஆயிருச்சாம்! ஒட்டிவைக்க பார்க்காராம்!

7.   மன்னர் வேட்டைக்கு போனபோது சேடிகளோடு சொக்கட்டான் ஆடியது ராணிக்குத் தெரிந்துவிட்டதாம்!
அப்புறம்!
அந்தப்புரத்தில் ராணி பல்லாங்குழி ஆடிவிட்டாராம்!

8.   அந்தக் ஸ்விட் கடையில கூட்டம் மொய்க்கும்னு சொன்னாங்க ஒண்ணும் காணோமே!
நல்லா பாருங்க! எல்லா ஸ்விட்லயும் எறும்பு மொய்க்கும்! அதைத்தான் சொல்லியிருப்பாங்க!

9.   வரவர நம்ம தலைவர் எதுக்கு அறிக்கை விடறதுங்கிறதுக்கு விவஸ்தை இல்லாம போயிருச்சு!
என்ன செய்தாரு?
குளிர்கால கூட்டத்தொடர்ல கலந்துக்கிற எம்.பிக் களுக்கு இலவசமா ஸ்வெட்டர் வழங்கனும்னு அறிக்கை விடறாரு!


10. தரகரே! பையன்  ஒரு இடத்திலே ஸ்டெடியா நிக்க மாட்டான்னு சொல்றீங்களே! குடிப்பாரா?
நீங்க வேற! பையன் பஸ் கண்டக்டரா இருக்கான்றதைத்தான் அப்படி சொன்னேன்!

11.மன்னர் ஏன் வாயில் காப்போனை முறைக்கின்றார்?
புவனாதிபதி என்று சொல்லுவதற்கு பதில் வாய் குழறி புண்ணாதிபதி என்று உளறி விட்டானாம்!

12.வங்கியிலே போய் பயிர் கடன் கேட்டா இல்லைன்னு சொல்லிட்டாங்களா ஏன்?
  நான் அரைபடி பாசிப்பயிரு இல்ல கடனா கேட்டேன்!

13.சேனலை மாத்தி மாத்தி சீரியல்களை பார்க்கிறியே எப்படி கதை புரியும்?
எல்லா சீரியலும் ஒரே  கதையத்தானே எடுக்கிறாங்க! என்ன ஆக்டர்ஸ் மாறி நடிக்கிறாங்க அவ்வளவுதான்!


14.அந்தப் புரத்தில் நுழைந்த எதிரியை அரசர் மன்னித்துவிட்டாராமே!
ஆம்! அந்த தண்டணை ஒன்றே போதும் என்று விட்டுவிட்டாராம்!

15.காது குத்துவிழாவிற்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு!
  ஏன்?
புதுசா தானும் கடுக்கண் போட்டுக்கணும்னு ஆசைப்படறாரே!

16.அந்த டீக்கடை ஓனர் ஓர் முன்னாள் கவர்ச்சி நடிகைன்னு எப்படி சொல்றே?
ஆடையே இல்லாம டீ தர்றாங்களே!

17.தலைவர் தள்ளாமையினாலே அவதிப்படறாருன்னு சொல்றியே அப்படி ஒண்ணும் வயசாயிடலையே!
அவருடைய கார் அடிக்கடி நின்னு போயிடறது இறங்கி தள்ள ஆளில்லைன்னு சொன்னேன்!


18.அவரு இந்த ஆஸ்பத்திரியிலே சேரும் போது கோடீஸ்வரனா இருந்தார்!
  இப்ப எப்படி இருக்கார்!
லட்சாதிபதியா ஆயிட்டார்!

19.தலைவர் அடிச்ச பல்டியிலே நீதிபதி அசந்துட்டாரா எப்படி?
சொத்தே இல்லாம வந்து இவ்ளோ சொத்தை எப்படி சேர்த்தீங்கன்னு கேட்டதுக்கு சொத்தை இல்லாமத்தான் வந்தேன் ஆனா இப்போ பல்லுப்பூரா சொத்தையா ஆயிருக்கே அப்படித்தான்னு சொல்றாரு!

20.நம்ம ராப்பிச்சைக்கு ரொம்பவுந்தான் திமிரு அதிகமா போயிருச்சு!
ஏன் என்ன ஆச்சு?
சாப்பாடு ஒருமாதிரி இருக்கே இன்னிக்கு உங்க வீட்டுக்காரு சமைக்கலையான்னு கேக்கறான்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



ராணியின் முத்துமாலை! பாப்பா மலர்!

$
0
0
ராணியின் முத்துமாலை! பாப்பா மலர்!


அலங்காபுரி என்ற நாட்டின் ராணி நகைமுத்து. பெயருக்கேற்றார்போல நகைகள் அணிவதில் அளவற்ற ஆசை கொண்டவளாக இருந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரணங்களாக பொன், வெள்ளி, நவரத்தினங்களாக சூடிக்கொண்டு தன்னை அலங்காரம் செய்துகொள்வாள் அந்த ராணி.

   ஒரு சமயம் அரண்மனை நந்தவனத்து தோட்டத்தில் உள்ள குளத்தில் நீராடச் சென்றாள் நகைமுத்து. அப்போது தான் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றிவைத்துவிட்டு நீராடினாள். நீராடி முடித்து கரை ஏறியதும் மீண்டும் ஆபரணங்களை அணியத் துவங்கினால் முத்து மாலை ஒன்றைக் காணவில்லை. அரசிக்கு ஆச்சர்யமாக இருந்தது. சேடிகள் நாலாபுறமும் தேடியும் முத்து மாலை கிடைக்கவில்லை. மாயமாக மறைந்த அந்த முத்து மாலையைத் தேடச்சொல்லி கணவனான ராஜாவிடம் சொன்னாள்.
  
   அந்த ராஜாவும் மனைவியின் சொல்லைத் தட்டாது காவலர்களை அனுப்பி முத்துமாலையைத் தேடச்சொன்னார். காவலர்கள் ஊரெல்லாம் அலசி தேடினர். கிடைத்தபாடில்லை.அப்போது ஓர் வழிப்போக்கன் காவலர்களை கண்டு மிரண்டு ஓடினான். அவன் தான் முத்துமாலையை எடுத்திருக்க வேண்டும் என்றெண்ணி அவனை பிடித்து மிரட்டினர் காவலர்கள்.

   வழிப்போக்கன் என்ன சொல்லியும் அவர்கள் நம்பத்தயாராக இல்லை! அவர்களின் அடி தாங்க முடியாது நான் தான் எடுத்தேன் என்று ஒத்துக்கொண்ட வழிப்போக்கன் அதை நகைக் கடை காரரிடம் கொடுத்துவிட்டேன் என்று சொன்னான்.

   உடனே காவலர்கள் ஓடிச்சென்று அந்த ஊரில் இருந்த நகைக்கடை காரனை பிடித்துவந்து விசாரித்தார்கள். அவன் இந்த வழிப்போக்கனை பார்த்ததே இல்லை என்று சொல்லியும் காவலர்கள் நம்பவில்லை. அவனை துன்புறுத்தினர். அதை தாங்க இயலாத நகைக்கடை காரன். வழிப்போக்கன் தன்னிடம் கொடுத்த மாலையை கோயில் பூஜாரியிடம் கொடுத்துவிட்டதாக கூறினான்.

உடனே கோயில் பூஜாரியை பிடித்துவந்து விசாரித்தார்கள். மரியாதையாக அரசியின் மாலையை கொடுத்துவிடு! என்று மிரட்டினார்கள். பூஜாரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! இல்லாத முத்துமாலைக்கு எங்கே போவது? பைத்தியம் பிடித்து போனது போல் ஆளான அவர் தப்பிக்க என்ன வழி என்று யோசித்து, நகைக்கடைக்காரர் தன்னிடம் கொடுத்த முத்து மாலையை அவ்வூர் நாட்டியக் காரியிடம் கொடுத்துவிட்டதாக கூறினார்.

  காவலர்கள் நாட்டியக்காரியை பிடித்து இழுத்துவந்து விசாரித்தனர். அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. இந்த முத்து மாலையை கண்ணால் கூட காணவில்லை என்று சொன்னாள். பூசாரி தன்னிடம் எதுவும் கொடுக்கவில்லை என்று சத்தியம் செய்தாள்.

  இதனால் நால்வரையும் ஒன்றாக சிறையில் அடைத்தனர் காவலர்கள்.  சிறைக்குள் நால்வரும் பேசிக்கொண்டனர். என் மீது எதற்கு வீணாக பழிபோட்டாய்? என்று பூசாரியிடம் நாட்டியக்காரி கேட்டாள்.

  “ நகைக் கடைக்காரன் என் மீது பழிபோட்டதாலேயே நான் தப்பிக்க அவ்வாறு செய்ததாக பூசாரி சொன்னான்.
   வழிப்போக்கன் என்னை வீணாக மாட்டிவிட்டான்! அதனால்தான் நான் தப்பிக்க பூஜாரிமீது பழி போட வேண்டியதாகிவிட்டது என்று நகைக் கடைக்காரன் கூற
வழிப்போக்கனோ, வழியே சென்ற என்னை காவலர்கள் திருடன் என்று பிடித்து உதைத்து மிரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்கவே இவ்வாறு சொன்னதாக கூறினான்.
   நால்வருக்குமே நாம் திருடர் இல்லை என்று தெரிந்தது. வீணாகவந்து அகப்பட்டுக் கொண்டோமே! என்ன செய்வது என்று யோசித்தனர். அந்த ஊர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

   ஊர்ப்பெரியவர் வழக்கை விசாரித்தார். அவருக்கு நால்வரும் திருடர்கள் இல்லை என்று தெரிந்துவிட்டது. அப்படியானால் முத்துமாலையை எடுத்தது யார்? நந்தவனத்துக்கு உள்ளேயே திருட்டு நடந்திருக்கிறது! வெளியார் யாரும் உள்ளே வர முடியாது. திருடனும் உள்ளேயேத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்த அவர் நந்தவனத்தை நன்கு கண்காணிக்க உத்தரவிட்டார்.

   நந்தவனத்து குளத்தின் அருகில் ஓர் ஆலமரம் இருந்தது. அதில் குரங்கு குடும்பம் ஒன்று இருந்தது. அந்த குரங்குகள் சண்டைப்போட்டு கீச் கீச் என சத்தம் எழுப்ப அதை விரட்ட காவலர்கள் சென்றனர்.
  அப்போது மரத்தின் அடியில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று முத்து மாலையை அணிந்து அழகுபார்த்துக்கொண்டிருப்பதை கண்டனர். அது அரசியின் முத்துமாலைதான் என்று தெரிந்து போயிற்று.

  அரசி நகைகளை கழற்றிவைத்து குளத்தில் இறங்கிய சமயம் இந்த குரங்குதான் அதை எடுத்து சென்றிருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். காவலாளிகளைக் கண்ட குரங்கு தன் கழுத்தில் அணிந்த முத்து மாலையை கழற்றி வீசிவிட்டு ஓடிவிட்டது. அதை எடுத்து சென்று அரசரிடம் ஒப்படைத்தனர் காவலர்கள்.
  முத்துமாலை கிடைத்ததும் நிரபராதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு ஆலோசனை சொன்ன ஊர் பெரியவர் கவுரவிக்கப்பட்டார். அவசரகதியில் செயல்பட்ட காவலர்களை அரசன் கடிந்து கொண்டான். அரசியின் நகைப்பைத்தியமும் தெளிந்தது.

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


விநாயகர் தியாகி ஆனது எப்படி? தித்திக்கும் தமிழ்! பகுதி 12

$
0
0
விநாயகர் தியாகி ஆனது எப்படி? தித்திக்கும் தமிழ்! பகுதி 12


இன்று யாராவது ஒரு பத்து ரூபாய் கொடுத்துவிட்டால் போதும் வள்ளல் என்றும் கொடையாளர் என்றும் பாரி என்றும் பலவிதமாக துதி பாடுகின்றனர்.  அன்றும் புலவர்களுக்கு கொடையளித்த பல புரவலர்கள் புகழ்ச்சியை விரும்பினர் புலவர்களும் புரவலர்களை விதவிதமாக புகழ்ந்து பாடி அவர்களை மகிழ்வித்து கொடை பெற்று மகிழ்ந்தனர். இவ்விதம் புகழ்கையில் அப்புலவர்களின் தமிழ் அறிவு மட்டும் இன்றி புரவலர்களின் தமிழ் அறிவும் நம்மால் அறிய முடிகின்றது. பொருத்தமானவரை பற்றியே புகழ்ந்தார்களே அன்றி எல்லோரையும் புகழவில்லை. 

  துரிதகவி திருமலைக் கொழுந்து கவிராயர் என்று ஒருவர். அவரை ஆதரித்த வள்ளல் விநாயக வள்ளல். விநாயக வள்ளலைப் பாடி சிறப்பித்துள்ளார் இந்த கவிராயர். விநாயக வள்ளல் கட்டிய சத்திரத்தைப் பற்றியும்  பாடுகின்றார். சிவபெருமான், முருகன் போன்றோருக்கு பல கண்கள் உண்டானது இந்த விநாயக வள்ளல் கட்டிய சத்திரத்தின் அழகை  பார்க்கவே என்று உயர்வு நவிற்சியில் சிறப்பிக்கின்றார்.
விநாயக வள்ளலை  கர்ணன், பாரி, காரி என்றெல்லாம் சிறப்பிக்க முடியாது. அவர் ஓர் தியாகி என்று சொல்லுகின்றார் வள்ளல் எப்படி தியாகி ஆனார்? அவர் செய்த தியாகம் தான் என்ன? இந்த பாட்டிலே  படித்து ரசியுங்கள்!

    எல்லார்க்கும் கன்னம் இருந்திட, இவனைக்
      கன்னன் என இசையாது; ஓர்ந்து
   வில்லாரும் காரிஎனில், வடுகனையும்
      சனியனையும் விளக்கும்; கீர்த்திச்
   செல்லாரு பாரி எனில் இல்லா
      ளாம்காளத் தீச்சுட்டுக் கொல்லும்;
  பல்லாரும் புகழ் மயிலை விநாயகனைத்
    தியாகிஎனப் பகரலாமே!

அனைவருக்கும் ‘கன்னம்’ என்ற முகத்தின் ஓர் உறுப்பு அமைந்துள்ளது. ஆதலால் விநாயகவள்ளலை கன்னன் என்று சொல்ல முடியாது. வில் வீரரான காரி என்று அழைக்கலாம் என்றால் அந்தச்சொல்  பைரவரையும் சனீஸ்வரரையும் குறிக்கும். ஆதாலால் இதுவும்பொருந்தாது. புகழ் மிக்க பாரி வள்ளல் என்று அழைக்கலாம் என்றால் அச்சொல்லுக்கு “இல்லாள்” என்ற பொருள் உண்டு. அப்படியானால் பொருள் இல்லாதவன் என்றாகி வறுமை என்னும் கொடுமையான விஷமான தீ சுட்டுக் கொல்லும். எனவே விநாயக வள்ளலை தியாகி என்று அழைக்கலாம். அப்படி அழைத்தால் கொடையாளி என்று பொருளாவதால் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

 இந்த விநாயக வள்ளல் சென்னை மயிலையில் வசித்தவர் என்று அறிய வருகின்றது.

சென்றவாரம் ஓர் விடுகவி பார்த்தோம். அதற்கான விடை மதுரை. நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், பகவான் ஜி உள்ளிட்ட பலர் சரியாக கணித்து அசத்தி இருந்தனர். விடுகவி என்றால் என்ன என்று ஊமைக்கனவுகள் தளத்தில் அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார் நண்பர் விஜி அவர்கள். இன்று மீண்டும் ஓர் விடுகவி பார்ப்போமா?

விடுகவி:
ஆன்நெய்தனைப் பூனை அருந்தினதும் அல்லாமல்
பூநெய்தனை ஈஎடுத்தும் போனது வும்- மான் அனைய
கண்ணார் தலைஅதனில் காய்காய்த்து அறுத்ததுவும்
நண்ணா அறிந்து நவில்.

ஆனையைப் பூனையானது உண்டது. அந்த பூனையை ஈ தூக்கிச்சென்றது.  மான் போன்ற பெண்களின் தலையில் காய் காய்த்ததும் அறுத்தார்கள். இவற்றை என்னவென்று நன்கு அறிந்து சொல்வாயாக!
விடைகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இனிய இலக்கியச் சுவையுடன் சந்திப்போமா?


தங்கள் வருகைக்கு நன்றி! உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0
1.இறங்கிவராவிட்டால்
ஏறிவிடுகிறது விலைவாசி!
மழை!

2.சவலையான பூமி!
பெய்ய வில்லை!
மழை!

3.குளிரெடுத்த மேகத்தால்
குளிர்ந்துபோனது பூமி!
மழை!

4.விதைத்தவன் சும்மா இருக்க
அறுவடை செய்தது பூமி!
மழை!

5.கடல்நீரை
குடிநீராக்கியது
மழை!

6.மேகப்பூக்கள் பூத்ததும்
மணத்தது மண்!
மழைத்தூறல்!

7.மிதிபட்டதும்
ஓலமிட்டன!
சருகுகள்!

8.உதிரும்வரை இறகானது!
உதிர்ந்தபின் உரமானது!
சருகுகள்!

9.பூத்துக் கொட்டியது
பொறுக்கமுடியவில்லை!
மத்தாப்பூ!

10.கால் ஒடிந்ததும்
தூக்கி வீசினார்கள்!
நாற்காலி!

11.மண்சோறு படைத்தது
நிறைவில் கடவுள்!
குழந்தை!

 12. மறைத்துக்கொண்டது
  நீர்!
  ஆழம்!

 13. இலைகள்
   அசைகையில் பிறந்தது
   காற்று!

 14. கற்பனைச்சிறகுகள்!
  கட்டிவைக்கிறது தொலைக்காட்சி!
  குழந்தைகள்!

 15. குழந்தைக்கு சோறுட்டுகையில்
    குழந்தையாகிறாள்
    அம்மா!

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


இந்திக்காரன் எடுத்த வாந்தி!

$
0
0
சென்ற சனிக்கிழமையன்று சென்னைக்கு பிரயாணம் செய்யும் பாக்கியம் வாய்த்தது எனக்கு. திருமணமாகி பத்துவருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த தங்கை ஆண் மகவை வெள்ளியன்று பெற்றெடுத்ததால் மாமா ஆனேன். மருமகனைப் பார்க்க சென்னை பயணம்.

   முன்பெல்லாம் எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு செல்ல அதிகபட்சம் நாற்பத்தைந்து நிமிடங்கள் பிடிக்கும். மாலை டிராபிக் நெரிசல் என்றால் கூட ஒன்றேகால் மணிநேரத்தில் சென்னையை அடைந்துவிடலாம். இது நான் சென்னைக்கு பேருந்து ஏறும் இடத்தில் இருந்து பாரிமுனை சென்றடைய ஆகும் நேரமாகும்.

   ஆனால் இப்போதெல்லாம் இரண்டரை மணிமுதல் மூன்று மணிநேரம்வரை சென்னை செல்ல நேரம்செலவிட வேண்டியதாகின்றது. சென்னை மாநகரமும் முன்பைவிட நெரிசல் அதிகமாகி சாலைகள் குறுகிப்போய் கிடக்கின்றது.

   முன் தினமே அடையாறு மலர் மருத்துவமனைக்கு சென்று வந்திருந்த என் தந்தை சொன்னார் 50 ரூபாய் டிக்கெட் தான் பெஸ்ட் என்று. காலையில் கிளம்ப முடியவில்லை! பதினோறு மணி அளவில் கிளம்பி வண்டியை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு பெரியபாளையம் கூட்டுரோட்டில் மெக்கானிக்கையே டிராப் செய்ய சொல்லி இறங்கியபோது மணி 11.45. மாநகர பேருந்துகள் ஏதும் உடனே வரவில்லை! வந்த தனியார் பேருந்தில் ஏறி செங்குன்றம் வந்தபோது 12 ஐ கடந்திருந்தது மணி. புறப்பட்டுக் கொண்டிருந்த 242 என்ற மாநகரப்பேருந்தில் ஏறியது பெருந்தவறு ஆகிப்போய்விட்டது. முன் இருக்கைகள் நிரம்பி விட்டதால் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். வண்டி நிரம்பியிருக்க அதில் யாரும் அமரவில்லையே ஏன் என்று அப்புறம்தான் தெரிந்தது. டயர்மீது அமைந்த இருக்கை அது.

       மாநகரப்பேருந்து தனக்கே உரிய லட்சணங்களுடன் இருந்தது. ஓவராக சத்தம் போட்டு வண்டியின் அத்தனை அங்கங்களும் ஆடியதோடு என்னையும் ஆட்டுவித்தது. மனைவி போட்டுக் கொடுத்த ஹார்லிக்ஸ் வெளியே வந்துவிடும் போலத்தோன்றியது. 50 ரூபாய் டிக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டேன். எனக்கு பின் இருக்கையில் இரண்டு வாலிபர்கள் பான் மசாலாவை வாய் நிறைய வைத்திருந்தனர். அவர்கள் செண்ட்ரலை  செஹ்ண்ட்ரல்.. என்று சொல்லும்போதே கண்டக்டர் மீது பன்னீர் தெளித்தனர். வடமாநில இளைஞர்கள் அவர்கள். வாய் நிறைய பாக்குப் போட்டுட்டு எங்க போறன்னு கேட்டா சொல்ல முடியாத அளவுக்கு இருக்கீங்க?  செண்ட்ரலா! இந்தா டிக்கெட்! நமக்குன்னு வந்துவாய்க்குது பாருங்க! என்று புலம்பினார் கண்டக்டர்.

      இன்னும் கொஞ்சம் நகர்ந்து செல்கையில் ஆதித்தனார் நிறுத்தத்தில் இன்னொரு வட இந்தியர் தன் மனைவி இரண்டு குழந்தைகளுடன் ஏறினார். அவர்கள் ஊருக்குச் செல்கிறார் போல லக்கேஜ் நிறைய இருந்தது. பெண்கள் இருக்கையில்  மனைவியையும் குழந்தைகளையும் அமர்த்திவிட்டு லக்கேஜ் வைக்க இடம் தேடினார். கண்டக்டர் டிரைவர் இருக்கை அருகே இருந்த ஒருநபர் இருக்கையில் அவரை அமர்த்தி அங்கே லக்கேஜ்களை வைக்கச் சொன்னார். 
டிக்கெட்டும் கொடுத்து முடித்தார். இதற்கிடையில் அவர் மனைவியிடம் அமர்ந்திருந்த பையன் அவரிடம் சென்று அமர்ந்தான்.

     வண்டி புழலைக் கூட நெருங்கவில்லை! அந்த வட இந்திய வாலிபரின் மகன் வாந்தி எடுத்துவிட்டான். அந்த வாலிபரின் பேண்ட் மட்டுமின்றி அந்த இருக்கை முழுக்க பாழ்!  உடனே  டிரைவருக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்துவிட்டது. “ஏய்! இதெல்லாம் யார் கழுவறது? துடைடா! என்று ஏக வசனத்தில் பேச அந்த வட இந்தியர், மவுனித்தார். டிரைவருக்கு கோபம் அதிகரித்துவிட்டது. இப்படி பஸ்ல வாந்தி எடுத்தா எப்படி? அடுத்தவங்க வர வேண்டாம். குழந்தைக்கு கண்டதை ஏன் வாங்கி கொடுத்து கூட்டி வர்றீங்க!  மரியாதையா வாஷ் பண்ணு!  லக்கேஜ் பேக்ல ஏதாவது துண்டு இருந்தா எடுத்து க்ளீன் பண்ணு என்றார்.

      அந்த வட இந்தியர் முழித்தார்.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அந்த இளைஞரின் மனைவியும் எதுவும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தனர்.  ஏய் சும்மா இருக்கே! உன் வீடா இருந்தா இப்படியே விட்டுருவியா? ஏதாவது பேப்பர் போட்டு துடைடா! மீண்டும் கத்தினார் டிரைவர். உன்னை செண்ட்ரல்ல இறங்க விடமாட்டேன்! வண்டியை சுத்தம் பண்ணிட்டுதான் போகனும்.  உன் சட்டைப் பையில் கர்சீப் இருக்குது இல்லே அதுல துடை! சொல்லிக் கொண்டே போனார்.

     அந்த வட இந்தியருக்கு பாதி புரிந்தும் புரியாத நிலை! இதற்குள் இந்தி தெரிந்த ஒருவர் நியுஸ்பேப்பர் போட்டு துடை! என்று அவருக்கு இந்தியில் சொன்னார். அந்த வாலிபனோ பேப்பர் இருந்தா கொடுங்கள் துடைத்துவிடுகின்றேன்! என்று சொல்ல இவர் மொழிபெயர்த்தார். பேப்பர் கொடுத்தா துடைச்சிடறேன்னு சொல்றான்.

   உடனே கண்டக்டர் கேலியாக சொன்னார். ஏம்பா டிரைவர்! தினத்தந்தி, தினமலர் ஏதாவது வாங்கிக் கொடு! தம்பி துடைச்சிருவாரு! வர்றப்ப அப்பாவியாதான் வர்றானுங்க! சென்னை தண்ணி குடிச்சதும் கொழுப்பு அதிகமாயிருது! என்றார்.

    இடையில் ஒரு டிராபிக்கில் பஸ் மாட்ட இந்தி வாலிபரை கீழே இறங்கி மண் கொண்டுவந்து வாந்தி மீது கொட்ட சொன்னார்கள். அவரும் செய்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நான் உட்பட அனைவருமே அமைதியாகத் தான் இருந்தோம். பின்னர் யோசித்தபோதுதான் தவறு உரைத்தது.

   பஸ்ஸில் ஒவ்வாமையினால் சிலருக்கு வாந்தி வருவது சகஜம்தான். நம்மவர்கள் இதே போல வாந்தி எடுத்தால் கண்டக்டரும் டிரைவரும் இதே போல ஏசுவார்களா? ஏசினால்தான் சும்மா இருப்பார்களா? மொழி தெரியாதவன் பிழைக்கவந்தவன் என்பதால் இத்தனை கேவலமாக நடத்துவதா?

     எத்தனையோ குடிகாரர்கள் குடித்துவிட்டு நாற்றமெடுக்க பஸ்ஸில் வாந்தி எடுத்து வைக்கிறார்கள். நான் கண்டிருக்கிறேன். இது ஓர் சிறுவன் எடுத்த வாந்தி. மற்றவர்களுக்குத் தொந்தரவுதான் ஆனால் இதை நாகரீகமாக சொல்லி துடைக்க சொல்லி இருக்கலாம். அருகில் டீக்கடை இருந்தால் நிறுத்தி தண்ணீர் வாங்கி கழுவி இருக்கச் சொல்லலாம் அதை விடுத்து இப்படி வசை பாடி மிரட்டி அவரை  பணிய வைத்தது  தவறாகவேத் தோன்றுகின்றது.
    இப்படி  கடமை வீரர்களாக இருக்கும் கண்டக்டர்கள் யாராவது டிக்கெட் வாங்கினார்களா என்று கண்டுகொள்வது கூட கிடையாது இருந்த இடத்தைவிட்டு நகர்ந்துவருவது கிடையாது. அன்று 50 ரூ டிக்கெட் வாங்கி பையில் வைத்துவிட்டேன். திரும்பி வரும் வரையில் ஒரு கண்டக்டர் கூட நீ டிக்கெட் எடுத்தாயா? என்று கேட்கவே இல்லை. இந்திக்காரன் எடுத்த வாந்தி என்பதால் இவர்களுக்கு இளப்பம் ஆகிவிட்டது போல!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



கட்டாய ஹெல்மெட்டும் பாரதியின் தமிழ்பற்றும்! கதம்ப சோறு பகுதி 63

$
0
0
கதம்ப சோறு  பகுதி 63.

கட்டாய ஹெல்மெட்!

         உயர்நீதிமன்றத்தின் புண்ணியத்தினால் இன்றுமுதல் இருசக்கரவாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்பது உறுதியாக்கப் பட்டுள்ளது. ஓட்டிச்செல்பவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்துசெல்வோரும் அணிந்துசெல்லவேண்டுமாம். ஒருவகையில் இது நன்மை என்றாலும் சிலருக்கு வசதியாகிவிட்டது. ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. இதுதான் சாக்கென்று ஹெல்மெட் வியாபாரிகள் தரமில்லாதா ஹெல்மெட்களை அதிகவிலைக்கு விற்றுவிடுகின்றனர். இப்படி எல்லாவற்றையும் கட்டாயம் ஆக்குவதால் என்ன பலனை காணப்போகிறது அரசு என்பது போகப்போகத்தெரியும். ஆனால் இன்று நான் ஹெல்மெட்டோடு வாகனத்தில் சென்ற போது நிறைய பேர் தைரியமாக ஹெல்மெட் இல்லாமல் சென்றார்கள். போலீஸ் ஒன்றும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சிலர் ஹெல்மெட்டை  பெட்ரோல் டேங்க் மீது வைத்துச் சென்றனர். ஹெல்மெட் டேங்குக்கு அல்ல! தலைக்குத்தான் என்று அவர்களுக்குத் தெரியாதோ என்னமோ? இதற்கெல்லாம் தலையிடும் உயர்நீதிமன்றம், டாஸ்மாக், மற்றும் பாலியல் வன்கொடுமை இதற்கெல்லாம் சட்டம் போட்டு தலையிட்டு திருத்தலாமே!

இடைத்தேர்தல் வாஷ் அவுட்!

      இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும். இது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அதனால்தான் சாமர்த்தியமாக பெரியகட்சிகள் போட்டியிடவில்லை. சுயேச்சைகளும் கம்யூனிஸ்ட்களும் அம்மாவுக்கு எதிராக களத்தில் குதிக்க விளம்பர பிரியர் டிராபிக் ராமசாமி திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடினார். உண்மையில் அவர் நாடியிருக்கவேண்டியது மக்களின் ஆதரவை. திமுக வை நாடியதால் அவர் மீதிருந்த பிம்பமும் அடிபட்டு போக வெறும் ஐந்தாயிரத்து சொச்சம் வாக்குகள் வாங்கினார். ஒன்றரைலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிட்டார் அம்மா. சென்ற தேர்தலில் இங்கு திமுக ஐம்பதாயிரத்து சொச்சம் வாக்குகள் வாங்கியது. அந்த ஓட்டுக்கள் எல்லாம் இப்போது உதிரிகட்சிகளுக்கு போகவில்லை! அம்மாவுக்கே விழுந்திருக்கிறது என்று சொல்கிறது ஓர் பத்திரிக்கையின் அலசல். எப்படியோ ஆறாவதுமுறையாக எம்.எல்.ஏ ஆகிவிட்டார் ஜெ. அவரின் இந்த உயிர்த்தெழும் வித்தை மற்ற கட்சிகளுக்கு கண்டிப்பாக வயிற்றெரிச்சல்தான். இனியாவது அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு உயிர்த்தெழுந்தால் நன்றாக இருக்கும்.

ஓடத்துவங்கியது மெட்ரோ ரயில்!

     சென்னைவாசிகளின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் நேற்றுமுதல் ஓடத்துவங்கிவிட்டது. முதல் ஓட்டுனர்கள் பெண்கள் என்பது மேலும் பெருமைக்குரியவிஷயம். மிகச்சிறப்பான கட்டமைப்பு வசதிகளுடன் வெளிநாடுகளுக்கு இணையாக இந்த சேவை அமைந்திருந்தாலும் கட்டணங்கள் கொஞ்சம் கூடுதலாக தெரிகின்றன. இன்று சிஎம்.பிடி நிறுத்தத்தில் ரயில் நின்றும் கதவு திறக்கவில்லை என்று ஓர் புகார் எழுந்துள்ளது. அதே சமயம் இந்த திட்டத்தை நான் தான் செய்தேன் என்று திமுகவும் அதிமுகவும் அடித்துக் கொள்வது செம காமெடி! யார் போட்டத்திட்டம் என்று மக்களுக்குத் தெரியாதா? யார் போட்டால் என்ன? மக்களுக்கு உபயோகமாக அது அமைந்தால் மக்கள் மறக்கமாட்டார்கள். உபத்திரவமாக அமைந்தாலும் மறக்க மாட்டார்கள் இதை கட்சிகள் உணர்ந்தால் போதும்.

பிசிசிஐ போடும் இரட்டைவேடம்!

     கிரிக்கெட் என்றாலே சூதாட்டம்! அதிலும் ஐ.பி.எல்லில் சொல்லவே வேண்டாம். அன்று ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடைவிதித்த பிசிசிஐ இன்று ஜடேஜா, ரெய்னா என்று வரும்போது ஐ.சி.சியை கை காட்டுகின்றது. லலித் மோடி அளித்த புகார் கடிதம் ஐ.சிசிக்கு அனுப்பிவிட்டதாக சொல்கின்றது. மேலும் ரெய்னா, ஜடேஜா, பிராவோ குற்றமற்றவர்கள் என்று சொல்கின்றது. எதையுமே விசாரிக்காமல் எப்படி குற்றம் இல்லை என்று சொல்லுவது. இது பிசிசிஐக்கு மட்டுமே தெரிந்த விஷயம். எப்படியோ ஒருகண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற அளவில் பிசிசிஐ செயல்படுவது வெட்ட வெளிச்சம் ஆகிவருகிறது. இத்தனை நடந்தும் இரவு முழுதும் கண்விழித்து இந்த போட்டிகளை ரசிக்கும் ரசிகர்களை முட்டாள்கள் என்று பெர்னாட்ஷா சொன்னதில் தவறேதும் இருக்கிறதா சொல்லுங்கள்!

கிச்சன் கார்னர்!

காசி அல்வா!

தேவையானவை: முற்றிய வெள்ளைப் பூசணி துறுவியது 2 கப்,  சர்க்கரை ஒன்றரைகப், வறுத்த முந்திரி, திராட்சை தலா 25 கிராம், ஏலக்காய்த் தூள், சிறிது ஆரஞ்சு புட் கலர் ஒருசிட்டிகை, நெய் 100 கிராம், வெள்ளரிவிதை ஒரு டீஸ்பூன்.

செய்யும் விதம்: பூசணித்துருவலை பிழிந்து நீரை நீக்கவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி பூசணித்துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தீ மிதமாக இருந்தால் நலம். பின்னர் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து காய் வேகும் போது நெய் சேர்த்துக் கிளறவும். சற்றே தளர இருக்கும் போது ஆரஞ்ச் புட் கலரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். அல்வா பதமாகி வரும்போது  இறக்கவும். ஏலக்காய்த் தூள் வறுத்த முந்திரி திராட்சை, வெள்ளரிவிதைகளை தூவி அலங்கரிக்கவும். சாப்பிடுவதற்கு எதற்கு அலங்காரம் என்றெல்லாம் கேட்க கூடாது. சாப்பிட நல்லா இல்லேன்னாலும் பார்க்கவவாது நல்லா இருக்கணும் இல்லியா?

லஷ்மி சீனிவாசன் அவள் விகடனில் எழுதிய குறிப்பை என் பாணியில் தந்திருக்கிறேன்! நன்றி!

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் தண்ணீரை அடுப்பில் கொதிக்கவைத்துவிட்டு சிறிது படிகாரத்தை போட்டுக் காய்ச்சி இறக்கவும். ஆறியதும் வாய் கொப்பளித்துவர வாய் துர்நாற்றம் நீங்கும். தினமும் மூன்று முறை இப்படி செய்யவேண்டும்.

சிறு குழந்தைகளின் ஷூக்களுக்கு தினமும் பாலீஷ் போட முடியவில்லையா? ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவி துடையுங்கள் பளிச்சிடும்.

அழகு கிரிம், லோஷன் பாட்டில்களில் பாதி தீர்ந்துவிட்டால் மீதி வெளியே வராமல் அடம்பிடிக்கும். பாட்டிலை தலைகீழாக சாய்த்து வைத்துவிட்டு மறுநாள் உபயோகிக்க சுலபமாக வரும்.

பழைய புளியில் கரைத்து குழம்பு வைத்தால் நிறம் கருப்பாக இருக்கும். இதைத் தவிர்க்க அரிசி களைந்த நீரில் புளியைக் கரைத்து ஊற்றிச்செய்தால் புதுப்புளியில் குழம்பு வைத்த மாதிரி இருக்கும்.

நன்றாக பழுத்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து தீக்காயத்தின் மீது பரப்பி சுத்தமான துணியினால் கட்டினால் எரிச்சல் குறைந்து குணமாகும்.

முகப்பருத்தொல்லையா? மஞ்சள்தூள், சந்தனப்பவுடர் ஓரிரு கல் உப்புடன் நீர் சேர்த்து சூடுபடுத்தவும். கை பொறுக்கும் சூட்டில் அதைப் பருவின் மீது ஓரிருநாள் தடவினால் பருக்கள் தானாக மறைந்துவிடும். தழும்போ கரும்புள்ளிகளோ நிலைக்காது.

பாகிஸ்தானில் இருந்து பரவும் கள்ள நோட்டுக்கள்!

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்க பாகிஸ்தானில் இருந்து மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் கள்ளநோட்டுக்கள் பரவுகின்றனவாம். இங்குள்ள ஏஜெண்ட்களிடம் மொத்தமாக பணத்தை கொடுத்து அங்குள்ள கூலித்தொழிலாளர்களை வலையில் சிக்கவைத்து அவர்கள் மூலமாக நாடு முழுவதும் இந்த நோட்டுக்களை பரவ விடுகின்றனராம். ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை நல்ல நோட்டாக மாற்றுகையில் அவர்களுக்கு சில நூறுகள் கமிஷனாகக் கிடைத்துவிடுமாம். இந்த நோட்டுகள் வித்தியாசம் தெரியாத வகையில் மிகவும் துல்லியமாக அச்சடிக்கப் படுகின்றனவாம். இனி வட இந்திய கூலித்தொழிலாளர்கள் கொடுக்கும் நோட்டுக்களை உஷாராக வாங்குங்கள்! அவர்களிடம் கள்ள நோட்டுக்களும்  இருக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் உதவலாமே!

      குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீண்ட இந்த மாணவர் எம்.பி,பி எஸ் சீட் கிடைத்தும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாது கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கிறார். விருப்பம் உள்ளவர்கள் உதவலாமே! தவிக்கும் மாணவர்


நெஞ்சுருக வைக்கும் நிஜக்கதை!
நாய் என்று நாமெல்லாம் அலட்சியம் செய்வோம்! இந்த நாய் எஜமானிடம் காட்டியவிசுவாசம் எஜமானரின் பாசம் இவையிரண்டை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்! மாவிளக்கு போட்ட நாய்க்குட்டி!


படிச்சதில் பிடிச்சது!

பாரதியும்காந்தியும்!
  ஒரு சமயம் சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இரண்டு மணிநேரம் அண்ணல் காந்தியடிகள் பேசினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதி காந்தியை கண்டித்து  ஒரு கடிதம் எழுதினார். “மிஸ்டர் காந்தி! நேற்று சென்னை கூட்டத்தில் நன்றாக பேசினீர்கள். ஆனால் உங்கள் தாய்மொழியில் பேசியிருக்கலாம். அதைவிடுத்து ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தாங்கள் ஆங்கிலத்தில் பேசியது மன வருத்தமாக உள்ளது” இப்படி எழுதினார் பாரதி.
   அதற்கு காந்தியடிகள் பதில் எழுதினார். வணக்கம்! உங்கள் கடிதத்தை பார்த்து சிந்தித்து பார்த்தேன்! ஆங்கிலேயரை எதிர்க்கும் நான் ஆங்கிலத்தில் பேசியது தவறுதான் அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயார்! ஆனால் நீங்கள் என்னை கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதியது வியப்பாக உள்ளதுன்னு  எழுதினார்.
மீண்டும் பாரதியார் காந்திக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில் பாரதியார் சொல்லி இருக்கார்.” நான் யாரையும் கண்டித்து கேட்கும் பொழுது எழுதுகின்ற கடினமான வார்த்தைகளை தமிழில் எழுத விரும்ப வில்லை! அதோடு என் கருத்து அப்படியே உங்களுக்கு பதிவாகவேண்டும். மொழிபெயர்ப்பாளரால் இடைச்செருகல் ஏதும் வந்துவிடக்கூடாது. எனவேதான் உங்களுக்குப் புரியும் மொழியில் எழுதினேன். அப்படின்னு எழுதி இருக்கிறார். கடினமான வார்த்தைகளைக் கூட பிரயோகிக்க விரும்பாத பாரதியின் தமிழ் பற்று போற்றத்தக்கது அல்லவா?

(பாக்யா கேள்வி பதில்களில் படிச்சது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 40

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 40

1.   மாமூல் வாழ்க்கை பாதிச்சிருச்சுன்னு சோகமா சொல்லிட்டுப் போறாரே இன்ஸ்பெக்டர்  ஊருல ஏதாவது கலவரமா?
நீங்க வேற…  வழக்கமா கலெக்‌ஷன் ஆகிற மாமூல் ரொம்பவும் குறைஞ்சு போயிருச்சுன்றதைத்தான் அப்படிச் சொல்றார்!

2.    அந்த கிளினிக்ல மருந்துக்குக் கூட ஒரு நர்ஸும் கிடையாது!
  ஓ! அதனாலதான் ஈ ஓட்டிக்கிட்டு இருக்காரா டாக்டர்!

3.    இந்த போன்ல எல்லா விதமான “ஆஃப்ஸும் இருக்கு! குறைஞ்ச விலையிலே கிடைக்குது!
   அப்ப! வேற ஆப்பே வேணாம்! இதுவே போதும்!


4.    மன்னா! உங்கள் வாளுக்கு வேலை வந்திருக்கிறது!
  என்ன மந்திரியாரே நாட்டில் போர் வந்துவிட்டதா?
இல்லை இல்லை! மகாராணியார் வெங்காயம் நறுக்க கேட்கிறார் என்று சொன்னேன்.

5.    இந்த பையனோட அப்பா கண்டிப்பா கொத்தனாராத்தான் இருக்கணும்னு எப்படி சொல்றீங்க!
  பேப்பர்ல சுவர் வைச்சு எழுதறானே!

6.   தலைவரே நம்ம கட்சியிலே உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு!
கண்டுபிடிக்கச் சொல்லி போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் வா!


7.   தலைவர் ஏடாகூடமா அறிக்கை விட்டு மாட்டிக்கிட்டாரா எப்படி?
காசிக்கு தீர்த்த யாத்திரை போறவங்க வசதிக்கு அரசு இலவசமா ‘சரக்கு” சப்ளை பண்ணணும் சொல்லி அறிக்கை விட்டிருக்காரு!

8.   எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டும் நார்மலா இருக்கே நீங்க ஏன் அழறீங்க டாக்டர்?
  ஒரு நல்ல பேஷண்ட்டுக்கு  டிரிட்மெண்ட் எடுக்க முடியலையேங்கிற ஆதங்கத்துலதான்!


9.   நீ சரக்கடிக்கிறதுக்கு காரணம் டாக்டர்தானா? எப்படிச் சொல்றே?
   அவர் தானே தண்ணியை காய்ச்சி குடிக்கணும்னு சொன்னாரு!

10. அவருக்கு தலைக்கனம் அதிகம்னு இனிமே யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது…!
   எப்படிச் சொல்றே?
எல்லோரும் ஹெல்மெட்டோட போறாங்களே!

11. தலைவர் ஏன் கட்சிக் கொள்கைகளை கல்வெட்டில் பொறிக்கணும்னு சொல்றாரு!
  மக்கள் கட்சியோட கொள்கைகளை குறைவா எடை போட்டுறக் கூடாது இல்லே! அதுக்குத்தான்!
12. போயும் போயும் ஒரு முட்டாளை ஏம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டே?
  ஏண்டா இப்படி கேக்கறே?
 வாத்தியார் என்னை முட்டாப்பய மவனேன்னு திட்டிக்கிட்டே இருக்காரேம்மா!

13.அந்த சாமியாரை எதுக்கு கைது பண்ணிட்டு போறாங்க!
திவ்ய தர்சணம் காட்டறேன்னு சொல்லி காம்பயர் டி.டியை காட்டிக்கிட்டு இருந்தாராம்!

14.  உங்க வீட்டுல மிக்சி ஓவரா சத்தம் போடுதே கவனிக்க கூடாதா?
  அந்த சத்தத்தை நிறுத்திட்டா அப்புறம் வேற சத்தம் அதிகமா கேட்க ஆரம்பிச்சிருமே!

15.மன்னர் சேடிப்பெண்களுடன் பந்துவிளையாடுவதை ராணியார் பார்த்துவிட்டார்!
  அப்புறம்?!
அப்புறமென்ன மன்னருக்கு நிறைய் உள்காயம் ஏற்பட்டுள்ளதாக கேள்வி!

16. மன்னர் ஏன் புலவர் மேல் கோபமாக இருக்கிறார்?
பேஸ்புக்கில் யாரோ எழுதியதை எல்லாம் காப்பி அடித்து மன்னரிடம் பரிசு வாங்குவது தெரிந்துவிட்டது!

17. சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம்  பையன் காத்துல கரைக்கிறான்னு சொல்றியே எப்படி?
  பொண்ணுங்களுக்கு ஓசியிலே டாப் அப் பண்ணிக்கொடுக்கிறானே!

18.செயினை அறுத்துட்டு ஓடினவன் திரும்ப வந்து அடிச்சிட்டு போனானா ஏன்?
   நான் போட்டிருந்தது கவரிங்க் செயின்! இதுக்கா என்னை இவ்ளோ கஷ்டப்பட வெச்சேன்னு  அடிச்சிட்டு போறான்!

19. என் மனைவி நினைச்சா வீடே அலறும்…!
  அவ்வளோ பயங்கரமானவங்களா!
 சேச்சே! அவ கையில தான் டீவி ரிமோட் இருக்குன்னு சொல்ல வந்தேன்!

20. மன்னர் மீசையை முறுக்கிட்டு போருக்குக் கிளம்பினாரே என்ன ஆச்சு?
  எதிரி மன்னன் மீசையை நறுக்கிவிட்டு அனுப்பிவிட்டானாம்!


21.ஓடற டிரெய்ன் நிக்கணுங்கிறதுக்காகத்தான் இந்தம்மா செயினை பிடிச்சி இழுத்தியா? என்னப்பா சொல்றே!
ஆமாங்க சார்! அவசரம்னா செயினை பிடிச்சி இழுத்தா ட்ரெயின் நிக்கும்னு சொல்லி இருக்காங்களே!

22. தலைவர் எதுக்கு பத்திரிக்கைகளுக்கு அறிக்கை விடறபோது கூடவே கொஞ்சம் மிக்சர் பாக்கெட் சேர்த்து கொடுக்கச் சொல்றாரு?
   தலைவரோட அறிக்கையிலே காரமே இல்லைன்னு யாரோ சொல்லிட்டாங்களாம்!

23. என்னோட புகழ்வெளிச்சம் எதிர்கட்சி காரர்களின் கண்ணை மறைக்கிறதுன்னு தலைவர் சொல்றாரே!
   பின்னே சொல்லமாட்டாரா? நாற்பது ரூபா டியுப் லைட்டை இலவசமா கொடுத்து அது முழுக்க இவர் பேரை பொறிச்சிக்கிட்டா மறைக்காம என்ன செய்யும்?

24. கேஸ் கட்டு இல்லேன்னு அந்த வக்கீலை வீட்டுக்குள்ளே சேர்க்க மாட்டேன்னுட்டாங்க!
    அப்புறம்?
   அப்புறம் என்ன புதுசா ஒரு குக்கர் கேஸ்கட்டு வாங்கிட்டு வந்தப்புறம் உள்ளே விட்டுட்டாங்க!

25. இந்த பையன் அரசியல்வாதி வீட்டு பையன்னு எப்படி சொல்றீங்க சார்!
   பெஞ்ச் விட்டு பெஞ்சு தாவிக்கிட்டே இருக்கானே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


இனியவை நாற்பது! இன்று எனது பிறந்த நாள்!

$
0
0
இனியவை நாற்பது! இன்று எனது பிறந்த நாள்!


தளிர் வாசக அன்பர்களே மீண்டும் ஓர் சுயபுராணந்தேன்! கோச்சுக்காதீங்க! இன்று எனது பிறந்தநாள் நாற்பதை நிறைவு செய்கின்றேன். 3-7-75ல் ஓர் நள்ளிரவில் என் அம்மாவை மிகவும் தொந்தரவு செய்து பிறந்த நான் இன்று நாற்பதைக் கடந்துவிட்டேன் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. பிறந்தநாள் கொண்டாட நானெல்லாம் பெரிய ஆள் இல்லை என்றாலும் நினைவு தெரிந்தது முதல் பிறந்தநாள் கொண்டாடித்தான் வருகின்றேன். என் இருபத்தைந்தாவது வயதில் தொடங்கி ஓர் பத்துவருடம் என் டியுசன் மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி அவர்களுக்கு பரிசளிப்பேன். பெரியதாய் எதுவும் கிடையாது பேனா,பென்சில் ரப்பர் போன்றவைகள்தான் ஆனால் அதில் கிடைத்த மகிழ்ச்சி பெரிதானது.

    இந்த வருட பிறந்தநாள் மேலும் சிறப்பானது. என் தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தைப்பேறு பத்து ஆண்டுகள் தள்ளிப் போனது. தற்போது ஆண் குழந்தை பிரசவித்து அதற்கு இன்று பெயர்சூட்ட உள்ளோம். மாமனின் பிறந்தநாளன்று மருமகனுக்கு பெயர் சூட்டுவிழா! இரட்டைக் கொண்டாட்டங்கள். இதனால் இன்று இணையப்பக்கம் தலைக்காட்ட மாட்டேன். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

   அதென்ன இனியவை நாற்பது என்கிறீர்களா? இந்த நாற்பது வயதில் நமது வாழ்க்கையில் பிடித்ததும் பிடிக்காததுமாய் எத்தனையோ நடந்து இருக்கும். பிடிக்காமல் போனதை விட்டுத் தள்ளுவோம். பிடித்ததை மனதிற்கு இனியதை பிடித்துக் கொள்வோம்.  சின்னவயதில் அம்மா எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி புது டிரெஸ் போட்டு( சில சமயம் இருக்காது) பாயசம் வைத்து சாமி கும்பிட்டது ஓர் இனிய அனுபவம். அந்த நாட்கள் மீண்டும் திரும்பாது.

   ஜூலை மாதத்தில் 93ம் வருடம்  என்று நினைக்கிறேன் எனது முதல் சிறுகதை கோகுலத்தில் வெளியானது.  ஜூலை 94 ல் பொன்னேரியில் கம்ப்யூட்டர் படித்தது மறக்க முடியாத ஒன்று. 95,ம் வருடம் நடந்த அக்காவின் திருமணம், திருப்பதி சென்றது  ஆகியவையும் இனிமையான நினைவுகள்.  96 ஆம் வருடம் ஆடிய கிரிக்கெட், 97 ல் நண்பர்கள் சங்கத்தில் விழா நடத்தியது. 99ம் வருடம் கோயிலில் நடந்த பங்குனி உத்திரத் திருவிழா,2000 ஆண்டில் டெலிபோன் பூத் வைத்தது 2001ல் நடைபெற்ற தங்கையின் திருமணம், குமுதம் பக்தியில் எங்கள் ஊர் கோயில் பற்றி எழுதியது, 2004ல் டியுசனில் படித்தவர்கள் பத்தாம் வகுப்புத்தேர்வில் பள்ளியில் முதல்மாணவர்களாக வந்தது. முதலில் வாங்கிய டிவிஎஸ் பிப்டி! 
         2005ல் தங்கையுடன் சென்ற இராமேஸ்வரம் சுற்றுலா, மீண்டும் கம்ப்யூட்டர் டீச்சர் கோர்ஸ் படித்தது, 2006-07களில் சில பள்ளிகளில் ஆசிரியர் வேலை செய்தது, 2008ல் திருமணம், 2009ல் வேதஜனனி பிறந்தது என்று எத்தனை எத்தனை நல்ல நினைவுகள்! 2011 ல் முதல் முதலாய் தளிர் வலைப்பூ தொடங்கியது, வலைச்சரத்தில் திரு மேலையூர் ராஜாவால் அறிமுகம் ஆனது. தமிழ்தோட்டம் என்ற கருத்துகளத்தில் நானூறுக்கும் மேல் ஹைக்கூ கவிதைகள் எழுதி நண்பர்களை பெற்றது.2012ல் எங்கள் ஊர் கோவில் கும்பாபிஷேகம் முன் நின்று நடத்தியது, மாலைமலரில் வெளிவந்த கட்டுரை, 2013ல் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டது, பாக்யா வார இதழில் வந்த  என் படைப்புக்கள் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா பைக் 

  இப்படி இந்த நாற்பது வருடங்களில் நிறைய இனிமையான நினைவுகள் சேர்ந்திருக்கும் அந்த நினைவுகளோடு சென்றவருடம் ஒன்று சொல்லியிருந்தேன்.சொந்தமாக ஓர் வீட்டு மனை வாங்க வேண்டும் என்று. உங்களின் ஆசியினால் அது நிறைவேறிவிட்டது.  இனி வீடு கட்ட வேண்டும்.

குறைந்த பட்சம் எனது சில படைப்புக்களையாவது மின் நூலாகவாது வெளியிட வேண்டும். இது இரண்டும் இந்த வருட ஆசைகள். வலைச்சரத்தின் ஆசிரியராக இரண்டாவது முறை பணியாற்ற உள்ளது இந்த வருடத்தின் நிறைவேறிய ஆசை!

     அச்சு ஊடகங்களில் என்னுடைய படைப்புக்கள் சிலவற்றை இந்த வருடம் அரங்கேற்றிவிட வேண்டும் என்பது ஓர் தீராத ஆவல். நிறைவேறும் என்று நினைக்கின்றேன்.

   மற்றபடி தளிர் தளம் இன்னும் மெருகேற்றி வெளியிட ஆவல் உள்ளது. வலைதளத்தில் எழுதி எழுதாமல் உள்ள அனைத்து நண்பர்களும் மீண்டும் எழுதவேண்டும் வலையுலகம் செழிக்க வேண்டும் என்பதும் விருப்பம்.

  இவையெல்லாம் நிறைவேறவேண்டும்! அதோடு கொன்றைவனத் தம்பிரான் மீண்டும் வந்து தளிரின் மாறுதல் பற்றி ஓர் கருத்து வைக்க வேண்டும் என்பதும் விருப்பம். இதெல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

   மருமகனுக்கு பெயர் சூட்ட சென்னை செல்கின்றேன்! மாலையில் முடிந்தால் வலையில் சந்திக்கின்றேன்! மருமகனுக்கும் உங்களின் வாழ்த்துக்களை சேர்த்து சொல்லுங்கள்! நன்றி!


களை! பாப்பா மலர்!

$
0
0
களை!


பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவினாஷ் புத்தகப்பையை தூக்கி எறிந்தான். என்ன அவினாஷ்...! இவ்வளவு கோபமா வறே? என்ன விஷயம்? காபியை கொடுத்தபடி தாய் கேட்டாள்.

காபியை குடித்து முடித்த அவினாஷ் “அம்மா நாளையிலிருந்து ஸ்கூலுக்கு போகமுடியாது” என்று கோபமாகக் கூறினான் அவினாஷ்.அதைக்கேட்ட அவனது அம்மா “ஏண்டா கண்ணா இப்படி சொல்றே? போய்வர ரொம்பகஷ்டமா இருக்கா பசங்க ஏதாவது தொந்தரவு பண்ராங்களா? படிப்பு வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமாச்சேப்பா ! என்ன விஷயம் எங்கிட்டே தைரியமா சொல்லுடா கண்ணா” என்று பரிவாக கேட்டாள்.

     உடனே அவினாஷ் அழுது விட்டான். “எங்க தமிழாசிரியர் ரொம்பக் கோவக்காரரும்மா என்னையே சும்மா திட்டுவாரு இன்னிக்கு என்னை போட்டு அடிச்சிட்டாரு இதபாரும்மா என்று முதுகைக் காட்டியவன் நான் இனிமே ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான்.

  “கண்ணா ஆசிரியர் தப்பு செய்யாம அடிக்கமாட்டாரு! நீஎன்ன தப்பு செஞ்சே?”

   அ.. அது.. வந்து.. “சொல்லு என்ன செஞ்சே?’

“பாடம் நடத்தறப்ப கவனிக்காம வெளிய வேடிக்கை பார்த்தேன்”

 “அதுக்காகவா அடிச்சாரு ?” 

 “ஆமாம்மா!”

“நான் விசாரிக்கறேன் நீ பிடிவாதம் பிடிக்காம ஸ்கூலுக்கு போகனும் சரியா!”

  அறை குறையாய் சம்மதித்தான் அவினாஷ். 

மறுநாள் அந்த தமிழாசிரியரை சந்தித்தாள் அவினாஷின் தாய். ‘நான் அவனை காரணமில்லாம அடிக்கலம்மா! பாடம் நடத்தறபோது கவனிக்காம மத்த பசங்களை வம்புக்கு இழுப்பது வகுப்பு நடக்கும்போது சிரிப்பு மூட்டறது சின்னபசங்களை அடிக்கிறதுன்னு அவன் பண்ற வால் தனங்கள் அதிகம்.இப்படி பல தவறுகள் செஞ்ச அவனை பலமுறை கண்டிச்ச நான் அன்னிக்கு கொஞ்சம் நிதானத்த இழந்துட்டேன் அதான் அடிக்கும்படியா ஆயிடிச்சி மத்தபடி பசங்கள பிரம்பால திருத்தறத விட அன்பால திருத்தறதயே நான் விரும்பறவன். அவன்கிட்ட இருக்கற அந்த பிடிவாதமும் குறும்பும் இல்லாட்டி அவன் நல்ல பையன் தான் அந்த கெட்ட குணத்த நாமதான் களையெடுக்கணும்.’ என்றார் தமிழாசிரியர்.

   “ரொம்பநன்றி ஐயா! அவனை எப்படியாவது திருத்த முயற்சி பண்றேன் என்று விடைபெற்றுக்கொண்டு மகனை எப்படி திருத்தலாம் என்ற யோசனையுடன் வீட்டிற்கு வந்தாள் அவினாஷின் தாய்.

  தோட்டத்தில் இருந்தான் அவினாஷ். “என்ன அவினாஷ் என்ன பண்றே?”

  “கீரைப் பாத்தியிலே களை எடுத்தேம்மா!”

 “எதுக்கு?”

 “என்னம்மா கேள்வி இது? களையை அப்படியே விட்டா கீரை எப்படி நல்லா வளரும்?”

“நல்ல பதில்! ஆமாம் முடி வெட்டிட்டு வந்திருக்கே போல?”

‘ஆமாம்மா!”

 “ஏன்? அப்படியே விட்டிருக்கலாம்லே!”

  ‘ என்னம்மா ஆச்சு உனக்கு இப்படியெல்லாம் கேக்கற?”

“எனக்கு ஒன்னும் ஆகலே நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லு?”

 ‘அப்படியே முடிய வளரவிட்டா வளர்ந்து அசிங்கமாகி சிக்கு பிடிச்சுடாதா?”

 ‘நல்லா சொன்னே! எப்படி கீரைப் பாத்தியை களை எடுக்காம விட்டா கீரையை களைஅழிச்சிடுமோ முடிவெட்டலன்னா சிக்கு பிடிச்சிடுமோ அதுபோலதான் சின்ன பசங்களான நீங்களும்”

  “ஒன்னுமே புரியலம்மா!”

 “சொல்றேன், வளர்ற செடிகள்ல களைகள் ஊடுறுவதுபோல வளர்ற பசங்களான உங்க கிட்ட தவறான செய்கைகளான பிடிவாதம், பிறரை அடித்தல், கோள்மூட்டல், விளையாட்டுத்தனம் போன்றவை வளருது அவற்றை முளையிலேயே கிள்ளி எறியணும்.”

  “ எப்படி நீ கீரை பாத்தியிலே களை எடுத்தியோ அது போல ஆசிரியர்கள் உன்கிட்ட இருக்கற தீய குணங்கள களை எடுக்கிறாங்க! முதல்ல அன்பா பின்னர் சற்று கடுமையா பூச்சடிச்ச செடிக்கு மருந்தடிக்கிற மாதிரி!”

  “இப்ப புரியுதா இனி ஒழுங்கா ஸ்கூலுக்கு போவியா?”

  “ அம்மா என்னை மன்னிச்சுடும்மா இப்பவே என் தீய குணங்களை எல்லாம் விட்டுடறேன். நாலையிலருந்து ஒழுங்கா ஸ்கூலுக்கு போய் நல்ல பிள்ளையா நடந்துக்கறேன்” என்ற மகனை தழுவிக் கொண்டாள் அந்த பாசத்தாய்.

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

தித்திக்கும் தமிழ்! பகுதி 13 வேகமில்லா குதிரை!

$
0
0

    அன்பார்ந்த நண்பர்களே! நாம் எங்காவது அவசரமாக பேருந்தில் பயணித்துக் கொண்டிருப்போம். வண்டி நகராது. அப்படியே முக்கி முனகிச் செல்லும் வழியெங்கும் நெரிசலில் வண்டிச் சிக்கிக் கொள்ளும். நம் எண்ண ஓட்டம் எங்கோ கடந்து கொண்டிருக்க பேருந்தோ நின்ற இடத்திலேயே நின்றிருக்கும். நமக்கோ ஆத்திரம் மிகும்.
      
   “ என்னப்பா டிரைவர் இவர்! பஸ் ஓட்டறாரா? இல்லை  கட்டை வண்டி ஓட்டறாரா? ஆமை கூட வேகமா போவும் போல! இவர் இவ்வளவு வேகமே இல்லாம ஓட்டறார்!” என புலம்புவோம்.
   
    சாதாரண மனிதர்கள் நாம் இப்படி என்றால், காதலர்கள் நிலை! காதலன் ஒருவன் காதலியை சந்திக்க அவசரமாக செல்லும் போது நெரிசலில் சிக்கிக் கொண்டால் அவன் நிலை என்ன? இன்றைய நிலையில் காதலி அவனை கழட்டி விட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லைதான்! 
   
  அப்படித்தான் அன்றும் தலைவன் தலைவியைச் சந்திக்க ஆவலோடு குதிரை பூட்டிய ரதத்தில் பயணிக்கின்றான். ரதமோ வேகமாக சென்றாலும்மெதுவாக செல்வதாகவே அவன் மனதிற்கு தோன்றுகின்றது. ரத ஓட்டியை கடிந்து கொள்கின்றான். அப்படி கடிந்துகொள்கையில் அவன் கையாளும் உவமைகள் மிகவும் ரசிக்கத் தக்கதாக  உள்ளது.

          இதோ பாடல்!


கடுவளைக்கும் கண்ணி கார் என்ற போதினில் கை கழன்று
விடுவளைக் குள்ள விசையிலை யேமிதி லைச்சிலையே.
நடுவளைக்  கும்கொண்டல் நாரணன் கேரள நாட்டில் அண்டத்
தொடுவளைக் கும்பரித்  தேர்வல வா! நமது ஊர்பரிக்கே.


விளக்கம்: மிதிலை  நகரத்தில் சனகனிடம் இருந்த வில்லை நடுவில் பற்றி வளைத்து ஒடித்த மேகம் போன்ற வண்ணமுடைய திருமாலின் சேர நாட்டில், உலகம் முழுவதும் சுற்றிவரும் இயல்புடைய  குதிரைப் பூட்டப்பட்ட தேரை ஓட்டும் தேர்வலவனே!  நஞ்சினை தன்னிடத்தில் கொண்ட  கண்ணையுடைய தலைவி, “கார்” என்றதும்  (கார்= அச்சம்) அவளுடைய கைகளில் இருந்து கழன்றுவிழும் வளையலின் வேகம் கூட நமது  தேரில் பூட்டிய குதிரைகளுக்கு இல்லையே ! 

   தன்னுடைய வேலையை முடித்து திரும்பும் தலைவன் தலைவியை சந்திக்க ஆவலாக இருக்கின்றான். ஆனால் தேர் வேகமாக செல்லவில்லை என்று அவன் மனம் சொல்கின்றது. அவனுடைய மனோவேகத்திற்கு தேர் வேகம் இல்லை! அதற்காக  இப்படி சொல்கிறான் பெண்களின் கைகளில் இருந்து கழன்று விழும் வளையல்களின் வேகம் கூட நம்முடைய குதிரைகளுக்கு இல்லையே? இன்னும் விரைவாக குதிரைகளை செலுத்து என்கின்றான் தலைவன்.

   சிறப்பான உவமைகள் அல்லவா?

சென்றவாரம் கேட்டிருந்த விடுகவிக்கான விடை: பசுவினுடைய நெய்யை பூனை குடித்தது. தேனை உண்ட ஈ அதில் விழுந்து மயங்கி கிடந்தது.  கன்னியின் கூந்தலில் பூத்த காயை வெட்டினார்கள் அது வாழை ஆகும்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை  பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Viewing all 1537 articles
Browse latest View live