Quantcast
Channel: தளிர்
Viewing all 1537 articles
Browse latest View live

பவானித் தாயே! பாரங்களை நீக்குவாயே! பெரியபாளையம் பவானி அம்மன் தரிசனம்!

$
0
0

எத்தனையோ வடிவுகளில் உலகினை காத்து அருளாட்சி செய்துவருகின்றாள் அன்னை. புற்றிலே சுயம்பாகத் தோன்றி பவானி என்ற நாமம் தாங்கி பக்தர்களின் துயர் நீக்கி குலம் வளர பரிவுகாட்டுகின்றாள் பெரியபாளையம் பவானி அம்மன்.

   முன்னொரு காலத்தில் ஆந்திரத்தில் இருந்து வளையல் வியாபாரிகள் சென்னை வந்து வியாபாரம் செய்வது வழக்கம். அப்படி ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு வர பெரியபாளையம் வழியாக வருவது வழக்கம். அப்படி ஒரு வியாபாரி வளையல் மூட்டைகளுடன் இந்த வழியே வந்திருக்கிறார். கடும் வெயில் களைப்பு மேலிட ஆற்றங்கரையில் நீர் அருந்தி அங்கே இருந்த ஓர் வேப்ப மரத்தடியில் மூட்டையை வைத்துவிட்டு தலை சாய்த்து இருக்கிறார்.

  வெயில், களைப்பு, மேலும் இதமான வேப்பங்காற்று வீச அப்படியே கண்ணுறங்கிப் போய் இருக்கின்றார். பின்னர் விழித்தபோது அவரது அருகில் வைத்திருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. அதுதானே அவரது முதல். பதறிப்போய் சுற்றும் முற்றும் தேடியுள்ளார். அப்போது அருகில் இருந்த ஓர் புதரினில் இருந்த புற்றுக்குள் இந்த மூட்டை கிடந்துள்ளது. நல்ல பெரிய புற்று.

   பாம்பு புற்று என்பதால் பயந்து போய் குச்சி விட்டு மூட்டையை எடுக்க முயற்சித்துள்ளார் வியாபாரி. வளையல் மூட்டையை எடுக்க முடியவில்லை. நெடுநேரம் முயன்றும் முடியாததால் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று இரவு அவர் கனவில் அன்னை ரேணுகா தேவி தோன்றி, வியாபாரியே! புற்றினுள் வளையல் சிக்கிய அந்த இடத்தில் நான் குடிகொண்டுள்ளேன். எனக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடு! என்று உத்தரவிட்டுள்ளார்.

  மறுதினமே பெரியபாளையம் வந்து அங்குள்ள ஊர் மக்களிடம் கனவில் கண்ட காட்சியைக் கூறி உள்ளார். ஊர்மக்களும் அவருமாக திரண்டு புற்றை மண்வெட்டியில் சிதைத்து தோண்டியுள்ளனர். அப்போது “ணங்” என்ற ஓசை கேட்டதுடன் புற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. அனைவரும் பதறிப்போயினர். வளையல் வியாபாரி தன் கையில் இருந்த மஞ்சளால் சுயம்புவாக தோன்றிய அன்னையின் தலையில் அப்பினார். இரத்தம் நின்றது. அனைவரும் வணங்கினர்.

   அங்கேயே அன்னைக்கு ஆலயம் எழுப்பினர். அன்னை ரேணுகா தேவியை பவானி என்று அழைத்தனர். புற்றில் இருந்து சுயம்புவாக தோன்றியவளாதலால் விக்கிரகம் இல்லை. சுதை சிற்பம் உண்டு. சுயம்பு லிங்கத்தின் மீது வெள்ளிக்கவசம் தலை மட்டும் சார்த்தப்படுகின்றது. பவானி என்று அழைத்தாலும் ரேணுகா தேவியின் அம்சமாக மாரியம்மனாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள்.

  வேப்ப மரத்தடியில் தோன்றியதாலோ என்னவோ இங்கு வேப்பிலை ஆடை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் விஷேசமாக அமைந்துள்ளது. ஆரண்ய நதிக்கரையோரம் அழகுற அமைந்துள்ளது ஆலயம். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் ஞாயிறு தொடங்கி பத்து வாரங்கள் அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள். அப்போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

   முன்பு சிறிய கோயிலாக இருந்த ஆலயம், தற்போது புணருத்திரா தாரணம் செய்விக்கப்பட்டு பெரியதாக  வளர்த்திக் கட்டப்பட்டுள்ளது. பவானி அம்மன் தவிர விநாயகர், மாதங்கி அம்மன், பெருமாள் சன்னதிகள் சுற்றுப் பிராகாரத்தில் உண்டு.

   திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் இது. ஆடிமாதத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து பரிவு காட்டுகின்றாள் அன்னை பவானி.

 கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம்.  அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம்.  வெளிப் பிரஹாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கு ஒரு சந்நிதியும் காணப்படுகிறது.  பரசுராமர் இங்கே வந்திருப்பதன் காரணம் இவள் ரேணுகா தேவி என்பதால் இருக்கலாம்.  நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர்  என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள்.  மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர்.  

பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள்.


இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி, உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.

உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரியபாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் கணவன் நோய்வாய் பட்டிருந்தால் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

கோவிலுக்குள் நுழையும் பகுதி இரு பக்கமும் கடைகளால் நிறைந்துள்ளது. அதை கடந்து சென்றால் முதலில் விநாயகரை வணங்கலாம். பிறகு விநாயகர் சன்னதி பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும். அதில் இருந்து பிரகார மண்டபத்துக்கு வந்து விடலாம். முன் பக்க வாசல் வழியாக வந்தால் கருவறையில் பவானி அம்மனின் `பளீர்'தோற்றத்தை கண்டு மனம் உருகி தரிசிக்கலாம்.

இதையடுத்து உள்ள சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது. உற்சவரை வணங்கி விட்டு அருகில் உள்ள வாசல் வழியாக பெரிய பிரகாரத்துக்கு வரலாம். அந்த பிரகாரத்தை வலப்புறமாக சுற்றி வருதல் வேண்டும். அந்த பிரகாரப் பாதையில் வள்ளி-தெய்வானை சமேத முருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதி உள்ளன. இந்த சன்னதிகளுக்கும் சென்று தவறாது வழிபட வேண்டும்.

கோவில் வலது பக்கத்தில் சற்றுத் தொலைவில் புற்று மண்டபம் உள்ளது. அங்கு சென்றும் வழிபட வேண்டும். பிறகு கோவில் வளாகத்தில் அமர்ந்து வழிபாட்டை நிறைவு செய்யலாம். 

14 வாரம் ஆடிவிழா:


பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிக விமரிசையுடன் 14 வாரங்கள் நடைபெறுகிறது.

ஆடிமாதம் முதல்வாரம் -சூரியபிரபை

இரண்டாவது வாரம் -குதிரை வாகனம்

மூன்றாவது வாரம் -நாகவாகனம்

நான்காவது வாரம் -சிம்ம வாகனம்

ஆவணி மாதம் 5-வது வாரம் -அன்னவாகனம்

ஆறாவது வாரம் -சந்திரப்பிரபை

7-வது வாரம் முதல் 10-வது வாரம் வரை அன்னை பவனி வரும் ரதோற்சவம்.

இது வாண வேடிக்கைகளுடன், மேள வாத்தியங்களுடன் விமரிசையாக நடைபெறும். இவ்விழாவின் முடிவாக நான்கு வாரங்கள் தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

  பாளையம் என்றால் படைவீடு என்பது பொருளாகும். பெரிய பாளையம் என்றாள் பெரிய படைவீடு என்று பொருளாகின்றது. பெரிய படைவீட்டில் தாயார் ரேணுகா தேவி பவானியாக வீற்றிருந்து பக்தர்களின் குறைகளை பரிவுடன் கேட்டு போக்கி வருகின்றாள்.

இவ்வுலகில் எது பொய்த்தாலும், பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா போன்ற கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள். உயிர்ப்பலி இடுவது தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் இவ்வன்னைக்கு ஆடு, கோழி முதலியவற்றை உயிருடன் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.  ஒரு முறை பெரிய பாளையம் சென்றுவருவோம்! அன்னையின் கருணை மழையில் நனைவோம்!

ஆலய இருப்பிடம்: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் மார்க்கம்( வழி புத்தூர்) காரனோடை பாலத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரிய பாளையம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்தும் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தடம் எண் 592, 92, 514 ஆகிய பேருந்துகள் பெரியபாளையம் செல்லும்.

(படங்கள் இணையத்தில் இருந்து)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை  பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!

$
0
0
அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!


முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அறிவு மிகுந்த முனியன் என்பவன் அவனிடன் வேலைக்காரனாக இருந்தான். ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அரசன் களைப்புடன் அரண்மனைக்கு திரும்பிக் கொண்டு இருந்தான்.

   அரசன் வருவதை அறியாத முனியன் மற்ற வேலைக்காரர்களிடம்; என்னைப்போன்ற அறிவாளி இந்த நாட்டில் யாருமே இல்லை! ஏதோ என்நேரம் சரியில்லாததால் வேலைக்காரனாக இருக்கிறேன் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் நான் அமைச்சனாகி விடுவேன் என்று பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தான்.

    பகலில் பக்கம் பார்த்து பேசு! இரவில் அதைக்கூட பேசாதே என்பார்கள்! முனியன் அரசர் வருவதை கவனிக்காமல் பேசிய  இந்த பேச்சு அரசரின் காதில் விழுந்துவிட்டது. இவன் என்ன பெரிய புத்திசாலியா? இவனுக்கு ஒரு சோதனை வைப்போம் என்று கோபம் கொண்டான் அரசன். டேய்! முனியா! நீ என்ன அவ்வளவு பெரிய புத்திசாலியா? நீ அறிவாளியா இல்லையா என்பதை நான் கண்டுபிடிக்கிறேன். வீண் பெருமை பேசியதால் நீ உன் உயிரை இழக்கப் போகிறாய் என்றான்  மிகுந்த கோபத்துடன் அரசன்.

   இதைக்கேட்டு  கொஞ்சமும் பயப்படவில்லை முனியன், இனி நமக்கு நல்ல காலம்தான்! என்று நினைப்புடன் அரசே! என்ன சோதனை வைக்கப்போகிறீர்கள்? என்று பணிவுடன் கேட்டான்.

   “நீ கடலில் உள்ள அலைகளை எல்லாம் ஒரு வலையில் பிடித்துக் கொண்டு இங்கே வர வேண்டும் அப்படி முடியாவிட்டால் உன் உயிர் போகப்போவது உறுதி” என்று கோபத்துடன் சொன்னான் அரசன்.

    சிந்தனையில் ஆழ்ந்த முனியன், அரசே! நீங்கள் சொன்ன செயலை எளிதாக என்னால் செய்ய முடியும் அதற்கு நான் கேட்கும் பொருளை நீங்கள் எனக்கு தர வேண்டும் என்று கேட்டான்.

  யாராலும் செய்ய முடியாத இதை நீ செய்து விடுவாயா? அப்படி என்ன பொருட்கள் வேண்டும் கேள் உடனடியாக தருகிறேன்! என்றான் அரசன் இறுமாப்புடன்.

     அரசே! கடல் அலைகளை வலையில் பிடித்து இழுத்துவர கட்டளையிட்டு இருக்கிறீர்கள் அப்படி செய்ய எனக்கு கடல் மணலால் செய்யப்பட்ட வலை ஒன்று வேண்டும் எப்போது தருகிறீர்கள் என்று கேட்டான் முனியன்.

   இதை எதிர்பாராத அரசன்  அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தான். அரசே வலை கிடைத்ததும் சொல்லி அனுப்புங்கள் வருகிறேன் என்றான் முனியன்.

   அடேய்! முனியா வென்று விட்டதாக நினைக்காதே! நாளை நீ அரசவைக்கு வந்து சேர்! அங்கு உனக்குஇன்னொரு போட்டி காத்திருக்கிறது என்று அரசன் ஆத்திரத்துடன் கூறி சென்று விட்டான்.

   மறுநாள் அரசவையில் அரசன் அமர்ந்திருந்த போது முனியன் பணிவாக வந்து நின்றான். அரசன் அவனைப் பார்த்து, முனியா! நீ சமையலில் நிபுணனாமே! இதோ இந்த கோழியைக் கொண்டு நீ இருபது வகையான உணவுகளை சமையல் செய்யவேண்டும். அதைச் சாப்பிட நாங்கள் நூறு பேர் வருவோம். எங்களுக்கு வயிறார  நீ உணவு போட வேண்டும் என்றான்.

   இதைக்கேட்ட முனியன் தன் கையில் இருந்த ஒரு ஊசியை எடுத்து அரசனிடம் தந்தான். அதைப்பெற்றுக் கொண்ட அரசன் எதற்காக இந்த ஊசியை தருகிறாய்? என்று கேட்டான்.

  அரசே! ஒரு கோழியைக் கொண்டு நூறு வகையான சமையல் கூட நான் செய்யத் தயார்! அதைக் கொண்டு ஆயிரம் பேருக்கு வயிறார உணவிடவும் என்னால் முடியும். இந்த உலகில் முடியாதது என்பது கிடையவே கிடையாது. நான் கொடுத்த இந்த ஊசியை நீங்கள் யாரிடமாவது கொடுத்து அடுப்பு சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் செய்து தரச் சொல்லுங்கள் அடுப்பும் பாத்திரமும் வந்தவுடன் நீங்கள் சொன்னபடியே சமைக்கிறேன் என்றான் முனியன்.

   இந்த ஊசியில் எப்படி பாத்திரங்கள் செய்ய முடியும்? மன்னன் முனியனின் அறிவை மெச்சினான். முனியா நீ! பலே கில்லாடி!  இவ்வளவு அறிவுடைய நீ இன்று முதல் என் அமைச்சர்களில் ஒருவன்.  என்று முனியனை அமைச்சன் ஆக்கி கொண்டான்.

   தன்னுடைய அறிவு கூர்மையால் வேலைக்காரனாக இருந்து அமைச்சராக உயர்ந்த முனியனின் அறிவுத்திறமையை போற்றுவோம்!

(செவிவழிக் கதை தழுவல்)

( மீள்பதிவு)

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தித்திக்கும் தமிழ்! பகுதி 16 பலசரக்கு பை எடுத்தான்! கடுக வா! முத்துசாமி!

$
0
0
தித்திக்கும் தமிழ்!  பகுதி 16


பண்டைத் தமிழ் புலவர்களின் வார்த்தை விளையாட்டே தனி! அன்றாடம் உபயோகிக்கும் சில பொருட்களைக் கூட சேர்த்து எழுதி பொருள்பட கவிபாடி அசத்தி விடுவார்கள். தலைவன் வரக்காணோம் என்று தலைவி பிரிவுத்துயரில் இருக்கின்றாள். பிரிவுத்துயரம் எத்தனை சோகமானது.
 அத்தனை சோகம் கொண்ட தலைவி எப்படி பாடுகின்றாள் பாருங்கள்!

 பலசரக்குப் பைஎடுத்தான் வேள்; ராய புரியாள்
    பயந்தேன்என் றாள்; ‘அரிசி வசம்போ’ என்று அழுதாள்;
மலர்சூடன் சாம்பிராணி யானேன்என் றாள் நீ
    வரக்காணம் என்று அழுதுஇ துவரைஎதிர் பார்த்தாள்
அலைகடலை வைகின்றாள்; ‘என்னமாய், அக்கா
  யான்பிழைப்பேன்?” என்றாள் பேச் சுக்குமதி மதுர,
கலமுத்து சாமிசீர் அகம் இளகன் பாக்கு;
  கடுகவா! இதில்வெகு சகாயமுண்டு குணமே!

முதல் வாசிப்பில் ஒன்றும் புரியாது அல்லவா? பலசரக்கு அரிசி சூடம், சாம்பிராணி என்று ஏதோ மளிகைக் கடை வஸ்துக்களை பட்டியல் இட்டு இருக்கிறாரே என்று தோன்றும்.

   ஆனந்தம் என்ற படத்தில் மளிகைக்கடைகாரர் காதலிக்கு எழுதிய கடிதம்தான் முதலில் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் எழுதியது கவிதை அல்ல! நகைச்சுவை! இதோ இந்தப் புலவரும் அப்படி ஒரு கவிதை எழுதி இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை அல்ல கவிதை மிளிர்கின்றது.

  அழகிய சொக்கநாதம் பிள்ளை என்றொரு புலவர், இவரை ஆதரித்த வள்ளல்  முத்துசாமி வள்ளல். இந்த முத்துசாமி வள்ளலை வைத்து ஓர் தூது கவி இயற்றி இருக்கிறார் சொக்க நாதம் பிள்ளை.

   முத்துசாமி வள்ளலை நினைத்து பிரிவாற்றாமையால் வாடும் தலைவி எவ்வாறெல்லாம் வாடுகின்றாள்! அவளை வந்து விரைவில் பார்ப்பாயாக! என்று சொல்கின்றார் கவிஞர்.

  பல சரக்கு பை எடுத்தான்: மன்மதன் தன் பல அம்புகள் கொண்ட அம்புறாத் துணியை எடுத்தான்.

ராயபுரியாள் பயந்தேன் என்றாள்: ராயபுரி என்னும் ஊரில் வாழ்பவள் பயந்தேன் என்று சொன்னாள்.

அரிசி வசம்போ என்று அழுதாள்” : அரியே! சிவசம்போ எனச் சொல்லி அழுதாள்

மலர் சூடன் சாம்பிராணியானேன் என்றாள்: மலர் சூடமாட்டேன்! நான் இறக்கும் நிலையில் உள்ள பிராணியாக ஆனேன் என்றாள்.

வரக்காணோம் என்று அழுது இதுவரை எதிர்பார்த்தாள்: வள்ளல் வருவார் என்று இதுவரை எதிர்பார்த்து வராமையால்அழுகின்றாள்.

அலைகடலை வைகின்றாள்:  அலைஉடைய கடலை திட்டுகின்றாள்
என்னமாய் அக்கா யான் பிழைப்பேன்? என்றாள்:  தமக்கையே! நான் எவ்வாறு உயிர்வாழ்வேன் என்று கேட்கின்றாள்.

பேச்சுக்கு மதி மதுர கலமுத்து சாமி சீர் அகம் இளகன் பாக்கு; இனிக்க இனிக்க பேசும் அகன்ற மார்பினை உடைய முத்துசாமி வள்ளல்  உள்ளம் இளகி என்னுடன் அன்புடன் இருக்குமாறு செய் என்கிறாள்.

கடுகவா! இதில் வெகு சகாயமுண்டு குணமே!

  ஆகவே மன்னனே! நீ விரைவாக வந்து சேர்வாயாக! அது மிக்க உதவியாக இருக்கும் நன்மை ஏற்படும்.

  முத்துசாமி வள்ளலை நினைத்து ஏங்கும் ஓரு பெண்ணை தலைவியாக வைத்து இந்தப்பாடல் புனையப்பட்டுள்ளது.  இந்த பெண்ணின் மீது மன்மதன் தன் அம்புகளை வீசி விட அவள் அஞ்சிப்போய் “ அரியே! சிவ சம்போ! என்று அழுது கிடக்கின்றாள். மலர் சூடேன், என்றவள் சாகும் நிலையில் உள்ள பிராணி போல் வதங்கி  முத்துசாமி வள்ளலை எதிர்பார்த்து காத்திருந்தாள். அலைகடல் போல் அவள் உள்ளம் பொங்க, கடலை வசை பாடுகின்றாள். அலைகடலில் வாழும் லஷ்மிதேவியைப் பார்த்து அக்கா நான் எப்படி உயிர்வாழ்வேன் என்று கேட்கின்றாள். இனிக்க இனிக்க பேசி மகிழ்விக்கும் பரந்த மார்பினை உடைய முத்துசாமி வள்ளல் உள்ளம் இளகி வந்து என்னுடன் அன்புடன் இருக்குமாறு செய் என்று கேட்கின்றாள். ஆகவே மன்னனே! நீ விரைவாக வந்து இந்த பெண்ணின் சோகம் தீர்ப்பாயாக! அது மிக்க நன்மை பயக்கும் என்று சொல்கின்றார் புலவர்.

இதை அப்படியே வறுமையில் வாடிய புலவர் வள்ளலின் முகம் காணத் தவிப்பது போலக் கூட உணரலாம் அல்லவா?


மீண்டும் ஓர் சந்தர்ப்பத்தில் மீண்டுமொரு பாடலுடன் சந்திப்போம்! உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

தளிர் சென்ரியு கவிதைகள்!

$
0
0
தளிர் சென்ரியு கவிதைகள்!


முடி ஆட்சி ஒழிந்தும்
ஒழியவில்லை குடியாட்சி!
டாஸ்மாக்!

காதைத் திருகியதும்
கதறி அழுதது!
தண்ணீர் குழாய்!

கொஞ்சிப்பேசினாலும்
ரசிக்கவில்லை மனசு!
டிவி தொகுப்பாளினி!


வெளுத்ததெல்லாம் “பால்”
விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
சூதாட்டம்!

செயற்கை புன்னகையில்
சீரழிகின்றது உலகம்!
அன்னிய உணவுகள்!

கூட்டணி அமைக்க
கற்றுத்தந்தன மலர்கள்!
கதம்பம்!

விளைச்சல் மிகுந்ததும்
வீழ்ந்தது விலை!
வேதனையில் விவசாயி!

மறைத்து வைத்தாலும்
கேட்டுவாங்கப்படுகிறது கேடு!
குட்கா.

மணி அடித்து சோறு
போட்டார்கள்!
சிறையில் கடவுள்!


அடுக்குமாடிக்குள்
அடங்கிப்போயின
கிராமத்து வீடுகள்!

காய்ந்த வயல்களில்
பூத்தன கொடிகள்!
வீட்டுமனை விற்பனை!

நெரிசலில் சிக்கி
உயிரை இழந்தது
நிமிடங்கள்!

விடியும் வரை ஆட்டம்!
விடிகாலையில் தூக்கம்!
விதி ஆனது நகரம்!

நகரம் ஆனது நரகம்!
நகர மறுத்தது நீர்!
மழை!

அஸ்திவாரமில்லாத வீடுகள்!
இடிந்துவிழுந்தன!
ஏரியில் வீடுகள்!

பேசிகள் பெருகியது
அருகியது பறவை!
சிட்டுக்குருவி!

எல்லா ஊரையும்
இணைத்து வைத்தது
பேருந்துநிலையம்!


தட்டுப்பாடில்லை
சில்லறைக்கு!
பிச்சைக்காரன்!

வரம் கேட்டு வருபவனிடம்
காணிக்கை கேட்கிறார் கடவுள்!
உண்டியல்!

இழுத்தாலும் விட்டாலும்
ஈர்த்துக் கொள்கிறது மரணம்!
சிகரெட்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!


என்னது.. சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களா?

$
0
0
என்னது.. சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களா?


அலுவலகத்தில் இருந்து    அதிகப்படியான வேலைகளினால் டென்சனாக வீடு திரும்பினான் மகேஷ். அவனது செல்ல மகள் வித்யா வழக்கம் போல ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தாள். மனைவி ஹேமா கலந்து வந்து கொடுத்த காபியை உறிஞ்சியபடியே, ம்ம்! அப்புறம் என்ன விஷேசம்? என்றான் இதுவரை ஊரில் இல்லாத மாதிரி.

  ”என்னங்க நீங்க புதுசா கேட்கறீங்க? விஷேசம் அது இதுன்னு! நீங்களும் இங்கேதானே இருக்கீங்க? உங்களுக்குத் தெரியாத விஷேசம் என்ன இருக்கப் போவுது?”

    “அதுவும் சரிதான்! ஆனாலும் காலையில் எழுந்தா உடனே ஆபீஸ் போயிடறேன்! திரும்ப வர ரொம்ப லேட் ஆயிருது! எப்பவும் ஆபிஸே கதின்னு மூழ்கிடறேனா? வீட்ல என்ன நடக்குதுன்னு கூடத் தெரிய மாட்டேங்குது!”

    “நாளைக்கு நம்ம வித்யாவோட ஸ்கூல்ல கல்ச்சுரல் புரோகிராம் இருக்குங்க! சாயந்தரம் ஆறு மணிக்கு நம்ம பொண்ணு கூட பாரதியார் வேஷம் போடப் போறா ஆபிஸ்ல இருந்து அப்படியே வாங்களேன்!”
 “ என்னால எப்படி வர முடியும் ஹேமா! ஆபிஸ் அவர்ஸ் முடிஞ்சப்புறமும் நிறைய வேலைங்க இருக்கு! எல்லா வேலையையும் என் தலையில கட்டிட்டு மேனேஜர் ஹாயாக் கிளம்பிடுவார்! நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு வர லேட்டாயிருதுன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன்! நாளைக்கு வீக் எண்ட் வேற சான்ஸே இல்லை!” என்றான் .
   இதைக்கேட்டுக் கொண்டிருந்த வித்யாவின் முகம் சுண்டிப்போனது.
 “அப்ப! நம்ம வித்யாவை  சுஜா மிஸ் அடிச்சுட்டாங்களாம்! அதைக் கேட்க கூட நீங்க வரமாட்டீங்களா?”

     “இது எப்போ நடந்தது? குழந்தைகளை எப்படி நடத்தனும்னு தெரியாத அவங்க எப்படி டீச்சர் ஆனாங்க?”

   ”இதை என் கிட்டே கேட்டா எப்படி? வந்து அவங்க கிட்டே கேளுங்க!”
  ”கட்டாயம் இதுக்காவது பர்மிஷன் போட்டுட்டு வரேன்! நல்லா நாக்கை பிடுங்கிக்கறமாதிரி நாலு கேள்வி கேட்காம விட மாட்டேன்! பிஞ்சு குழந்தையை எதுக்காக அடிக்கிறாங்க அவங்க? சரியா பதில் சொல்லாம போகட்டும் பிரின்ஸ்பால் வரை போவேன். அப்புறம் சி.இ.ஒ கூட எனக்குத் தெரிஞ்சவர்தான் அவர்கிட்டேயும் ஒரு கம்ப்ளைண்ட் கொடுப்பேன்.”

  ”இதெல்லாம் இங்க பேசி ஒரு பிரயோசனமும் இல்லே! அங்க நீங்க வந்து கேட்டாத்தானே! நீங்க எப்பவாது ஒரு முறை அப்படி எட்டி பார்த்திருப்பீங்களா? அப்ப அவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்? என்னை மாதிரி லேடீஸ்கிட்ட எதாவது சால்ஜாப்பு சொல்லி விட்டுடறாங்க!”
   “ எங்கேம்மா முடியுது! நாளைக்கு கட்டாயம் வரேன்! என் புள்ளையை அடிச்ச அந்த மிஸ்ஸை சும்மா விடமாட்டேன்! ஆமா! நீ அந்த மிஸ்ஸை எதுவும் கேக்கலையா? சும்மாவா வந்தே!”
   “கேட்டேனே! நான் சும்மா தட்டித்தான் கொடுத்தேன்! அடிக்கலைன்னு சொல்றாங்க!”
  அதைக்கேட்டுட்டு நீ சும்மா வந்துட்டியாக்கும்! நாளைக்கு வச்சிக்கறேன் கச்சேரி!.

   மறுநாள் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வித்யாவின் பள்ளியில் இருந்தான் மகேஷ். பாரதியார் வேஷம் போட்டுக்கொண்டிருந்த வித்யா ஓடி வந்து  ஹை அப்பா! என்று கட்டிக்கொண்டாள். “ நல்ல வேளை! நீங்க வராம போயிடப்போறிங்கன்னு பயந்துட்டு இருந்தேன்!” என்றாள் ஹேமா.

   “ அதெப்படி வராம போயிருவேன்! என் புள்ளையை அடிச்சு இருக்காங்க! அவங்களை சும்மா விடுவேனா?” எங்க அந்த மிஸ் வா! ஹெட்மிஸ்டரஸ் கிட்ட போய் சொல்லுவோம்.

  அதெல்லாம் வேணாம்! அதோ புள்ளைகளுக்கு வேஷம் போட்டு விட்டுட்டு இருக்காங்களே! அவங்கதான் சுஜா மிஸ்! நேரடியாவா பாத்து கேட்டுரலாம் வாங்க!”

    ”அந்த அறையினுள் நுழையும் போதே! அடடே வித்யா அம்மாவா? வாங்கம்மா! வாங்க சார்! வித்யாவை ஸ்கூல்ல சேத்து விடும்போது பார்த்தது! இப்பவாது வந்தீங்களே!” சுஜா மிஸ் வரவேற்க

  முகத்தில் இல்லாத கோபத்தை வரவைத்துக் கொண்டான் மகேஷ். “ அதெல்லாம் இருக்கட்டும் மிஸ்! நீங்க எப்படி என் பொண்ணை அடிக்கலாம்? நீங்க எல்லாம் பி. எட் ல என்னத்தை படிச்சு கிழிச்சீங்க! சைல்ட் சைக்காலஜி தெரியுமா? சின்ன குழந்தைங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாத உங்களைப் போய் டீச்சரா போட்டு இருக்காங்களே! நீங்க இதுக்கு பதில் சொல்லியே ஆகனும். இல்லேனா.. ஹெட்மிஸ் கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணுவேன். சி.இ. ஓ கூட எனக்கு தெரிஞ்சவர்தான் அவர்கிட்டே கூட இந்த விஷயத்தை கொண்டு போவேன்…” படபடவென்று பொரிந்தான்.

   “ ரிலாக்ஸ் மிஸ்டர் மகேஷ்! கூல்டவுன்! நான் உங்க பொண்ணை அடிச்சேன்! ஆமா முதுகுல லேசா தட்டிக் கொடுத்தேன்! இல்லேங்கலியே!”
   “பார்த்தீங்களா? நீங்களே ஒத்துக்கிட்டீங்க.. ஒரு சின்ன குழந்தையை எப்படி நீங்க அடிக்கலாம்?”

  இருங்க மிஸ்டர் மகேஷ்! நான் நடந்ததை சொல்லிடறேன்! அப்புறம் நீங்க என்ன செய்யணுமோ செய்துக்கங்க!  உங்களுக்கு இவ ஒரு குழந்தைதான்! எங்களுக்கு இப்படி ஆயிரக்கணக்கான குழந்தைங்க இருக்காங்க! எது செய்தாலும் அவங்க நல்லதுக்குத்தான் செய்வோம்! நேத்து என்ன நடந்தது தெரியுமா?

   இன்னிக்கு கல்சுரல் உங்க பொண்ணுதான் ஹைலைட்! பாரதியார் வேஷம் போட்டு அவ பேசப்போற டயலாக் அவ்ளோ அழகா இருக்கும்! திடீர்னு நான் புரோகிராம்ல கலந்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறாள். அழறா.. ஏன்? கேட்டா பதிலே வரலை!

   பதிலை வரவழைக்கிறதுக்கு நான் எவ்வளவு பட்டிருப்பேன் தெரியுமா? கடைசியா அவ என்ன சொன்னா தெரியுமா? நான் என்ன வேஷம் போட்டு என்ன பிரயோசனம்? எங்க அப்பா வந்து பார்க்க மாட்டாரே! ஆபீஸ் இருக்குன்னு சொல்லிருவாரே! அப்படின்னு ஓன்னு அழறா…

    அப்பா கண்டிப்பா வருவாருன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா… மிஸ் இதுவரைக்கும் அவர் எந்த புரோகிராமாவது வந்து இருக்காரா? புரோகிரஸ் கார்ட்ல கூட அம்மாத்தானே கையெழுத்து போடறாங்க! பேரண்ட்ஸ் மீட்டுக்கு கூட வந்தது இல்லே! வீட்ல நான் என்ன பண்றேன்னு கூட பார்க்க அவருக்கு நேரம் இல்லே! அவர் வரமாட்டார்னு அழறா.

      அப்புறமா அவளை சமாதானப் படுத்தி நாளைக்கு கண்டிப்பா அப்பா வருவார்னு சொல்லி நடிக்க ப்ராக்டீஸ் கொடுத்தேன். உங்க வொய்ப் வந்தப்ப நடந்ததை சொல்லி ஒரு டிராமா போட்டு நான் அடிச்சுதா சொல்லி உங்களை இங்க வரவழைக்க வேண்டியதாப் போச்சு!

   எப்பவுமே ஆபிஸ் ஆபீஸ்னு இருக்காதீங்க சார்! எனக்கு சைக்காலஜி பத்தி சொன்ன உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை! இந்த வயசுல பசங்க நிறைய எதிர்பார்ப்பாங்க! அப்பா அம்மா கிட்ட இருந்து ஒரு சின்ன ஊக்கம், உற்சாகமூட்டும் பேச்சு! ஆறுதல் வார்த்தை இதெல்லாம் கிடைக்காதான்னு ஏங்குவாங்க! அவங்களுக்காகவும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்க! அவங்க மனசை புரிஞ்சு நடந்துக்கங்க! உங்க பாசம் நேசம் கிடைக்காம வித்யா ரொம்பவும் ஏங்கிப் போயிருக்கா! இது அப்படியே தொடர்ந்தா அவங்க மனசு பாதிக்கும். அப்புறம் அதுவே பெரிய வியாதியா மாறிடும். அலுவலக டென்சனை அங்கேயே விட்டுடுங்க! வீட்டுக்கு வந்தா பசங்க கூட கொஞ்சம் விளையாடுங்க! அவங்க ஸ்கூல்ல என்ன நடந்துதுன்னு கொஞ்சம் விசாரியுங்க!  அப்புறம் பாருங்க அவங்க கிட்ட நடக்கிற மாறுதல்களை!”

   ரொம்ப சமாதானப் படுத்தியும் நடிக்க மறுத்த உங்க பொண்ணை சின்னதா ஒரு தட்டு தட்டி என்கரேஜ் பண்ணி நடிக்க வைக்க வேண்டியதாப் போச்சு! அதுக்கு சாரி கேட்டுக்கறேன்! இனிமே நீங்க எந்த கம்ப்ளைண்ட் கொடுக்கிறதா இருந்தாலும் கொடுங்க! நான் ஹேண்ட்ல் பண்ணிக்கறேன்!” சுஜா மிஸ் சொல்லி முடிக்க மகேஷ் தலை கவிழ்ந்தான்.

   முதல் முறையாக தன் தவறை உணர்ந்தான். இத்தனை நாள் குழந்தையை கவனிக்காமல் அது பாசத்திற்கு ஏங்கியதை கவனிக்காமல் அலுவலகமே கதியென இருந்துவிட்டது அவனை குத்தியது.

  “ ஸாரி மிஸ்! என் கண்ணை திறந்துவிட்டிருக்கீங்க! ஐயம் எக்ஸ்டீரிம்லி சாரி! இனிமே என் பொண்ணுக்காகவும் நேரத்தை ஒதுக்குவேன்! இன்னிக்கு என் பொண்ணோட புரோக்ராமை பார்த்துட்டுதான் மறுவேலை!  என்றான் தெளிந்தவனாக.
  
டிஸ்கி} இந்த தொடர் பதிவுக்கு எனக்கு அழைப்பில்லை! அழையா விருந்தாளியாக கலந்துகொள்ள முடிவு செய்து யோசித்துக் கொண்டிருக்கையிலேயே ஆளாளுக்கு ஒவ்வொருவிதமாக சிந்தித்து அசத்திவிட்டார்கள். இன்று காலையில் திடிரென உதித்த ஓர் பொறி இந்த கதையை உருவாக்கிவிட்டது. அவசரகதியில் உருவாக்கம்! இன்று இதுவரை பதிவு எழுதாமையாமையால் அதை அப்படியே பதிவிடுகிறேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி!

$
0
0


 இராமேஸ்வரத்தில் உதித்த இந்தியாவின் விடிவெள்ளி!
 இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவன்!
 மாணவர்களுக்கோர் வழிகாட்டி!
 மாநிலம் மட்டுமல்ல! “மா” நிலம் விரும்பும் மனிதநேயர்!
 கனவை விதைத்து நினைவாய் ஆக்க சொன்னவர்!
 கவிதை உள்ளம் கொண்டவர்!
 மாபெரும் அறிவியல் அறிஞராய் வேர்விட்டு
 மக்களின் தலைவராய் குடிபுகுந்தார்!
 எளிமை நேர்மை உறுதியுடனே
எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்
தள்ளா வயதிலும் அவர் உழைத்தார்!
வல்லரசு கனவினை நனவாக்க
வாலிபப் படையொன்று உருவாக்க
கல்விக் கூடங்களை அவர் தேர்ந்தெடுத்தார்!
பள்ளிப் பிள்ளைகளோடு கலந்துரையாடி
நாளைய பாரதம் உருவாக்கினார்!
கற்றார் அவர் தம் கருத்துக்கள்
காலனைக் கூட கவர்ந்ததுவே! ஐயோ! அவனுமே
கலாமின் உயிர்தனை கவர்ந்துவிட்டான்!
கவர்ந்தது உயிரை மட்டும்தான்!
கலாமின் சிந்தனை விதைகள் விருட்சங்கள் ஆகிடுமே!
கனவு மெய்ப்பட செய்வது நமது கடமையாகுமே!

மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்! அவர் கனவை நினைவாக்க உறுதி ஏற்போம்!


தமிழக அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்! கதம்ப சோறு! பகுதி 63

$
0
0
கதம்ப சோறு!

 தமிழக அரசியல்கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்!

 தீடிரென தமிழகத்து அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது ஓர் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் உதித்துவிட்டது. உடனே வரிந்து கட்டிக்கொண்டு ஆளாளுக்கு மதுவிலக்கு என்று அறிக்கைவிட ஆரம்பித்து மீடியாக்களில் வலம் வந்தனர். ஆனால் பாவம் இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்களுக்கு எல்லாம் குடிமகன்கள் கொஞ்சமும் பயப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் எப்படியாவது சரக்கு கிடைத்துவிடும் என்று தெரியும். அதனால் பயப்படாமல் குடித்துக் கொண்டிருந்தார்கள். தமிழக அரசும் டாஸ்மாக்கை மூடப்போவது போல ஒரு பாவ்லா ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் வழக்கம் போல் குடிமகன்களுக்கு எந்தபாதிப்பும் இல்லை! புதிதாக எலைட் பார்கள் திறக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். தலைக்கவசம் மீது இருக்கும் அக்கறைகூட குடிவிலக்கில் இல்லை அரசுக்கு. இரண்டுக்குமே காரணம் வருமானம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மதுவிலக்கைச்சொல்லி ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக நினைக்கிறது. குடிமக்களின் ஆதரவோடு ஜெயித்துவிடலாம் என அம்மா திமுக நினைக்கிறது. பணநாயகம் இருக்கும் வரையில் உண்மையான ஜனநாயகத்திற்கு ஏது மதிப்பு ?

வ்யாபம் ஊழல்!

    காங்கிரஸ் ஆட்சியை ஊழலாட்சி என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியும் இப்போது கேலிக்கூத்து ஆகிவிட்டது. வ்யாபம் என்ற (நம்ம ஊர் டி.என்.பி,எஸி தேர்வுத்துறை போன்றது) அமைப்பில் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று பல போலிகளை உருவாக்கி உள்ளார்கள். இந்த ஊழலில் பெரும் பங்கு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது என்று கண்டறிந்து உள்ளார்கள். உடனே அந்த மாநில முதல்வர் பதவி விலகவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்த விசாரணைக் கமிஷன் அமைக்க மறுத்த முதல்வர் இறங்கி வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பலரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது இந்த ஊழல். வ்யாபத்தில் எங்கும் ஊழல் வ்யாபித்து இருக்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஊழல் பேர்வழிகளை சகித்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.

எம்.எஸ்.வி- அப்துல் கலாம் மறைவு:

   மெல்லிசைமன்னரின் மறைவு இசை ரசிகர்களுக்கு எல்லாம் பேரிழப்பு என்றால் முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாமின் மறைவு இளைஞர்களுக்கு மட்டும் அல்ல தேசத்திற்கே ஓர் பேரிழப்பு. இந்த ஆண்டில் மேதைகள் பலர் மேலுலகு பயணிக்கும் ஆண்டாக அமைந்துவிட்டது. எம்.எஸ்.வி ஏழைக்குடும்பத்தில் பிறந்து நாடகக்குழுவில் வளர்ந்து சினிமாவில் உதவியாளராக இருந்து தன் உழைப்பினால் முன்னேறியவர். அவரும் கண்ணதாசனும் வெளிநாடு ஒன்றிற்கு சென்ற சமயம் எதுவுமே தெரியாது தெரியாது என்று சொல்லிவந்தவர் அங்கிருந்த பியானோ ஒன்றை பார்த்து அதில் அந்த நாட்டு இசைமேதையில் இசையை வாசிக்க எல்லோரும் வியந்து போயினராம்.பதிவர் விசுவாசம் எழுதிய இந்த பதிவு இங்கேகண்ணதாசன் கலாய்த்தது யாரை?: அதே போல குருபக்தி தாய் சொல்லை தட்டாதவராம் எம்.எஸ்வி. தேவரின் படம் ஒன்றுக்கு இசையமைக்க அழைத்தார்களாம். தேவர் படங்களுக்கு கே,வி மகாதேவன் அவர்கள்தான் ஆஸ்தான இசை அமைப்பாளர். அவர் இவரின் குரு போல. அவர் இடத்தில் நீ எப்படி வேலை செய்யலாம்? முடியாது என்று மறுத்துவிடு என்று தாய் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டாராம் எம்.எஸ்,வி. கடைசி வரை அவர் தேவரின் படங்களுக்கு இசை அமைக்கவே இல்லையாம். அதே போலத்தான் முன்னாள் குடியரசுத்தலைவரும், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இந்தியாவே வியக்கும் ஓர் தலைவராக உருவெடுத்தவர். அணுவிஞ்ஞானியான அவர் ஜனாதிபதியாக ஆனபோதும் எளிமையையும் நேர்மையையும் கைவிடவில்லை. இறப்பதற்கு முன்பு கூட தனக்காக காவல் பணிக்கு வந்த ஜவானை நலம் விசாரித்து ஓய்வெடுக்கும் படி கூறியுள்ளார். தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடங்களை கற்றுக்கொள்கிறோம்! தோல்வியை நினைத்து பயப்படக்கூடாது. அது நாம் எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்பதை கற்றுக்கொடுக்கிறது என்று சொன்னவர் கலாம். இந்திய இளைஞர்களின் மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர் கலாம். திரு இராதா கிருஷ்ணணுக்குப் பிறகு உலகமே ஒருவரின் இறப்பிற்கு வருந்துகிறது என்றால் அது கலாம் அவர்களுக்குத்தான். இந்த சாதனையை அவர் வெறும் பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்குள் செய்ய வைத்துள்ளார். 1999க்கு முன் கலாம் என்றால் இந்தியாவிலேயே கூட யாருக்கும் அவரைத் தெரியாது. இன்றோ அவர் எல்லோராலும் புகழப்படும் ஓர் மாபெரும் மனிதர். இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. இரு மேதைகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.
கில்லர்ஜியுடன் ஓர் சந்திப்பு:

  கடந்த வாரம் 19-7-15 ல் சென்னையில் பதிவர் கில்லர்ஜியை புலவர்இராமானுசம் ஐயா இல்லத்தில் சந்தித்து பேசியது ஓர் இனிமையான அனுபவம். என்னுடைய பணியின் தன்மை காரணமாக நான் வெளியில் செல்லும் சமயங்கள் குறைவு. திருமதி கீதா அவர்கள் மெயில் அனுப்பி இந்த மாதிரி கில்லர்ஜி வருகிறார் சென்னையில் சந்திக்க வர இயலுமா? என்று கேட்டிருந்தார். கில்லர்ஜியை மதுரை பதிவர் சந்திப்பிலேயே சந்திக்க நினைத்து இருந்தேன். அச்சமயம் செல்லமுடியாமல் போய்விட்டது. அந்த ஞாயிறன்றும் நிறைய பணிக்குறுக்கீடுகள். எல்லாவற்றையும் கடந்து செங்குன்றம் சென்று சேரும்போது மணி பத்து பதினைந்து. பத்து மணிக்கு சந்திப்பு என்று கீதா அவர்கள் சொல்லியிருந்தார். நான் அன்று காலை போன் செய்து பதினோறு மணிக்கு வருவதாகக்கூறி இருந்தேன். முகவரியும் வாங்கி இருந்தேன். கோடம்பாக்கம் செல்ல நாற்பத்து ஐந்து நிமிடங்களில் முடியுமா? அப்போதுதான் புறப்பட்டு கொண்டிருந்த ஓர் ஏசி பஸ்ஸில் ஏறி பதினோறு மணி வாக்கில் வடபழனியில் இறங்கி அங்கிருந்து ஓர் ஆட்டோ பிடித்து புலவர் ஐயா வீட்டு வாசலில் இறங்கி போன் செய்தேன். கரெக்டா வந்திட்டீங்க! இதோ நான் கீழே வரேன் என்று கீதா சொன்னார்கள். அதற்குள் நான் உள்ளே சென்று விசாரித்து ஐயா வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ஐயா பதிவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். வாங்க வாங்க! என்று வரவேற்றார். கில்லர்ஜி வரவேற்று தம் பக்கத்தில் அமரச்சொல்ல இந்த பக்கமும் கொஞ்சம் திரும்பி பாருங்க என்றார் ஆரூர் மூனா, மதுமதி, போலி பன்னிக்குட்டி, இராயச் செல்லப்பா, முரளிதரன், அன்பே சிவம்,அரசன்  ஆகியோரும் வந்திருந்தனர். நான் சென்ற ஓர் அரைமணியில் அரசன், மதுமதி விடைபெற  சற்று நேரத்தில் ஸ்கூல்பையன் தன் திருமதியுடன் வந்தார். பதிவுலகம் பற்றியும் இந்த ஆண்டு பதிவர் சந்திப்பு குறித்து ஒரு மணிநேரம் சுவாரஸ்யமாக சென்றது பேச்சு. வலைச்சர சர்ச்சை குறித்தும் நூல் வெளியிடுவது குறித்தும் பேசினோம். ஒன்றரை மணிவாக்கில் விடைபெற்றோம். பதிவர் திரு இராயச் செல்லப்பா அவர்கள் தம் சொந்த செலவில் கில்லர்ஜி, அன்பேசிவம் மற்றும் என்னை அழைத்துச் சென்று சரவணபவனில் விருந்து உபசரிப்பு செய்தார். மற்றவர்களையும் அவர் அழைத்தார். அவர்கள் அருகில் வீடு என்று விடைபெற்றனர். மிகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் கழிந்தது அரைநாள் பொழுது. நான் மிகவும் எதிர்பார்த்த வாத்யார் பாலகணேஷ், அவரது சீடர் சீனிவாசன், ஆவி, போன்றோர் வராமல் போனது கொஞ்சம் வருத்தம். இந்த சந்திப்பில் திருமதி கீதா எனக்கொரு சர்ப்ரைஸ் கொடுத்தார். அது அப்புறம் சொல்கிறேன்!

யாகூப் மேனனுக்கு கருணை தேவையா?

     மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதியான யாகூப் மேனனுக்கு கருணை வழங்கக் கூடாது என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கையில் நடிகர் சல்மான் கான் அவருக்கு ஆதரவாகப் பேசி வாங்கிக் கட்டிக்கொண்டு இப்போது மன்னிப்பு கோரியுள்ளார். மரண தண்டணை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான். ஆனால் இப்படிப்பட்ட தீவிரவாதிகளுக்கு அது ரத்து செய்யப்பட்டால் அப்புறம் பயம் எப்படி வரும்? இவன் ஒரு கருவிதான்! எய்தவர்கள் இருக்க அம்பை நோவானேன் என்று கூறுகின்றார்கள். காலில் முள் குத்துகின்றது. அந்த சமயத்திற்கு முள்ளை பிடுங்கி தூர எறிகிறோம்! அல்லது அழிக்கின்றோம். முள்ளின் விதையை கண்டறிந்து அழிப்பது இல்லை! அதுபோலத்தான் யாகூப் மேனனும் முதலில் முள்ளை அழிப்போம்! அப்புறம் அதற்கான வித்தை அழிப்போம். மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்வது என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை! வினை விதைத்தவர்கள் கண்டிப்பாக வினை அறுத்தாக வேண்டும்.

ஸ்ரீ சாந்த் விடுதலை!

   சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீ சாந்த், அங்கித் சவான் ஆகியோர் புகாரில் தகுந்த ஆதாரம் இல்லை என்று காரணம் காட்டி விடுவிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் விளையாட்டு பணபலம் பொருந்தியவர்களின் ஆட்டம் என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்க பட்டுள்ளது. சென்னை அணி, ராஜஸ்தான் அணியின் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை விசாரிக்க மறுத்த பிசிசிஐ அன்று அவசர அவசரமாக இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இந்த இரண்டு வீரர்களின் எதிர்காலம் மோசமாக பாதிக்கப்பட்டது.  இன்று இவர்கள் விடுதலை ஆனாலும் மீண்டும் அணியில் இடம் என்பது கேள்விக்குறிதான். அதே சமயம் சென்னை- ராஜஸ்தான் வீரர்களை  ஜடேஜா, பிராவோ உள்ளிட்டவர்களை தடை செய்யாமல் அணிகளை மட்டும் தடை செய்துள்ளனர். இந்த ஐ.பி. எல் சீசன் மிகச்சிறந்த இரண்டு அணிகள் இல்லாமல் களைகட்டப் போவது இல்லை. பேசாமல் இந்த தொடரையே ஒழித்துக் கட்டினால் மாணவர்களின் எதிர்காலமாவது சிறக்கும்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!

இலாஸ்டிக் ஆடைகளை முழுவதுமாக இழுக்காமல் உடலுக்குத் தகுந்தவாறு இழுத்துப் போட்டால் நீண்ட நாள் உழைக்கும்.
மூட்டுவலி குணமாக இஞ்சியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்து வலி இருக்கும் இடத்தில் பத்து போட்டு வர நாளடைவில் வலி குணமாகும். அல்லது இஞ்சியை நேரடியாக நறுக்கி வலி உள்ள இடத்தில் தேய்க்கலாம்.

வெண்டைக்காயுடன் நான்கு மிளகு கொஞ்சம் சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் தொண்டைக் கட்டு குணமாகும்.

வெளியில் செல்கையில் மொபைல் போனில்  சிக்னல் கிடைக்காமல் அவுட் ஆப் கவரேஜ் ஆக இருந்தால் 112 என்ற எண்ணை டயல் செய்தால் சிக்னல் கிடைத்துவிடும்.

சர்க்கரைபாகு வைத்து பட்சணம் செய்கையில் பாகு கிளற சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது பாகு நன்றாக வரும்.

நரம்புத்தளர்ச்சி இருப்பின் செவ்வாழைப்பழத்தை நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமடையும். இதில் வைட்டமின் ஏ, சத்து உள்ளதால் கண், பல் எலும்பு போன்ற உறுப்புக்களை வலிமையாக்கும்.

கிச்சன் கார்னர்!

வாழைப்பூ வடை!

  தேவையானவை: சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ 1 கப், கடலைப்பருப்பு 1கப் துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு தலா ½ கப் நறுக்கிய பச்சை மிளகாய் , இஞ்சி, சிறிதளவு- எண்ணெய் சிறிதளவு, பாசிப்பருப்பு 1 மேசைக்கரண்டி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், தேவையான அளவு.
 கடலைப்பருப்பு துவரம்பருப்பும் உளுந்து ஆகியவற்றை ஒன்றாக ஊறவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை தனியாக ஊற வைக்கவும். ஒன்றாக ஊறவைத்தவைகளை அரைத்து அதில் உப்பு மஞ்சள் தூள், வாழைப்பூ பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர் ஊறவைத்த பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து இதில் சேர்க்கவும். இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து தட்டி, எண்ணெயில்  பொரித்தெடுக்கவும்.

படிச்சதில் பிடிச்சது!





எம்..டி., யில்அப்துல்கலாம்பயின்றுகொண்டிருந்தபோது, அவரதுதந்தையின்உடல்நலம்பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது, என்றதகவல்வந்தது. ஊருக்குப்போவதற்குப்பணமில்லை, பலரிடம்கேட்டுப்பார்த்தார், யாரும்பணம்தரவில்லை. இறுதியாய், எம்..டி.,யில்அவர்முதல்வருடம்நன்றாகப்படித்ததற்காகஅந்நிறுவனம்அளித்தபரிசானவிலையுயர்ந்தநூலைச்சென்னையில்உள்ளமூர்மார்க்கெட்டில்இருந்தபழையநூல்களைவாங்கும்கடையில்கண்ணீரோடுவிற்பனைக்குத்தந்தார். முதல்பக்கத்தில்கலாமின்பெயர்இருந்ததைக்கண்டகடைக்காரர்,” அன்பாகப்பரிசாகக்கல்விநிறுவனம்தந்தஇந்தநூலைஇப்போதுவிற்கவேண்டியஅவசியம்என்னதம்பி? என்றுகேட்டார்.”ராமேஸ்வரத்தில்உள்ளஎன்அன்புத்தந்தையாருக்குஉடல்நிலைசரியில்லை, அவரைஉடனேநான்பார்க்கவேண்டும், என்னிடம்பேருந்துக்கட்டணத்திற்குக்கூடப்பணமில்லைஅதனால்தான்எனக்குக்கிடைத்தபரிசுநூலைநான்விற்கவேண்டியஇக்கட்டானசூழல்வந்ததுஎன்றுகலாம்கூற,அக்கடைக்காரர்கண்களில்கண்ணீர். ''தம்பி!உன்புத்தகத்தைநீவிற்கவேண்டாம்... உன்பயணச்செலவுகானபணத்தைநான்தருகிறேன், நீஊருக்குப்போய்வந்துநான்தந்தபணத்தைத்திரும்பத்தரலாம்.” என்றுபணம்தந்துஅனுப்பிவைக்கிறார். அந்தப்புத்தகக்கடைக்காரரைமூன்றாண்டுகளுக்குமுன்ஒருதொலைக்காட்சிப்பேட்டியில்நினைவுகூர்ந்துநெகிழ்வோடுநன்றிகூறினார்கலாம். வறுமையிலும்செம்மையாய்வாழ்ந்துநன்றிமறவாப்பண்பின்புகலிடமாய்அப்துல்கலாம்திகழ்கிறார்.

பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!

$
0
0
பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!


ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வையாரின் வாக்குப்படி ஆங்காங்கே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் அதி அற்புதமான ஆலயங்களை மன்னரும், மக்களும் கட்டுவித்து வழிபட்டு வருகின்றனர். அதில் பலவித உருவங்களில் சுவாமியும் அம்பாளும் தரிசித்து இருப்பீர்கள்.

    திருவள்ளூர் அருகே புட்லூரில் காணக்கிடைக்காத ஓர் அதிசயமாக புற்று வடிவில் அம்மன் அருள்பாலிக்கின்றாள். அந்த புற்று ஓர் கர்ப்பிணி பெண் தலைசாய்ந்து படுத்திருப்பது போல காட்சி தருவதும். இங்கு தொடர்ந்து  ஒன்பது வாரங்கள் வருகை புரிந்து வழிபடுவோருக்கு  பிள்ளை வரம் கிடைப்பதும் அதிசயத்தக்க ஆச்சர்யங்கள் மட்டுமல்ல அம்பாளின் கருணையை உணர்த்தும் நேரடி காட்சிகள் ஆகும்.

சென்னையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது இந்த புற்று மாரியம்மன் ஆலயமான அங்காள பரமேஸ்வரி ஆலயம். மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி முதல் சக்தி பீடத்தில் அமர்ந்து புற்று ரூபத்தில் பல இடங்களில் கோயில் கொண்டருளி அருள் பாலித்து வருகின்றாள். இங்கே ராமாபுரம் புட்லூரில் பூங்காவனத்தாள் என்ற பெயரில் அருள் பாலிக்கின்றாள்.

  இந்த ஆலயத்தின் வரலாறு ஓர் கதையாக சொல்லப்படுகின்றது. மேல்மலையனூரில் இருந்து சிவனும் பார்வதியும் காடுமேடு கடந்து இடுப்பில் குடையை இடுக்கி சூலத்தை தனியாகக் கொண்டு உலா வந்த போது இந்த தலத்திற்கு வருகின்றனர். அப்போது இது மா, வேம்பு,இலுப்பை மரங்கள் சூழ்ந்து குளிர்ச்சியாக இருக்க இளைப்பாற அமர்கின்றனர். அப்போது அம்மைக்கு தாகம் எடுக்க அப்பன் தண்ணீர் கொண்டு வரச்சென்றார்.

   சிவன் கூவம் நதிக்கு சென்று தண்ணீர் எடுத்துவருகையில் வெள்ளம் கரைபுரள வருவதில் தாமதம் ஆகியுள்ளது. பார்வதி தேவி சிவன் வராது போகவே அப்படியே மல்லாந்த நிலையில் படுத்துவிட்டார். அப்படியே புற்றாக உருவெடுத்துவிட்டார். சிவனும் அம்பாள் அருகில் அமர்ந்து விட்டார். இதனால் அம்மன் சன்னதி எதிரே சிம்ம வாகனத்திற்கு பதில் நந்திவாகனம் அமையப் பெற்றுள்ளது.

   இந்த இடத்தில் பிறிதொரு காலத்தில் விவசாயி ஒருவர் விவசாயப்பணிக்காக ஏர் ஓட்டிய சமயம் புற்றினில் ஏர் பட்டு இரத்தம் பீறிட்டு அடித்துள்ளது. விவசாயி பயந்து மூர்ச்சையாகிவிட்டார். அன்றிரவு அவர் கனவில் அம்மன் தோன்றி நான் இங்கு புற்றுவடிவமாக அமர்ந்துள்ளேன். எனக்கு கோயில் எழுப்பி வழிபடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். விவசாயியும் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார்.

  தலை, கை, கால்கள், மார்பு இவைகளுடன் நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே மண்ணில் இயற்கையாக தோன்றியுள்ளாள்.  இந்த சுயம்பு புற்று முழுவதும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகின்றாள் பூங்காவனத்தம்மன்.

இந்த மண்புற்று மாதாவுக்கு அப்பால் அங்காள பரமேஸ்வரி சூலம் தாங்கி கருவறையில் எலுமிச்சை மாலைகள் தாங்கி அருள் பாலிக்கின்றாள். எதிரில் நந்தியும் அருகில் தாண்டவராயன் என்னும் நாமத்துடன் நடராஜரும் உற்சவ நாயகியும் காட்சி தருகின்றனர்.

  ஆலயப்பிரகாரத்தில் தல விருட்சம் வேப்ப மரம், அதன் அருகில் மற்றுமோர் புற்று. இங்கு பால் ஊற்றி மஞ்சள் சார்த்தி வழிபடுகின்றனர். இந்த மரத்தில் பெண்கள் தங்கள் முந்தானையில் இருந்து துணியை கிழித்து சார்த்தி தங்கள் வேண்டுதலை வேண்டி சுற்றி வருகின்றனர்.

  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜைப்பொருட்களுடன் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று முதலில் அரசமர விநாயகரை 11 முறை சுற்றி வழிபட்டு புற்று அம்மனை வழிபட்டு அம்மன் காலடியில் மண்டியிட்டு மனமுருக வேண்டுகின்றனர். அப்போது கோயில் பூஜாரி அம்மன் திருவடியில் வைத்த எலுமிச்சை பழத்தை  உருட்டி விடுவார். அதை மண்டியிட்ட நிலையில் புடவை முந்தானையை விரித்து பிடித்து கீழே விழுந்துவிடாதபடி பிடித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தல விருட்சமான வேம்பு இலையை கொடுப்பார். அதையும் எடுத்துக்கொண்டு வந்து மஹா மண்டபத்தில் அமர்ந்து வேப்ப இலையுடன் எலுமிச்சை கனியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

 இவ்வாறு ஒன்பது வாரம் ஒரே கிழமையில் சென்று வழிபட்டு முதல் வாரத்தில் முந்தானையை கிழித்து தொட்டில் கட்டி நாகாத்தம்மன் வேப்ப மரத்தில் கட்டி வழிபட வேண்டும். இப்படி செய்து வர குழந்தை பாக்கியம் கிட்டும்.

இதே போல பதினோறு வாரங்கள் வழிபட திருமண பாக்கியம் கை கூடுகின்றது. இது தவிர புடவை சார்த்தி வழிபாடும். சிவராத்திரி மயானக் கொள்ளை வழிபாடும் விஷேசமானது.

அம்மன் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடப்பதற்கு முன் அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துகின்றனர். ஐந்து, ஏழு, ஒன்பது மாதங்களில் இந்த சீமந்தவழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த வழிபாட்டில் வளையல், பூச்சூட்டி சடை முடித்து ஏழுவிதமான கலவை சாதங்கள் செய்து அம்மனுக்கு படையல் இடுகின்றனர்.

நடை திறக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
அமாவாசை தினங்களில் : காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணிவரை
ஆடிமாதங்களில் ஐந்துவாரங்கள் கூழ் வார்க்கப்படுகின்றது.

பஸ் ரூட்: சென்னை ஆவடியில் இருந்து டி16 திருவள்ளூர் செல்லும் பேருந்து.
அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து  தடம் எண் 572
பிராட்வேயில் இருந்து தடம் எண் 571. கோயம்பேட்டில் இருந்து தடம் எண் 72 ஏ.
இறங்குமிடம் ராமாபுரம். காக்களூருக்கு முந்தைய நிறுத்துமிடம்.

அதிசயமான புட்லூர் புற்று மாரியம்மனை வழிபடுவோம்! அம்மன் அருள் பெறுவொமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



பூதத்தை வென்ற புத்திசாலி! பாப்பா மலர்!

$
0
0
பூதத்தை வென்ற புத்திசாலி! பாப்பா மலர்!



ரொம்ப நாளுக்கு முன்னால ஒரு ஊர்ல ஒரு புருஷன் பொஞ்சாதி வாழ்ந்து வந்தாங்க. அவங்களுக்கு அஞ்சு பசங்க. அதுல ரெண்டு ஆம்பளை பசங்க. மீதி மூணும் பொண்ணுங்க. இப்ப மாதிரி அப்ப குடும்ப நலத்திட்டம் எதுவும் கிடையாது. அதனால பெரிய குடும்பமா ஆயிருச்சு அவங்க குடும்பம். போதாக் குறைக்கு விருந்தினர்கள் வேற. அந்த புருஷன் காரன் ராப்பகலா உழைச்சும் ஒண்ணும் மீறலை! கட்டுப்படியாகலை.

   புருஷன் காரன் பேரு சுப்பையா. அவன் அந்த ஊர் ராஜாகிட்ட போய் தன் கஷ்டத்தை முறையிட்டான். ராஜாவும் இரக்கப்பட்டு அந்த ஊர் மலைக் குன்றுகிட்ட இருந்த தரிசு நிலத்தை தானமா கொடுத்தாரு. அந்த நிலம் கிடைச்சதும் அதை சுத்தப்படுத்த சுப்பையா முயற்சி பண்ணான்.

  அந்த நிலத்துல ஒரு பெரிய அரசமரம்  அடர்ந்து வளர்ந்து கிடந்தது. அந்த மரத்தை வெட்டினாத்தான் சாகுபடி பண்ண முடியும்னு அதை வெட்டினான் சுப்பையா. அந்த மரத்துல வருஷக் கணக்குல ஒரு பூதம் வாழ்ந்து வந்துச்சு. இது வரைக்கும் அதை யாரும் தொந்தரவு பண்ணதே இல்லை.

  சுப்பையா மரத்தை வெட்டவும், அதுக்கு கோவம் வந்துருச்சு. என்னோட இடத்துல வந்து நான் வசிக்கிற மரத்தையே வெட்டறியா? உன்னை என்ன செய்யறேன் பாரு!ன்னு பூதாகரமான உருவத்தை எடுத்துக்கிட்டு பல்லை  ‘நறநற’வென கடித்தபடி உன்னை விழுங்கிடறேன் பாருன்னு கத்திச்சு.
 
   சுப்பையாவுக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப் போச்சு! அடங்கொப்புறானே! இதென்னடா கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையா இங்க மரம் வெட்டப்போயி இப்படி பூதம் கிளம்பிருச்சே! அப்படின்னு பயந்து போயிட்டான். ஒரு வழியா மனசை திடப்படுத்திக்கிட்டு,  குலசாமியை மனசுல நினைச்சுக்கிட்டு, ஏய்! பூதமே! நான் பூதங்களையெல்லாம் அடக்கின பூதம்! இதுவரைக்கு பஞ்ச பூதங்களை அடக்கி இருக்கிறேன்! என்கிட்ட வாலாட்டாதே! ஓடிப்போ! அப்படின்னு சத்தம் போட்டான்.

   மண், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை தன்னுள்ளே அடக்கியிருப்பதைத்தான் அப்படி சொன்னான் சுப்பையா. முட்டாள் பூதமோ! பயந்து ஓடிப்போய்விட்டது. பூதம் சென்றதும் அந்த நிலத்தை பாடுபட்டு மேடுபள்ளம் எல்லாம் நிரவி சமப்படுத்தி உழுது பயிரிட்டான் சுப்பையா. அதில் கேழ்வரகை விதைத்தான். அதுவும் நல்லா விளைஞ்சது.   கதிர் முற்றி வருகையில்  அங்கே திரும்பவும் பூதம் வந்துச்சு.

   ஏய், மானுட பதரே! என்னை துரத்தி அடிச்சாய் அல்லவா? உன்னை என்ன செய்யறேன் பாரு! அப்படின்னு பெரும் மழையை தன் மந்திர சக்தியால வரவழைச்சுது. அடிஅடின்னு அடிச்ச மழையில கேழ்வரகு பயிரெல்லாம் நீர்ல முழுகிடுச்சு. நிலம் குளமா மாறிப்போயிருச்சு! அதைப் பார்த்து சுப்பையா கண்ணிலும் குளம் குளமா நீர் வந்துட்டே இருந்துச்சு!


   வயக்காட்டுக்கு போன புருஷனை காணோம்னு அவன் பொஞ்சாதி வள்ளி, புருஷனை தேடி வயலுக்கு வந்தா! அங்க வயல் தண்ணியிலே மூழ்கி இருக்கறதையும் புருஷன் காரன் அழுதுகிட்டு இருக்கிறதையும் பார்த்த அவ புருஷனை தேத்தி என்ன நடந்துச்சுன்னு கேட்டா.
  பூதம் வந்து இந்த மாதிரி மழையை வரவழைச்சு பயிரை நாசம் பண்ணிருச்சு! இனி நான் என்ன செய்வேன்? அப்படின்னு அழுதான் சுப்பையா.
  
   இதுக்கெல்லாம் அழலாமா? புழுதியா இருந்தா புஞ்சைக்காடு! சேறா இருந்தா நஞ்சைக் காடு! பூதம் நமக்கு நல்லதுதான் செஞ்சிருக்கு. நிலத்தை நல்லா உழுதுடுங்க! இந்த கேழ்வரகு பயிரே உரமா ஆயிரும். நல்ல விதை நெல்லா வாங்கி விதைப்போம். அறுவடை செஞ்சா நல்ல லாபம் வரும். இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கணும் அவ்வளவுதான்! என்றாள் வள்ளி.

   சுப்பையாவும் மனசை தேத்திக்கிட்டு நிலத்தை உழுது நல்ல கிச்சடி சம்பா நாத்துக்களை வாங்கி வந்து நடவு நட்டான். பயிர் நல்லா ஓங்கி வளர்ந்தது. ஆள் உயரம் வளர்ந்து கதிர் முத்தி நின்னுது நாலரை மாசத்துல. இதை பார்த்ததும் சுப்பையாவுக்கு மகிழ்ச்சி! கேழ்வரகை விட இதுல நல்ல லாபம்னு சந்தோஷமா இருந்தான்.

  அறுவடைக்கு ஆட்களை கூட்டிக்கிட்டு மறுநாள் வயலுக்கு வந்தான். அந்த பூதம் திரும்பவும் அவன் முன்னாடி வந்து, “ அடேய் மானிடா! என்னை விரட்டுன உன்னை சும்மா விடமாட்டேன்! நீ எப்படி நெல்ல அறுத்துருவேன்னு பாக்கிறேன்! நீ அறுத்து போடற கட்டு ஒண்ணுக்கு ரெண்டுபடி நெல்லுதான் வரும்! இது என்னோட சாபம்னு சொல்லுச்சு!

  சுப்பையா தலையில கை வச்சிக்கிட்டு உக்காந்துட்டான். கட்டுக்கு ரெண்டுபடி விளைஞ்சா கூலிக்கு கூட கிட்டாதேன்னு அழுதுகிட்டு இருந்தான். அப்ப அவன் பொஞ்சாதி வள்ளி வந்தான். விசயத்தை கேட்டதும் இதானா விசயம்? எதையும் புத்தி இருந்தா ஜெயிக்கலாம். இப்ப பாருங்க! அப்படின்னு சொல்லிட்டு கூலி ஆட்களை நிலத்தில இறக்கினா.

   நெல்லுக்கதிரை அறுத்து ரெண்டு தாளுக்கு ஒரு கட்டா கட்டிப் போடுங்க. பூதம் இப்ப என்ன செய்யுதுன்னு பார்க்கலாம் என்றாள்.
இரு தாளுக்கு ஒரு கட்டு என்றபடியால் பூதம் சொன்ன மாதிரி ஒரு கட்டுக்கு ரெண்டுபடி நெல்லுங்கரது ஒவ்வொரு தாளுக்கு ஒரு படி நெல்லா குவிஞ்சது.

  பூதம் இதைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்டது. நாம என்னா செய்தாலும் இவங்க அதை மாத்திடறாங்களே! இவங்களை நாம ஜெயிக்க முடியாதுன்னு அதுக்கு தோணிச்சு!

    சுப்பையா, வள்ளி இனி நான் உங்க ஜோலிக்கே வரமாட்டேன்! ஓடிப்போறேன் இந்த ஊரை விட்டேன்னு சொல்லிட்டு சிட்டா பறந்துருச்சு.

  அதுக்கப்புறம் சுப்பையாவும் அவன் குடும்பமும் ரொம்ப நாளைக்கு நிறைவா வாழ்ந்தாங்க!

(செவிவழிக்கதை)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தித்திக்கும் தமிழ்! பகுதி 17 ஆம்பலையொத்த சாம்பல் பறவைகள்!

$
0
0
தித்திக்கும் தமிழ்! பகுதி 17 ஆம்பலையொத்த சாம்பல் பறவைகள்!  


   பிரிவுத் துயர் பொல்லாதது. பிரிவை ஆற்றாது உயிரையும் இழப்போர் உண்டு. தலைவன் தலைவியை பிரிந்து பொருளீட்டச் செல்கின்றான். தலைவனை பிரிந்த தலைவி அவன் எப்பொழுது வருவானோ என்று பிரிவுத் துயரில் இருக்கின்றாள். பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவிக்கு ஒரே துணை தோழிதான். தோழி கவலைப்படாதே வருந்தாதே தலைவன் வருவார் என்று சொல்கின்றாள்.

   ஆனால் தலைவியோ நான் வருந்தவில்லை! வெளியூர் சென்ற இடத்திலும் என் நினைவு தலைவனுக்கு இருக்கும். அவர் விரைவில் திரும்பி வருவார் என்று கூறி அதுவரை நான் காத்திருப்பேன் என்கின்றார்.

  இன்று பொருளீட்ட வெளிநாடு செல்வதும் பெண்டீர் காத்திருப்பதும், அல்லது உடன் செல்வதும் சிறிய விஷயமாகிவிட்டது. அன்று ஓர் ஊரில் இருந்து வெளியூர் செல்வது கூட பெருந்துன்பம் தரும் விஷயமாக இருந்துள்ளது. காடு மேடு, கரடுமுரடான பாதைகள், நிறைய ஆபத்துக்கள், இதையெல்லாம் தலைவன் கடந்து வரவேண்டும்.

   போகும் இடத்தில் வேறு துணை கிடைத்துவிட்டாலோ தலைவன் தங்கிவிடுவான். இதையெல்லாம் மீறி தலைவன் தலைவியின் பால் கொண்ட அன்பால் திரும்பி வந்தான் எனில் மகிழ்ச்சிதானே! அப்படி ஒரு நம்பிக்கையில் இந்த தலைவி இருக்கின்றாள்.
இதோ பாடல்!

    ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
    கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
    முன்றி உணங்கள் மாந்தி மன்றத்து
    எருவின் நுண் தாது குடைவன ஆடி
    இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையோடு வதியும்
    புண்கண் மாலையும் புலம்பும்
   இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே
                               மாமிலாடனார்.

பிரிவுத் துயரில் இருப்போரை மிகவும் வருத்தும் பொழுது மாலை! தென்றல்காற்று வீச புல்லினங்கள் கூடு திரும்ப மென்மையான பூக்களின் வாசம் பெருக இன்ப நினைவுகள் வந்து எழுப்பும். இந்த மாதிரி ஒரு நல்ல பொழுது துன்பம் ஆகிறது என்றால் அது பிரிந்து வாழ்பவர்களுக்குத்தான்.  இப்படியான ஒரு பொழுதைத் தான் தலைவி சுட்டுகின்றாள்.

  ஆம்பல் பூவைப் போன்ற சாம்பல் நிறமுடைய கூம்பியசிறகுகளை உடைய தவிட்டுக் குருவிகள் வீட்டு முற்றத்தில் தங்கி அங்கு கிடைக்கும் உலரும் தானியங்களைத் தின்று மகிழும். பின்னர் தன் குஞ்சுகளோடு வீட்டின் பொதுவிடத்தில் குவிந்து கிடக்கும் எருவினை குத்திக் கிளறி அதன் நுண்ணிய பொடிகளை சுவைக்கும். அதோடு மட்டும் இல்லாமல் வீட்டின் இறப்பு எனக்கூடிய தாழ்வாரத்தில் தன் குஞ்சுகளோடு தங்கி இருக்கும்.

   இத்தகைய மாலைநேரம் தலைவர் பிரிந்து சென்ற நாட்டில் இல்லை போலும் என்று கூறுகின்றாள் தலைவி.
 அதாவது இத்தகைய மாலை நேரம் அவர் சென்ற நாட்டிலும் உண்டு. தனிமையில் வாடக்கூடிய அவருக்கு என்னுடைய நினைவு வந்து மீண்டு வருவார். அதுவரை நான் பிரிவுத் துயரை ஆற்றியிருப்பேன் என்று தோழிக்கு உரைக்கின்றாள் தலைவி.

  அதாவது இனிமையான மாலைப்பொழுதும் தனிமையும் எல்லா நாட்டிலும் உண்டு. தலைவர் சென்ற நாட்டிலும் உண்டு. அப்போது அவர் என்னை நினைத்து வருந்தி விரைவில் தன் பணியை முடித்து திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாகச் சொல்கின்றாள்.
 நம்பிக்கையில் தானே இருக்கிறது வாழ்க்கை! தலைவியின் நம்பிக்கை கைகூடட்டும்!


மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் அழகிய தமிழ் பாடலுடன் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 

காரணம்!

$
0
0
காரணம்!


சென்னை திருவல்லிக்கேணியில் அந்த மேன்சனில் அந்தக் காலைப்பொழுது அவ்வளவு சுகமாக விடியவில்லை. பக்கத்து அறை வாசலில் விடுதி உரிமையாளர் நின்று கத்திக் கொண்டிருந்தார். 

 “ஏம்ப்பா! சோத்துல உப்பு போட்டுத்தானே சாப்பிடறீங்க! மாசம் ஒண்ணாம் தேதியான கரெக்டா வாடகை வந்து சேர்ந்துடனும்னு சொல்லித்தானே விட்டேன்! இதோ தேதி அஞ்சு ஆச்சு! இன்னும் கொடுக்காம இழுத்தடிச்சுட்டு இருந்தா எப்படி? உங்களுக்கெல்லாம் எதாவது பொறுப்பு இருக்கா? வாய் சொல்லுல ஒரு நேர்மை இருக்கணும்! சொன்ன சொல் தவறாம நடந்துக்கணும்! இப்படி எவன் ஆத்தா செத்தா நமக்கென்னான்னு இருக்க கூடாது!”  இப்படி வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் ஏட்டில் எழுதக் கூடிய வார்த்தைகள். எழுத முடியாத வார்த்தைகள் இன்னும் எவ்வளவோ?

  அந்த விடிந்தும் விடியாத பொழுதில் அவரின் வார்த்தைகள் எரிச்சல் வரவழைத்தன. அந்த விடுதி உரிமையாளர் கறார் ஆனவர். சேர்க்கும் போதே ஒண்றாம் தேதியானால் வாடகை வந்துவிட வேண்டும் என்று சொல்லித்தான் சேர்ப்பார். ஐந்து தேதியைக் கடந்துவிட்டால் இப்படித்தான் சத்தம் போட்டுக் கொண்டிருப்பார். அட்வான்ஸ் எதுவும் வாங்க மாட்டார். ஆறாம் தேதி பணம் வராவிட்டால் பெட்டிப் படுக்கையோடு விரட்டி விடுவார். அவ்வளவு கண்டிப்பான பேர்வழி.

    இத்தனைக்கும் அவருக்கொன்றும் குறைச்சல் இல்லைதான்! இருந்தால் இப்படிப்பட்ட சென்னையின் முக்கியமான பகுதியில் இப்படி ஒரு பில்டிங்கை கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிக்க முடியுமா? ஆனால் கட்டிடம் பழசானது.அவரது அப்பா காலத்தில் கட்டியிருக்க வேண்டும் போல. இவர் ஏதோ அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இரண்டு பிள்ளைகள். இந்த சத்தம் போடுவதை விட்டு விட்டால் அவர் நல்ல பிள்ளைதான். ஆனாலும் இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை அதிகாலை நேரத்தில் அவர் போடும் சத்தத்தை நீங்கள் கேட்டால் இவரா இப்படி? என்று மற்ற சமயத்தில் யோசிப்பீர்கள்.

    பத்து தேதிக்கு மேல் அவரைப் பார்க்க வேண்டுமே! ஆளே பதவிசாகிவிடுவார். பார்த்து பார்த்து விசாரிப்பார். ஏதாவது வேணும்னா தயங்காம கேளுங்க தம்பி! என்று குழைவார். பாவம் எங்கிருந்தோ வந்து வேலை தேடியும் நல்ல வேலை கிடைக்காமலும் அரை வயிற்றுக் கஞ்சி குடித்து நல்ல எதிர்காலத்திற்காக ஏங்கி நிற்கும் இளைஞர்கள் இவரிடம் மாட்டிக் கொண்டு திக்கு முக்காடுவார்கள்.

   நல்ல வேளை! எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டபின் இந்த இடத்தில் வந்து சேர்ந்தேன். முதல் தேதியே தயாராக இவரிடம் வாடகையைக் கொடுத்துவிடுவேன். “ தம்பி! நீங்கதான் பர்பெக்ட்!” என்று குழைவார். அப்படி ஒரு பணப்பேய். கஷ்டப்படுபவர்கள்தானே இவரின் இந்த ஒற்றை அறையில் தங்கி கொண்டு அவஸ்தைப் படுகிறார்கள். கொஞ்சம் பொறுத்துப் போனால்தான் என்ன? எவனாவது ஒருவன் வாடகை லேட்டாய் கொடுத்தால் இவருக்கு என்ன நேர்ந்து விடும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகாமல் கறார் பேர்வழியாக இருக்கிறாரே! கூடிய சிக்கீரம் வேறு இடம் தேட வேண்டியதுதான் இப்படி நினைத்துக் கொள்வேன்.

     நல்ல இடத்தையும் தேடிக்கொண்டு இருந்தேன். இப்படியே ஓர் ஆறு மாதங்கள் கழிந்துவிட்டது. அன்று கையில் இனிப்போடு வாயெல்லாம் பல்லாக வந்து நின்றார் விடுதி உரிமையாளர்.. என்ன சார் விஷேசம்? ஸ்விட்டோட வந்திருக்கீங்க!

   தம்பி! உங்களுக்குத்தான் முதல் ஸ்வீட்! ஏன் தெரியுமா? நீங்கதான் வாடகையை கரெக்டா ஒண்ணாம் தேதி கொடுக்கிறீங்க! உங்களுக்குத்தான் பர்ஸ்ட் ! என்றார்.
    “அடச்சே! என்ன மனுஷன் இவர்? ஸ்வீட்ஸ் கொடுக்கிறதல கூட பாரபட்சமா?” மனதுக்குள் சாடியபடி, வெளியே புன்னகைத்தவாறே, எதுக்கு சார் திடீர்னு ஸ்விட்ஸ் எல்லாம்? என்றேன்.

   “ தம்பி! என் பையன் இஞ்சினியரீங்க் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்! தகுதிக்கு மீறி பெரிய காலேஜ்ல சேர்த்துட்டேன்! மாசா மாசம் உங்க வாடகைப்பணம் தான்  ஐ, மீன் இந்த விடுதியில வர வாடகைப் பணம் தான் அவனோட பீஸுக்கு உதவுச்சு! பத்தாம் தேதிக்குள்ள கட்டிடனும்! இல்லேன்னா வெளியே அனுப்பிடுவாங்க! என்னோட சம்பளம் குடும்பத்தை காப்பாத்துச்சு! உங்க எல்லோரோட வாடகைப் பணமும் அவனோட படிப்பை காப்பாத்துச்சு! இதனாலதான் அவ்ளோ கண்டீசனா நடந்துக்கறதா போச்சு! இந்தாங்க முதல் ஸ்வீட் எடுத்துக்கங்க! என்றார்.

   அட நாம் இவருக்கென்ன குறை என்று தவறாக எண்ணிவிட்டோமே! நம்முடைய சிறு வாடகைப்பணம் வாங்கி என்ன செய்துவிடப்போகிறார் என்று நினைத்தோமே! இந்தப்பணம் தான் அவர் மகனின் கல்விக்கு உதவியிருக்கிறது. காரணம் இல்லாமல் அவர் சத்தம் போடவில்லை! இது தெரியாமல் அவர் மீது வருத்தப்பட்டோமே யாரையும் சும்மா குறை சொல்லக் கூடாது. அவர்களுக்கும் ஓர் கோணம் இருக்கும் என்று தோன்ற வாழ்க்கைப் பாடம் கற்றவனாய்  இனிப்பை எடுத்துக் கொண்டு கங்கிராட்ஸ் சார்! என்றேன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



மதுவிலக்கும் என் மனப்போக்கும்!

$
0
0
மதுவிலக்கும் என் மனப்போக்கும்!


தற்போது தமிழகமே மதுவிலக்கு பற்றி பேசுகின்றது. எல்லா நாளேடுகள் டீவிகள்,மீடியாக்கள் எல்லாவற்றிலும் மதுவிலக்கு பற்றிய செய்திகள், தலைவர்களின் அறிக்கைகள், மாணவர்களின் போராட்டங்கள் என்று ஒரே அல்லோகலப் படுகிறது.

  மது ஓரு தீமையான அரக்கன். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இத்தனை நாள் அவனை நாட்டில் நடமாடவிட்டு இனத்தைப் பெருக்கி பள்ளி பிள்ளைகள் வரை அவனுக்கு அடிமையாக்கி விட்டபின் திடீரென தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஞானோதயம் உருவாகி மதுவிலக்கு செய்ய வேண்டும் என்று போராடத் துவங்கியுள்ளதுதான் வேடிக்கை ஆக இருக்கிறது.

  பாவம் தமிழக அரசியல் கட்சிகளுக்காவது இதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது. பெண்களின் வாக்குகளை அள்ளி அடுத்த ஆட்சியை பிடித்துவிடலாம் முதல்வர் ஆகிவிடலாம் என்று கனவில் மிதக்கின்றனர். இத்தனை நாள் இவர்களுக்கு இந்த மதுவின் தீமை கொடூரம் எல்லாம் தெரியவில்லை. இப்போது திடீரென யாரோ அவர்கள் முன் தோன்றி மது கெட்டது என்று உபதேசித்துவிட்டனர் போல. உடனே நிறுத்து! என்று முழக்கமிட ஆரம்பித்து விட்டனர்.

  பாவம் சசிபெருமாள். காந்தியவாதி! இந்தகாலத்தில் அஹிம்சாவாதிகளுக்கும் அஹிம்சைப் போராட்டங்களுக்குக் கூட விளம்பரமும் ஆள்பலமும் தேவை என்று உணராதவர். டிராபிக் ராமசாமியிடம் இவர் ஆலோசனை பெற்று இருந்தால் ஒன்றிரண்டு உதிரிக் கட்சிகளாவது இவரது போராட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கும். ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பி இருக்கும். இதெல்லாம் தெரியாமல் தன் குடும்பத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல் செல்போன் டவரில் ஏறி உயிரை இழந்துவிட்டார்.

   அவர் இறந்துவிட்டார் என்று குடிமகன்கள் யாராவது குடியை நிறுத்திவிட்டார்களா என்ன? அன்று கூடுதலாக குடித்து மகிழ்ந்திருப்பார்கள் எதிரி ஒருவன் ஒழிந்துவிட்டான் என்று. கல்லூரிமாணவர்கள் உடனே டாஸ்மாக் கடைகள் முன் ஆர்பாட்டம் செய்ய முழு பாதுகாப்புடன் சரக்கு விற்கிறது தமிழக அரசு. அது பொதுச் சொத்து என்று சேதம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.

    அரசே ஓர் போதைப்பொருளை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளை விற்பனை செய்து, அதை எதிர்ப்பவர்களை கைது செய்து பாதுகாப்புடன் மது விற்பனை செய்வது போன்ற வினோதமான நடைமுறைகள் நம் தமிழகத்தில் தான் நடக்கும்.

      இந்த மதுவிலக்கு இப்படி ஆர்பாட்டங்கள் செய்வதால் வந்துவிடுமா? அப்படியே அரசு பயந்துபோய் டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் மூடிவிட்டால் மட்டும் குடிப்பழக்கம் குறைந்து போய் குடிமகன்கள் திருந்திவிடுவார்களா?

 பக்கத்து மாநிலங்களுக்குத் தாவுவார்கள், கள்ளசாராயம் காய்ச்சுவார்கள், அதில் பலர் உயிர் இழப்பார்கள், போலீஸ் ரெய்டு வரும், மாமூல் குவியும் கண்டு கொள்ள மாட்டார்கள். இந்தியா முழுவதும் மதுவை தடை செய்ய முடியுமா? அப்படியே தடை செய்தாலும் கள்ளச்சாரயத்தை தடை செய்ய முடியுமா?

  மது என்பது இன்று நேற்றல்ல! சங்ககாலம் தொட்டே வாழ்வியலில் கலந்து வந்துள்ளது. அன்றும் குடித்தார்கள், இன்றும் குடிக்கிறார்கள்,  அன்று குறைவாக குடித்தார்கள் அன்று அரசு விற்கவில்லை! இன்று அரசே விற்கிறது இதுதான் வித்தியாசம்.

  மது அரக்கனை ஒழிக்க போராட்டம் நடத்திய அரசியல் கட்சி தொண்டர்களில் எத்தனை பேர் மது குடிக்காதவர்கள்? இன்று போராட்டம் செய்த கல்லூரி மாணவர்கள் எத்தனை பேர் குடிக்காதவர்கள்? அவர்கள் வீட்டில் பெற்றோர்கள் எத்தனை பேர் குடிக்காதவர்கள்?  எல்லோரும் குடிப்பவர்களாகவே இருப்பார்கள்? அல்லது குடிக்காதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

    ஒரு பொருளை தடை செய்ய வேண்டுமெனில் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். இல்லை அதன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும். மதுவை பொருத்தவரை உற்பத்தியை தடை செய்வது என்பது பெரும் கஷ்டம். எனவே பயன் பாட்டை தடை செய்தால் மதுவிலக்கில் வெற்றி பெறலாம்.

  இத்தனை மாணவர்கள் மதுக்கடைகளை முற்றுகை இட்டனர் அல்லவா மூட வேண்டும் என்று. அவர்கள் முதலில் தங்கள் போராட்டத்தை தங்கள் இல்லங்களில் தொடர வேண்டும். குடிக்கும் தந்தை, அண்ணன், நண்பன் இவர்களை குடிக்காதீர்கள் என்று அறிவுறுத்த வேண்டும்
மறுப்பவர்களுடன் உறவை துண்டிக்க வேண்டும். இதற்கு முதலில் மாணவர்கள் அவர்கள் குடிக்காமல் இருக்க வேண்டும். அந்த துணிச்சல் இருந்தால், ஒரு வீட்டில் ஆரம்பிக்கும் மாற்றம் அப்படியே தெரு, ஊர், நகரம் என விரிவடையும். சில மாதங்களில் ஓரு மாநிலமே திருந்த வாய்ப்பு இருக்கிறது.

  புறக்கணிப்பு என்பது தான் தண்டணைகளில் கொடுமையான தண்டணை! நான் டியுசன் எடுக்கையில் தவறு செய்யும் மாணவர்களை கண்டித்தும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களுடன் முகம் கொடுத்து பேசமாட்டேன். வகுப்புக்கு செல்வேன், பாடம் எடுப்பேன். ஆனால் பேசமாட்டேன். அவர்களுக்கு தம் தவறு புரியும். பின்னர் வலிய வந்து தவறை ஒப்புக்கொண்டு திருந்திவிடுவார்கள்.

  அது போல தவறு செய்யும் ஒவ்வொருவருக்கும் அது தவறு என்று தெரிந்தும் தட்டிக்கேட்க பயப்படும் குடும்ப உறுப்பினர்களாலும் அல்லது அவர்களும் இப்படி குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாலும் தைரியமாக குடிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் எனில் ஒவ்வொரு வீட்டிலும் புரட்சி வெடிக்க வேண்டும். குடிக்கும் கணவருடன் மனைவியும், அவர்களின் பிள்ளைகளும் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும். இது நல்ல பலன் தரும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இப்படி செய்யாமல் எத்தனை சசி பெருமாள் வந்தாலும் மதுவை ஒழிக்க முடியாது என்று தோன்றுகிறது.

   அரசியல் கட்சிகளும் குடிப்பவர்களுக்கு சீட் தர முடியாது என்று தைரியமாக அறிவிக்க வேண்டும். வாக்காளர்களும் குடிப்பவர்களுக்கு வாக்களிக்க மறுக்க வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால் மது ஒழியும் என்று என் மனம் சொல்கிறது. இதெல்லாம் தமிழகத்தில் நடக்குமா? கனவு காண்போம்! மெய்ப்படும் என்று நம்புவோம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 44

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 44


1.   தலைவருக்கு எதையும் சுத்தி வளைச்சு பேசறாரே ஏன்?
ஊர் முழுக்க நிறைய நிலத்தை சுத்திவளைச்சி போட்டிருக்கார் இல்லையா அதான்!

2.   அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டுபிடிச்சே?
ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ண 3 கிலோ பிளாஸ்டிக் வேணும் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னாரே!

3.   அந்த ஆபீஸ்ல எல்லாத்துக்கும் கவர் கொடுத்தாத்தான் வேலையே நடக்குமாம்!
ஓ!.. அது ‘கவர்’மெண்ட் ஆபிஸா!

4.   தலைவர் எதுக்கு திடீர்னு டாஸ்மாக்கை மூடனும்னு அறிக்கை விடறார்?
அப்பவாவது மக்கள் கிட்ட பாஸ்மார்க் வாங்கமாட்டோமான்னு ஒரு நப்பாசைதான்!

5.   எதிரி மன்னன் மன்னரின் இருப்பிடத்தை எப்படி கண்டுபிடித்தானாம்!
நம் மன்னர் செல்பி எடுத்து எஃபி யிலே போட்டாராமே அதை வைச்சுதான்!

6.   அது கவர்ச்சி நடிகையோட வீடுன்னு எப்படி சொல்றீங்க!
எந்த நேரமும் திறந்தே போட்டிருக்கே!

7.   டாக்டர் அந்த பேஷண்ட்டுக்கு பார்வை சரியில்லை!
கிட்ட பார்வையா? தூரப்பார்வையா?
நான் சொல்லவந்தது கெட்டப்பார்வையை!


8.   கொட்டற மழையில தலைவர் நனைஞ்சிகிட்டே பேசினதும் பிடிச்சிருக்கணுமே!
ஆஹா! தலைவருக்கு ஜலதோஷம் பிடிச்சதுதான் மிச்சம்!

9.   புலவர் ஏன் இவ்வளவு கோபமாக செல்கிறார்?
வீட்டில் அடுப்பே பற்றவைக்கவில்லை என்று சொன்னதும் மன்னர் தீப்பெட்டி நமத்துவிட்டதா? இந்தாருங்கள் புது தீப்பெட்டி என்று கொடுத்தாராம்!

10.என்னங்க இது கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு வாந்தி எடுக்குது?
நீங்கதானே சொன்னீங்க வெறும் வயித்தோட வரக்கூடாதுன்னு பொண்ணு இப்ப மூணு மாசம்!

11.மன்னர் காலாட்படை வீரர்களுடன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுகிறாரே என்ன விஷயம்?
கூடிய சீக்கிரம் போர்வருகிறதாம்! ஓடிவர பயிற்சி எடுக்கிறார்!

12.சாதாரண ஜுரம்னு சொன்ன நீங்க எதுக்கு என்னை எமர்ஜென்ஸி வார்டுல அட்மிட் பண்றீங்க டாக்டர்?
எமர்ஜென்ஸியா எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுதே!

13.ஒவ்வொரு ஃபைல்லேயும் வீல் பொருத்துங்கன்னு எதுக்கு மானேஜர் ஆர்டர் போடறாரு?
நம்ம ஆபிஸ்ல ஃபைல்ஸ் வேகமா நகரமாட்டேங்குதுன்னு யாரோ புகார் சொல்லிட்டாங்களாம்!


14.தங்கத்தை சேர்த்துக்கலாம்னு சொன்னா உன் மனைவி ஒப்புக்க மாட்டேங்கிறாங்களா ஆச்சர்யமா இருக்கே!
தங்கம் எங்க வீட்டு வேலைக்காரி ஆச்சே!

15.அவர் குடும்பத்துக்காக ஓடி ஓடி சம்பாரிச்சவருன்னு சொல்றீங்களே என்ன வேலை பார்த்தாரு?
ஃபைனான்ஸ் கம்பெனி நடத்திட்டு இருந்தாரு!

16.காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?
காதலியை காக்க வைச்சா கிப்ட் வாங்கிட்ட போக ரெடியா இருக்கணும்! பொண்டாட்டியை காக்கவைச்சா உதை வாங்க ரெடியா இருக்கணும்!

17.எவ்வளவு தைரியம் இருந்தால் பட்டப்பகலில் கொள்ளையடித்து இருப்பாய்?
ராத்திரியிலே நாய் தொந்தரவு அதிகமா இருக்கு எசமான்!

18.கஷ்டப்பட்டு கொள்ளையடிச்சும் இப்படி கவுத்துரும்னு எதிர்பார்க்கலைன்னு கபாலி புலம்பறானே ஏன்?
தங்கம் விலை திடீர்னு இப்படி குறையும்னு எதிர்பார்க்கவே இல்லையாம்!

19.நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே எனக்கு தெரிஞ்சு போயிருச்சு!
  என்ன…. என்ன..?
வசமா ஒரு அடிமை சிக்கிட்டான்னு!

20. மன்னர் எதற்கு புலவரை பாதாளச்சிறையில் அடைக்கின்றார்!
புலவரின் இதயச்சிறையில் இளவரசியார் குடியிருப்பதாக கூறினாராம்!


21.நொண்டிச்சாக்கெல்லாம் சொல்லி லீவ் கேட்க கூடாதுன்னு மேனேஜர் சொல்லிட்டார்!
அதுக்காக கால் உடைஞ்சி போயிருக்கிற எனக்கு லீவு கொடுக்க மாட்டேங்கிறது ரொம்ப அநியாயம் சார்!

22.நம் மன்னருக்கு கிறுக்கு பிடித்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டது போலிருக்கிறது!
எப்படி சொல்கிறாய்?
கட்டியம் சொல்பவன் மன்னர் வருகிறார் பராக்! பராக்! என்பதற்கு பதில் கிராக்! கிராக்! என்று சொல்கிறானே!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

எலி வளர்த்த சிங்க ராஜா! பாப்பா மலர்!

$
0
0
எலி வளர்த்த சிங்க ராஜா!

காடூர் என்ற காட்டில் சிங்கப்பன் என்ற சிங்க ராஜா ஆட்சி செய்து வந்தார். ஒரு சமயம் சிங்கராஜா வேட்டைக்கு போனபோது அவருக்கு வந்தது ஆபத்து. வேடுவன் ஒருவன் விரித்த வலையில் வசமாக சிக்கிக் கொண்டார் சிங்கராஜா!

   வலையிலிருந்து வெளியேற முடியாமல் உறுமினார் சிங்க ராஜா! பாவம் வேடன் பறவைகளுக்குத் தான் வலை விரித்தான். ஆனால் அகப்பட்டது சிங்க ராஜா! சிங்கராஜாவின் சீறலைக் கண்டு பயந்த அவன் ஓடிவிட்டான்.
"ஏய் ஓடாதே என்னை காப்பாற்று வெளியில் எடுத்துவிடு"என்று சிங்கமொழியில் கூறியது அவனுக்கு பயத்தை மேலும் உண்டாக்க திரும்பிக் கூட பாராமல் சென்று விட்டான்.

   அப்போது அந்த பக்கமாக சின்ன எலி ஒன்று வந்தது. வலையில் சிக்கிய ராஜாவை வணங்கிய அது, "ராஜா இப்படி மாட்டிக் கொண்டு விட்டீர்களே நான் உங்களை விடுவிக்கிறேன்!"என்று பற்களால் வலையை கடித்து குதறி ராஜாவை விடுவித்தது.

  சிங்க ராஜாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் மிதந்தது.  "அன்பு எலியே உருவத்தில் சிறியவனாயினும் இன்று நீ செய்த உதவி மிகவும் பெரியது. அத்துடன் மட்டுமல்ல மகத்தானது. என்னை காப்பாற்றிய உனக்கு இல்லை இல்லை உன் இனத்திற்கே நன்மை செய்யப் போகிறேன். இன்று முதல் நீங்கள் அச்சமின்றி வாழலாம்! யாரும் உங்களை வேட்டையாடவோ பிடிக்கவோ கூடாது!"என்று உத்தரவிடப் போகிறேன் என்றது.

 மறுநாள் சிங்க ராஜா அரசவையில் தன்னை காப்பாற்றிய எலிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தார்.எலிகளை யாரும் கொல்லவோ வேட்டை ஆடவோ கூடாது என்று தடை விதித்தார். அத்துடன் அவ்வாறு செய்வது தேசத்துரோகம்! அவ்வாறு செய்பவர்கள் ராஜாவுக்கு இரை ஆக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்.

    இதைக் கேட்டு அனைத்து விலங்குகளும் திடுக்கிட்டன. இது என்ன இந்த சிங்க ராஜாவின் புத்தி இப்படி போகிறதே?இதனால் எலிகள் பெருகி நாட்டுக்கு நாசம் விளையுமே என்று மனதில் பேசிக் கொண்டன. ஆயினும் அரச கட்ட்ளையாச்சே மீற முடியாது தம் தலை விதியை நொந்து கொண்டன.

  ராஜாவின் அறிவிப்பினால் எலிகளுக்கு சந்தோஷம் உண்டாயிற்று! எதிரிகளே இல்லாததால் இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டன. மிருகங்களின் வீடுகளில் கொள்ளைஅடித்தன. பொருள்களை நாசம் செய்தன. இவைகளின் ஆட்டம் பூனைகளுக்கும் பாம்புகளுக்கும் தெரிய வந்தபோதும் ஒண்றும் செய்ய முடியாமல் தவித்தன. பூனைகளின் முதுகிலே சவாரி செய்ய ஆரம்பித்தன எலிகள்.ஆனால் அவை ராஜாவின் அரண்மணைக்குள் மட்டும் நுழையவே இல்லை!.

   எல்லா மிருகங்களும் மந்திரியான நரியிடம் சென்று தாங்கள் தான் எங்களை எலியின் அட்டூழியத்திலிருந்து காக்க வேண்டும் என்று முறையிட்டன. நரியும் எலிகளின் ஆதிக்கம் பெருகி விட்டது இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று மிருகங்களை வழி அனுப்பி வைத்தது.

  பின்னர் அது எலிகளின் தலைவனை சந்தித்து, "எலிகளின் தலைவா! சிங்க ராஜா தங்களின் இனத்திற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் அரண்மணைக்கு விருந்துக்கு அழைத்துள்ளார் தாங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்!"என்று கூறியது. எலிகளின் தலைவனும் விருந்துக்கு வருவதாக ஒப்புக் கொண்டது.

   மறுநாள் எலிகள் படையெடுத்து வருவதாக சிங்கத்திற்கு தகவல் தந்தது நரி!. "என்ன எலிகள் படையெடுப்பா என் மீதா சிரிப்பாக உள்ளது"என்றது சிங்கம்.

  " உண்மைதான் மகாராஜா! எலிகளுக்கு தாங்கள் அளித்த சலுகைகள் கண்ணைக் கட்டி விட்டது. அகம்பாவத்தில் தன்னைக் கொல்ல யாருமில்லை என்று உங்களை விரட்டி விட்டு ஆட்சியில் அமர ஆசைப்படுகிறது அதனால் தான் படையுடன் வருகிறது !"என்றது நரி

    "நரியாரே நீர் சொல்வது உண்மையா? "என்று நம்பாமல் கேட்டது சிங்கம். "நம்பாவிட்டால் உப்பரிகையில் இருந்து பாருங்கள்! எலிகள் திரண்டு வருவது தெரியும் என்றுசொன்ன நரி எதற்கும் நான் அவர்களை எச்சரித்து வருகிறேன் "என்று சென்றது.

   எலிகளிடம் சென்ற நரி, "இது உங்கள் வீடு விருந்தினரான உங்களை கவுரவிப்பதில் மகாராஜா மகிழ்கிறார் எனவே இங்கே உங்கள் இஷ்டம் போல தேவையானதை கேட்காமலேயே எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் உள்ளே நுழைந்ததும் மஹாராஜாவின் மீது தாவி முத்தமிட வேண்டும். அது தான் மஹாராஜாவிற்கு நண்பர்களிடம் மிகவும் பிடிக்கும். "என்று சொல்லிவிட்டு சிங்கத்திடம் சென்றது.

    "மஹாராஜா! அந்த எலிகள் அட்டகாசம் அடங்காது போலுல்லது யாரடா உங்கள் அரசன் அவன் மீது தாவி குரல் வளையை கடித்து விடுகிறேன் பாருங்கள் என்று அறை கூவல் விடுக்கின்றன மகாராஜா! அத்துடன் நமது அரண்மனையையும் சூறையாடி வருகிறது பாருங்கள் !"என்று ஏற்றி விட்டது.

   எட்டி பார்த்த சிங்கத்திற்கு எலிகளின் அட்டகாசம் எரிச்சலை தந்தது.  "உண்ட வீட்டிற்கா இரண்டகம் செய்கின்றன இந்த எலிகள்! அவைகளை என்ன செய்கிறேன் பாருங்கள்!” என்றுவெளியே பாய்ந்தது. அதே சமயம் அதோ ராஜா அவரை தழுவி முத்தமிடுங்கள் என்று எலிகள் சிங்கத்தின் மீது தாவின.
   “ஐயோ என்னை கொல்ல வருகின்றனவே இந்த எலிகள்! இதை கொல்லுங்கள்!” என்று கத்தினார் சிங்கராஜா.

  மறுநிமிடம் காத்திருந்த பூனைப் படை எலிகளின் மீது பாய்ந்து கடித்து குதற சிதறி ஓடியது எலிகள் கூட்டம்.

     “நல்ல வேலை நான் காப்பாற்ற பட்டேன் என்னை காப்பாற்றிய பூனைகளுக்கு ஏதாவது....”
என்று வாய் திறந்த ராஜாவின் வாய் பொத்தினாள் சிங்கராணி!.

    நிம்மதி பெருமூச்சு விட்டார் மந்திரி நரி!.

 (மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 46

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 46


1.    நீ என்ன பெரிய பருப்பா?ன்னு இனிமே யாரையும் கேக்க முடியாது போலிருக்கே!
ஏன்?
பருப்பு விலை எல்லாம் கிலோ 150 ஐ தாண்டிருச்சே!

2.   தலைவர் கம்ப்யூட்டர் பழக ஆரம்பிச்சது தப்பா போச்சு!
  ஏன்?
 “குரோம்” பேட்டை நம்ம ஏரியாவாச்சே! கூகுள் காரன் கிட்டே குரோம் பிரவுசர் பேர் வைச்சதுக்கு கேஸ் போடலாமான்னு  கேக்கறார்!

3.    தலைவருக்கு கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் மேல ரொம்ப ஆர்வம்னு எப்படி சொல்றே?
2016ல் முதல்வர் ஆயிருவோம்னு நம்பிக்கிட்டு இருக்காரே!

4.   மதுவிலக்குக்கு எதிரான போராட்டத்தில் தலைவர் ஏன் கலந்துக்க மறுக்கிறார்?
இந்திய “குடிமகன்”களுக்கு எதிரா அவர் எதுவும் செய்ய மாட்டாராம்!


5.   கள்ள ஓட்டு போட்டு ஜெயித்துவிட்டதாக பேசும் எதிர்கட்சியினரை ஒன்று கேட்கிறேன்! அதற்கு எத்தனை நல்ல நோட்டுக்கள் செலவானது என்று உங்களுக்குத் தெரியுமா?

6.   அமைச்சரே போரென்று வந்தால் புயலென்று புறப்பட்டுவிடுவார்கள் நமது வீரர்கள் என்று சொன்னீர்களே! இப்போது என்ன?
ஆம் மன்னா! நாட்டை விட்டு புயலாக பறந்துவிட்டார்கள்!


7.   மன்னர் ஏன் புலவரை சிறையில் அடைக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளார்?
உடல்நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் மன்னரை பார்த்து, “ தேறா மன்னா!” என்று கவி பாடியிருக்கிறார்!

8.   சிக்கனத்தை பத்தி பேச எதுக்கு கவர்ச்சி நடிகையை கூப்பிட்டு இருக்காங்க?
அவங்கதான் உடை சிக்கனத்தை கடை பிடிக்கிறாங்களே!

9.   டாக்டர் இப்ப அட்மிஷன் பண்ண பேஷண்டுக்கு உடனடியா ஆஞ்சியொ பண்ணனும்னு ஏன் சொல்றீங்க?
ரொம்ப நாளா வருமானம் இல்லாம நம்ம ஆஸ்பிடல் காஞ்சியே கிடக்கே அதான்!

10.அந்த பேட்ஸ்மேன் ஏன் கையில பேட்டுக்கு பதிலா ஸ்டிக்கை எடுத்துக்கிட்டு வரார்?
அவரு நைட் வாட்ச் மேன் ஆச்சே!

11. மன்னர் ஏன் இப்படி ஓய்ந்து போய் கிடக்கின்றார்?

போரில் எதிரி பிரித்து மேய்ந்து விட்டானாம்!

12.24 மணி நேரம் கழிச்சுத்தான் எந்த முடிவையும் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்றாரே! பேஷண்ட் அவ்ளோ சீரியஸா இருக்காரா?
நீ வேற… இவர் ஹாஸ்பிடல் கட்ட வாங்கின லோனை கட்டறதுக்கு 24 மணிநேரம் பாக்கியிருக்கு! அந்த டென்ஷன்ல பேசறார்!

13. என் பொண்டாட்டி சமைச்சி எதுவும் குப்பைத்தொட்டிக்கு வீணா போனது இல்லே…!
  அவ்ளோ நல்லா சமைப்பாங்களா?
அட நீ ஒண்ணு…! கெட்டுப்போனாலும் விட்டுக் கொடுக்காம நானே சாப்பிட்டுருவேன்னு சொல்ல வந்தேன்!

14.உன்னோட வைஃப்புக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தது தப்பா போச்சா ஏன்?
வைஃபை  ஆன் பண்ணி என் டேட்டா எல்லாத்தையும் ஸ்மார்ட்டா க்ளோஸ் பண்ணிட்டாளே!

15.போர் என்றதும் எல்லோரும் மன்னரை நிர்க்கதியாக விட்டு விட்டு போய்விட்டார்களாம்!
அப்புறம்?
அப்புறமென்ன? சரணாகதி அடைந்துவிட்டார்!


16.மன்னா! எதிரி நாட்டு இளவரசியோடு இளவரசர் காதலில் ஈடுபடுவதாக தகவல் வந்துள்ளது!
வாலண்டியராக போய் வம்பை இழுத்து வருகிறான் என்று சொல்லுங்கள்!

17. சேடிப்பெண்களை மன்னர் வரும்போது தள்ளி நிற்க மகாராணியார் உத்தரவிட்டிருக்கிறாராமே!
இல்லாவிட்டால் மகாராஜா கிள்ளி விளையாட ஆரம்பித்து விடுகின்றாராமே!

18.  வம்சத்தை பார்த்துட்டுத்தான் கண்ணை மூடணும்னு சொல்லிக்கிட்டிருக்காங்களே உங்க அம்மா சீக்கிரம் ஒரு வாரிசை பெத்து கொடுத்திர வேண்டியதுதானே!
அவங்க சொல்லிக்கிட்டிருக்கிறது டீ வீ சிரியல் வம்சத்தை!

19.அந்த டைரக்டரை ஜெயில்ல போட்டுட்டாங்களாமே! ஏன்?
இத்தனை நாள் கதையை மட்டும் திருடிக்கிட்டு இருந்தவரு ஒரு சேஞ்ச்சுக்கு சிலையை திருடி மாட்டிக்கிட்டாராம்!

20. டவர் கிடைக்கலைன்னு சொல்லிக்கிட்டு இருக்காரே! எந்த மொபைல் நெட் ஒர்க் யூஸ் பண்றாரு?
எந்த நெட் வொர்க்கையும் அவர் கேக்கலை! போராட்டம் பண்றது டவர் சிக்கலைன்னு சொல்றார்!

21. உங்க பையனை வீட்டுப்பாடம் ஏன் எழுதிட்டு வரலைன்னு கேட்டா உங்களை கை காட்டறானே ஏன்?
சமையல் வேலை எல்லாம் முடிச்சிட்டு என்னால வீட்டுப்பாடத்தையும் எழுதி கொடுக்க முடியலை மிஸ்!

22. சாதா வார்டுக்கும் ஸ்பெஷல் வார்டுக்கும் என்ன வித்தியாசம் டாக்டர்!
சாதா வார்டுல நீங்க டாக்டரை  துரத்திக்கிட்டேஇருக்கணும்! ஸ்பெஷல் வார்டுல டாக்டர் உங்களை  துரத்திக்கிட்டே இருப்பார்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



ஏழு குடம் தங்கம்! பாப்பா மலர்!

$
0
0
ஏழு குடம் தங்கம்!


வல்லக்கோட்டை என்ற நாட்டை வல்லபன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். வல்லக்கோட்டை செல்வச்செழிப்பான நாடு. மக்களும் எந்த ஒரு குறையும் இல்லாமல் மன்னனின் நல்லாட்சியில் சிறப்பாக வாழ்ந்துவந்தார்கள். வல்லப மகாராஜாவுக்கு நாள்தோறும் அழகாக முகச்சவரம் செய்துவைக்க நாவிதர் ஒருவர் இருந்தார்.

    நாவிதர் தன் கைத்திறமை எல்லாம் காட்டி மிகச்சிறப்பாக சிறிது கூட வலி இல்லாமல் இதமாக முகச்சவரம் செய்துவிடுவார். இதனால் மகாராஜா மிகவும் அகம் மகிழ்ந்து அவருக்கு நிறைய ஊதியம் தந்துவந்தார்.

   நாவிதருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் வந்தாலும் அதை செலவு செய்ய மனம் வருவதில்லை. வீட்டில் குழந்தைகள் கிழிந்த ஆடை உடுத்துவார்கள். விழா பண்டிகை எதையும் கொண்டாட மாட்டார். நல்ல உணவு வகைகளை சமைத்து உண்ண மாட்டார்கள். கிடைக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து வைத்துக்கொண்டிருந்தார் அந்த நாவிதர். நிறைய செல்வம் சேர்த்தபின்னும் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற தீராத ஆவலில் இருந்தார்.

  ஒருநாள் அந்த நாவிதர் வெளியூர் சென்று காட்டுவழியே திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஓர் குரல் எதிரொலித்தது. “ ஐயா, நாவிதரே! உமக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டுமா?” என்று கேட்டது அந்த குரல்.

  நாவிதர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் தென்படவே இல்லை! மிகவும் பயந்து போனார். ஆனால் ஆசை அவரை விடவில்லை! ஏழுகுடம் தங்கம் கிடைக்கிறதென்றால் சும்மாவா? “ யார் யார் கொடுப்பார்கள்?” என்று கேட்டார்.

 “ அதைப்பற்றி உனக்கென்ன கவலை? உனக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டுமா சொல்?” என்றது குரல்

   “ ஆனால் அப்புறம் திருப்ப கேட்க மாட்டாயே!” என்றார் நாவிதர்.
 “ நானாக கேட்கமாட்டேன்! ஆனால் நீயாக திருப்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன்!” என்றது குரல்.

    “ நான் ஏன் திருப்பிக் கொடுக்க போகிறேன்! சரி! எனக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டும்! என்றார் நாவிதர்.

   “ நீ கேட்டபடி ஏழுகுடம் தங்கம் உன் வீட்டில் இருக்கும்!”  சொல்லிவிட்டு குரல் மறைந்தது.

   நாவிதர் அவசர அவசரமாக தன் வீட்டுக்குச் சென்று  பார்த்தார். வீட்டுக்குள் ஏழு புதிய குடங்கள் மூடியுடன் இருந்தன. ஆவலாக திறந்து பார்த்தார். ஆறு குடங்களில் தங்கம் நிறைந்து இருந்தது. ஏழாவது குடம் நிறையாமல்  கொஞ்சம் குறைவாக இருந்தது.

  “ இந்த குடம் மட்டும் ஏன் நிறையாமல் இருக்கிறது?” என்று கேட்ட நாவிதர். அதுவரை தான் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் தங்கமாக மாற்றி அதில் போட்டார். அப்போதும் குடம் நிறையவில்லை.
 எப்படியாவது இந்த குடத்தை நிரப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தார் நாவிதர். மறுநாள் அரசனுக்கு முகச்சவரம் செய்கையில்,  “மஹாராஜா! தாங்கள் எனக்கு கொடுக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை!” என்றார்.

  ராஜாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  “நான் அதிகமாகத்தானே கொடுக்கிறேன்! அது உனக்கு போதவில்லையா? சரி! இப்போது கொடுப்பதை விட இரண்டு பங்கு அதிகமாக நாளை முதல் கொடுத்துவிடுகிறேன்!” என்றார்.

   நாவிதர் அந்த ஊதியத்தையும் தங்கமாக மாற்றி குடத்தில் போட ஆரம்பித்தார். பிள்ளை குட்டிகளை கவனிக்கவில்லை! சாப்பாட்டைப் பற்றி யோசிக்கவில்லை! அவர் நினைவெல்லாம் அந்த ஏழுகுடம் தங்கம் பற்றித்தான். ஆனால் அந்த ஏழாவது குடம் நிறைந்த பாடில்லை.

   மஹாராஜாவைத் தவிர மற்றவர்களுக்கு சவரம் செய்து சம்பாதித்தார். அதுவும் அந்த குடம் நிறைய போதவில்லை. சரி பிச்சை எடுப்போம் என்று நகர வீதிகளில் பிச்சை எடுத்து அதையும் தங்கமாக மாற்றி குடத்தில் போட்டார். அப்போதும் குடம் நிறையவே இல்லை.

    என்ன செய்தால் அந்த குடம் நிறையும் என்று நாவிதருக்கு புரியவில்லை! எவ்வளவு போட்டாலும் நிறையவில்லையே! நான் என்ன செய்வேன்? என்று  புலம்பியபடியே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் நாவிதர்.

   ஒரு சமயம், நகர்வலம் வந்தார் வல்லப மஹாராஜா. அப்போது பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நாவிதரை பார்த்து அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே நாவிதரை அழைத்தார். “ ஏனய்யா! நாவிதரே! உனக்கு நான் இரண்டு மடங்கு அதிகமாக ஊதியம் தருகின்றேன். போதாக்குறைக்கு இன்னும் பலருக்கு முகச்சவரம் செய்து சம்பாதிக்கிறாய்! அப்புறமும் ஏன் பணம் பணம் என்று அலைந்து பிச்சை எடுக்கிறாய்? ஒருவேளை உனக்கு அந்த ஏழுகுடம் தங்கம் கிடைத்துவிட்டதா?” என்றார்.

   “மஹாராஜா! உங்களுக்கு அந்த ஏழுகுடம் தங்கம் பற்றித் தெரியுமா?”

  “ ஏன் தெரியாமல்? அதில் ஏழாவது குடம் நிறையவே நிறையாது! அதுதான் நமது ஆசை! அதற்கு அளவே கிடையாது! மீதி ஆறுகுடத்தில் இருந்தும் நம்மால் தங்கத்தை எடுக்க முடியாது. ஏழாவது குடத்தை நிரப்பவும் முடியாது!”

   “ ஐயோ! பேராசையால் மோசம் போனேனே! என் வீட்டில் ஏழுகுடம் தங்கம் இருக்கிறதே! என்ன செய்வேன்?”

   ”அந்த ஏழு தங்க குடங்களால் உனக்கு ஒரு குன்றிமணி அளவு கூட பிரயோசனம் கிடையாது. எங்கு கிடைத்ததோ அங்கே சென்று திருப்பி எடுத்துக் கொள் என்றுசொல்லி விட்டுவிடு! இல்லையேல் உன் நிம்மதிதான் கெடும். இனியாவது கிடைக்கும் பணத்தை  உன் மனைவி மக்களுக்கு செலவு செய்து குடும்பத்தை காப்பாற்றும் வழியைப் பார்! இல்லை இப்படி பணப்பேயாக அலைவதானால் நாளை முதல் உனக்கு அரண்மனையில் வேலை இல்லை!.”

     “ வேண்டாம் மஹாராஜா! அந்த குடங்களை நான் திருப்பி கொடுத்துவிடுகின்றேன்! எனக்கு நிம்மதி கிடைத்தால் போதும்!”

   நாவிதர் காட்டிற்கு சென்று   “எனக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டாம் திருப்பி எடுத்துக் கொள்!” என்றார். திரும்பவும் வீட்டிற்கு வந்து பார்த்தார். அந்த ஏழு குடங்களும் காணாமல் போயிருந்தன.  அந்தோ பரிதாபம்! அந்த ஏழாவது குடத்தில் அவர் உழைத்து போட்ட  தங்கமும் சேர்ந்து காணாமல் போய்விட்டது.

   பேராசையால் இருந்த சொத்தையும் இழந்த அவர் திருந்தினார். அதன் பின் கிடைக்கும் பணத்தை மனைவி குழந்தைகளுக்கு செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



தித்திக்கும் தமிழ்! பகுதி 20 வெள்ளாங்குருகே தூது செல்லாயோ?

$
0
0
தித்திக்கும் தமிழ்! பகுதி 20  வெள்ளாங்குருகே தூது செல்லாயோ?

இன்றைய அவசர யுகத்தில் தூது என்பது மருவி விட்டது. அன்று போர் என்றாலும் தூதுதான். காதல் என்றாலும் தூதுதான். மற்போருக்கு முன்னே சொற்போர் நடக்கும். வாட்சப்பிலும் குறுஞ்செய்திகள் பரிமாற்றத்திலும் இன்று காதல் வளர்கின்றது. எல்லோரிடமும் ஓர் அலைபேசியும் அதன் செவிவாங்கி கருவியும் இருக்கிறது. அதை காதில் சொருகி விட்டால் அவர்கள் உலகமே தனியாகிவிடுகின்றது. வெளி உலகமே அவர்கள் கண்ணுக்குப் புலப்படுவது இல்லை. இந்த மாதிரி பெண்களை திருமணம் செய்யும் ஆண் தான் பாவம்! காது மந்தமாகி போன மனைவியிடம் கத்தி கத்திப் பேசி தொண்டைப் புண் வந்து அவஸ்தைப்படப் போகின்றான்.

     சங்க காலத்தில் இப்படி காதலுக்கு தூது செல்ல செல் போன்கள் இல்லை! ஆனால், மரங்கள், பறவைகள், பூக்கள், விலங்கினங்கள் எல்லாம் இருந்தன. இயந்திர உலகில் இவையெல்லாம் காணாமல் போய் நாடு வெறும் சுடுகாடாகிக் கிடக்கின்றது. இன்றைய கவிஞர்கள் எந்த பறவையை தூது அனுப்புவார்கள் பாவம் அவைகளே இருக்க இடம் இல்லாமல் அலைந்து கிடக்கின்றன. தூது போ என்றால் போகுமா என்ன? ஆனால் நற்றிணையில் இந்த காதலி ஓர் பறவையை தூதாக்குகின்றாள். வெள்ளாங்குருகு அவள் காதலுக்கு தூது போகின்றது. தூது சென்ற பறவை என்ன சொன்னது? பாடலுக்குச் செல்வோமா?

நற்றிணை  - திணை: மருதம்

காமம் மிக்க கழிபடர் கிளவி, நாரையை நோக்கித் தலைவி கூறியது

சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ  
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி;
அனைய அன்பினையோ பெரு மறவியையோ –
ஆங்கண் தீம் புணல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே?
                    வெள்ளி வீதியார்.

விளக்கம்: சிறிய வெள்ளை நாரையே! சிறிய வெள்ளை நாரையே! துணிவெளுக்கும் நீர்த் துறையில் காயும் வெளுத்த வெள்ளாடை போன்ற சிறகுகளை உடைய வெண்மை நிறமுடைய சிறிய நாரையே! நீ என்னுடைய ஊருக்கு வந்து எங்களுடைய நீர்த் துறைகளில் துழாவித் தேடி நிறைய கெளிற்று மீன்களை கவ்வி உண்கின்றாய். பிறகு என் தலைவனுடைய ஊருக்குத் திரும்பிச்செல்கின்றாய். அவ்வூர் வழி ஓடும் தேன் சுவையுடைய நீர் இங்கே பரவிக்கிடக்கின்றது. நிறைய வயல்களை உடைய நல்ல செழிப்பான ஊரையுடைய எம்முடைய தலைவருக்கு நீ எனது அணிகள் கழன்ற பசலை நோயினை சொல்லாது இருக்கின்றாயே! நீ என்மீது வைத்திருக்கும் அன்பு இவ்வளவுதானா? அல்லது மறதியுடைய  பறவையா? விளங்கவில்லை என்கின்றாள் தலைவி.

  தலைவன் தலைவி இருவர் ஊர்களும் அருகருகே அமைந்துள்ள மேலூர் கீழூர் ஆகும். மேலூரில் விழும் நீர் கீழே கீழுரில்வந்து விழுகின்றது. அத்தகைய நீரிலே புனலாடி மகிழ்கிறாள் தலைவி. அங்கே சில நாரைகள் பறந்து நீரிலே துழாவி கெளிற்றுவகை மீன்களை கொத்தி உண்கின்றன.

    தலைவன் வராமையால் மெலிந்து அவள் அணிந்திருந்த வளையல்களும் கொலுசுகளும் கழன்றுவிழும் நிலையில் இருக்கின்றாள் தலைவி. அங்கு மேயும் நாரைகளிடம் தன் நிலையை கூறி மேலூர் செல்லும் நாரைகளே! அங்கு வாழும் தலைவனிடம் என்னுடைய இந்த பசலை நோயைப்பற்றி சொல்ல மாட்டேன் என்கிறீர்களே! என்மேல் உள்ள அன்பு இவ்வளவுதானா? என்று கோபித்துக் கொள்கின்றாள்.

  மேட்டு நிலத்திலிருந்து நீர் பள்ளத்தில் விழுவதும் அங்கு நாரைகள் இரைதேடுவதும் இயல்பான ஒன்று. இந்த இயல்பான காட்சியை தன்னுடைய அருமையான கற்பனைத் திறனால் அழகான பாடலாக்கிய புலவனின் சிறப்பை பாராட்டாமல் இருக்க முடியாதுதானே!  எளிமையான இனிமையான இந்த பாடலை ரசித்துப்படியுங்கள்!

பின்குறிப்பு: சத்தி முத்துப்புலவர் எழுதிய நாரைவிடு தூது பாடலும் ஏறக்குறைய இதே போன்ற ஓர் கருத்துடைய பாடல். அதில் தலைவன் தூது போகச்சொல்லுவான். இந்தப்பாடலை சகோதரர் ஊமைக்கனவுகள் விஜு அவர்கள் சிறப்பாக விளக்கியிருப்பார்.அந்த பதிவை தேடினேன்.  இதோ சிதைக்கப்பட்ட சித்திரங்கள்!

மீண்டும் அடுத்த வாரம் நல்லதொரு பாடலுடன் சந்திக்கின்றேன்! நன்றி!

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0
தளிர் ஹைக்கூ கவிதைகள்!


தாங்கிப்பிடித்ததை
தவிக்கவிட்டுச்சென்றார்கள்!
துணிக் கிளிப்!

கரி பூசி
விளையாடியது நிலா!
அமாவாசை!

கண்சிமிட்டி சிரித்ததும்
கவர்ந்தோடினர்
குழாய்விளக்கு!

தடுத்துப் பார்த்தும்
இடுக்கினில் ஊடுருவியது!
பனி!

இரவெல்லாம் விடியல்!
விடியலெல்லாம் உறக்கம்!
நகரம்!

சிரித்தது மேகம்!
கூந்தலில்
மல்லிகை!

சேற்றில் பதியும்
தடங்கள்!
நினைவுகள்!

வெட்கிச் சிவந்தது சூரியன்
விலகிப்போனது
பகல்!

ஒலித்ததும்
உயிர்த்தது காகங்கள்!
கோயில் மணி!

தலை குனிவு!
வெட்டப்பட்டது!
நெற்கதிர்!

ஒளி வெள்ளம்
இருளாக்கியது!
மின்னல் மழை!

ஆமையை
வென்றது முயல்!
மின்னல்!

புதைந்து கிடப்பதை
கிளர்ந்துவருகின்றது!
காற்று!

உருவம் இல்லை!
உயிர் கொடுக்கின்றது!
காற்று!

வறட்சி பூமி!
பசுமையானது!
பச்சைக்கிளிகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


அழைக்காதே!

$
0
0

“என்னம்மா  சீமந்த ஏற்பாடெல்லாம் ஜரூரா நடந்திட்டிருக்கு போல!” தன் பெண்ணின் சீமந்தத்திற்கு ஓடியாடி உழைத்துக்கொண்டிருந்த மீனாட்சியிடம் கேட்டாள் மேகலை!. மேகலாவும் மீனாட்சியின் மகள் லலிதாவும் ஒன்றாய் படித்தவர்கள். ஒரே பள்ளி, ஒரே கல்லூரி என்று அவர்கள் படிக்கும் காலத்தில் நெருங்கி பழகி ஒன்றாய் சுற்றியவர்கள்.

      “ ஆமாண்டி மேகலா! இன்னும் பத்தே நாள் தான் இருக்கு! ஒரு வேலையும் உருப்படியா ஓடலை! அவர் பாட்டுக்கு ஆபிஸுக்கு போயிடறார்! நான் ஒண்டியாளா கிடந்து அவஸ்தை பட வேண்டியிருக்கு!”

   என்னைக் கூப்பிடக் கூடாதாம்மா! நீங்க எதுக்கு தயங்கறீங்க! வீட்டுல வெட்டியாத்தானே இருக்கேன்! கூட மாட வந்து உதவ மாட்டேனா என்ன?
   “ கண்டிப்பா மேகலா! ஆனா உனக்கும் புருஷன் மாமியாருன்னு வீடு வாசல் இருக்கோ இல்லியா?”

    “ அது பாட்டுக்கு அது! தோழியோட சீமந்தத்துக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்யாட்டி எப்படி? எதுக்கு வேணும்னாலும் கூப்பிடுங்க! ஒரு போன் அடியுங்க! அடுத்த பத்தாவது நிமிசத்துல இங்க இருப்பேன்!”

      “இவ்வளோ நல்ல மனசு உனக்கு! பாவம் உன் வயித்துலேயும் ஒரு புள்ளை தங்கிடுச்சுன்னா நன்னா இருக்கும்! அந்த கடவுள் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ தெரியலையே!”

     “ அதை விடுங்கம்மா! இப்ப எதுக்கு அதெல்லாம்! எல்லாம் நேரம் வரப்ப அமையும்! அதுவரைக்கும் மனசை தேத்திண்டு போக வேண்டியதுதான்!”

      “ எல்லாம் கால காலத்திலே நடந்தாதாண்டி அம்மா நல்லது! உனக்கும் கல்யாணம் ஆகி  நாலு வருஷம் ஓடிருச்சு இல்லே! என் பொண்ணுக்கு முன்னாடியே உனக்கு கல்யாணம் ஆயிருச்சு! இவதான் நான் வேலைக்கு போவணும் அது இதுன்னு கல்யாணத்தை தள்ளிப்போட்டு போனவருஷம்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சா! தோ இப்ப புள்ளை உண்டாயிருக்கா!”

        ” லலிதா அதிஷ்டக்காரிம்மா! அவ மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்!” என் கிட்ட எந்த உதவின்னாலும் தயங்காம கூப்பிடுங்க! வரேன்!” மேகலா கிளம்பிவிட்டாள்.

  அடுத்த நாள் தன்னுடைய பெண் வீட்டிற்கு சென்ற மீனாட்சிக்கு அதிர்ச்சியாக இருந்தது. வலிய வந்து உதவி செய்கிறேன் என்ற மேகலாவையே சீமந்தத்திற்கு கூப்பிட வேண்டாம் என்கிறாள் அவள்.

  “ என்னடி இது! உன்னோட சீமந்தத்திற்கு உன் நெருங்கிய தோழியையே கூப்பிட வேண்டாம்னு சொல்றே? இது நல்லாவா இருக்கும்? அவ என்னடான்னா வலிய வந்து எது வேணும்னாலும் கேளுங்கோ! ஹெல்ப் பண்றேன்னு சொல்றா!”

    “ அம்மா நான் சொல்றதைக் கேளு! அவளுக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு! ஒரு புள்ளைக் குட்டி இருக்கா?”
    இவள் இப்படி பேசிக்கொண்டிருக்கையில் தற்செயலாய் அங்கே வந்த மேகலா இந்த சொல் கேட்டு அப்படியே நின்றாள்.

      “ ஏண்டி! நீயே இப்படி பாரபட்சம் பாக்கலாமா? அவளுக்கு குழந்தை இல்லேன்னா என்ன? அதுக்காகவா எல்லார் மாதிரி நீயும் நடந்துப்பே! கூப்பிட வேண்டாம்னு சொல்றே? அவளை வர வேண்டாம்னு சொன்னா அவ மனசு என்ன பாடு படும்? நீயும் அவளும் பழகின தோஷத்துக்கு இதுவா மரியாதை?”

   “ அம்மா! போதும் நிறுத்தறியா? அவ சீமந்தத்துக்கு வரதுலேயோ ஓடியாடி வேலை செய்யறதிலேயோ எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை! ஆனா! வர்றவங்க ஒவ்வொருத்தரும் அவளை என்னென்ன கேள்வி கேப்பாங்க தெரியுமா? முதல்லேயே அவ நொந்து போயிருக்கா! அவ மனசு லேசானதும்மா! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசறப்ப அவ தாங்க மாட்டா? யாராவது அவளை பேசினா எனக்கு மனசு கேக்காதும்மா!  அதனாலதான் வரவேண்டாம்னு சொல்றேன்”

      “பங்ஷணுக்கு வந்து அவ மனசு நோகறதை விட வராமலே இருக்கலாம் இல்லையா? அவ வந்தாலும் வராவிட்டாலும் முதல் வாழ்த்து அவளோடதான் இருக்கும்னு எனக்குத் தெரியும்மா! இந்த வீட்டு பெரியவங்க ஆளுக்கு ஒண்ணு சொல்லி அவளை நோகடிப்பாங்க! அதை விட அவ அங்கே இருந்தே வாழ்த்தட்டும்! அதுவே எனக்கு போதும்மா!”

    தோழியே தன்னை தப்பாக நினைக்கிறாளே என்று வருத்தப்பட்ட மேகலா, அவள் சொன்னது முழுமையும் கேட்டதும் கண் கலங்கினாள். ஓடோடி வந்து லலிதாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளின் இந்த திடீர் அன்பு புரியாது திகைத்தாள் லலிதா.

டிஸ்கி} காலை முதல் நிறைய யோசித்தும் கதை எதுவும் சரியாக தோன்றவில்லை! திடீரென்று தோன்றிய இந்த கருவை உடனடியாக அப்படியே சுடச்சுட பதிவிட்டுள்ளேன்! குறைகள் இருப்பின் பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

உள்ளம் கொள்ளை போனதே!

$
0
0


காலையில் புறப்படும் போதே அம்மா சொன்னார்கள்! “ அவசரமா வேணும்டா வாங்கி கொடுத்துட்டுப் போ! என்று, நான் தான் கேட்கவில்லை! சாயந்திரம் ஆபீஸில் இருந்து வரும் போது வாங்கிண்டு வந்துடறேன் அம்மா! இப்ப அவசரத்துக்கு உன் சினேகிதிக்கிட்ட வாங்கி சமாளிச்சிக்கோ!”

    ”இரவல் வாங்கிறதுன்னா எனக்கு பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும் இல்லையா? அப்புறம் சினேகிதிகிட்ட வாங்குன்னு சொல்றே?”

     “ஒரு அவசரத்துக்கு கைமாத்தா வாங்கிறதுலே என்ன தப்பு! நான் வாங்கியாந்ததும் திருப்பிக் கொடுத்துடப் போறே! உன்னை நம்பி கொடுக்க மாட்டாங்களா உங்க சினேகிதி!”

     “இப்ப யாருடா? இரவல் கொடுக்கிறா? கைமாத்து கேக்கறா? இருக்கிற விலைவாசியிலே அவனவன் குடும்பம் தள்றதே பெரும்பாடா இருக்கு! சரி எதுக்கும் கேட்டுப்பார்க்கிறேன்! அது இல்லேன்னாலும் நல்லா இருக்காதே!”
     “கேட்டுப்பாரு! இல்லேன்னாலும் விட்டுடு! ஒருநாள் தானே! அட்ஜஸ்ட் பண்ணிட்டு போவ வேண்டியதுதான்! ”

     “ டேய்! நாடு கெட்டுக் கிடக்கு! நீ ஆபிஸ் விட்டு வரும் போது நாழியாயிடும்! நம்ம வீடு வேற டவுன்லேயிருந்து தள்ளியிருக்கு! தனியா டூ வீலர்லே வரப்போறே! அப்ப போய் எதுக்கு வாங்கி வரனும்? இப்ப ஒரு பத்து நிமிஷம் எனக்கு செலவு பண்ணக் கூடாதா?”

       “ஆமா! நா பெரிய தங்கக் கட்டியை வாங்கிவரப்போறேன்! திருடனுங்க மறிச்சு கொள்ளையடிச்சிறப் போறாங்க! போம்மா! போய் வேலையைப் பாரு! ராத்திரி நீ கேட்ட பொருள் இருக்கும்! எதுக்கும் பயப்படாதே! “
 “நான் பயப்படறது இருக்கட்டும்டா! பணம் எல்லாம் எடுத்திக்கிட்டியா? கிரெடிட் கார்டும் எடுத்துட்டு போ! அவசரத்துக்கு உதவும்! பொருள் வாங்கினதும் பத்திரமா பைக்குள்ள பை போட்டு எடுத்துட்டுவா! மேல ஏதாவது துணி சுத்தி வை! யார் கண்ணுலயாவது பட்டுச்சோ! அப்புறம் அது நமக்கு இல்லாம போயிரும்!”

     இவ்வளவு பில்டப் பண்ணி அனுப்பினார்கள்! நான் தான் அலட்சியமாக இருந்துவிட்டேன்! அலுவலகத்தைவிட்டு வரும்போதே மணி பத்தாகிவிட்டது. அந்த நேரத்திலும் தூரத்தில் தெரிந்த நகைக் கடையில் கூட்டம் அள்ளியது! தமிழர்களின் தங்க மோகம் குறைந்ததா என்ன?

      தயங்கியபடியே கடைக்குள் நுழைந்தேன். கேட்டேன்! “ சார்! மெதுவா மெதுவா சொல்லுங்க! நீங்க நம்ம வாடிக்கையாளருன்றதாலேதான் இப்ப கொடுக்கிறேன்! இல்லேன்னா கிடைக்காது. ஆமாம் எவ்வளவு வேணும்?”

   சொன்னேன்! “ விலை அதிகமாச்சே சார்! தங்கத்தை விட இதுக்குத்தான் இன்னிக்கு மவுசு அதிகம்! ராத்திரி நேரம் பத்திரமா கொண்டு போவீங்களா காலம் கெட்டுக்கிடக்குது சார்!”

         எடைபோட்டு கேரி பேக்கில் கொடுத்ததை ஓரு துணிப்பையில் வைப்பதை அங்கிருந்த ரெண்டு ஜோடிக் கண்கள்  கவனித்ததை நான் கவனிக்கவில்லை! வண்டியில் பையை வைத்துவிட்டு  ஸ்டார்ட் செய்கையில் அந்த நபர் வேகமாக வந்து வழி மறித்தான்.

       “ சார்… நீங்க சங்கர்தானே…!”

      “ஆமாம்! நீங்க யாரு… டைமாவது! நான் போகனும்..!”

    “இருக்கட்டும் சார்! நானும் உங்க ஏரியாத் தான்! உங்க வண்டியிலே லிப்ட் கேக்கத் தான் வந்தேன். பையிலே என்ன சார்? விலையுயர்ந்த ஐட்டமாட்டும் தெரியுது..!”

    “யோவ்! நீ யாருன்னே தெரியாது! வழியை விடறியா? “ கோபமாக கத்தி வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினேன்! பின்னாடியே யாரோ வருவது போல ஓர் பிரமை. இல்லை இல்லை யாரோ வருகிறார்கள்… வேகமாக செல்.. எச்சரித்தது மூளை.

    ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன். வண்டி வேகமெடுத்து சில விநாடிகளில் நின்றது. பெட்ரோல் இல்லை! காலையிலேயே ரிசர்வில் இருந்தது. இப்போது சுத்தமாக தீர்ந்து போயிருக்கிறது. டென்சனில் கவனிக்கவில்லை! இப்போது லிப்ட் கேட்டவர்  எங்கிருந்தோ வந்தார்.

      “என்ன சார் கோபப்பட்டீங்க! இப்ப வண்டி ஆப் ஆயிருச்சா! பெட்ரோல் தீர்ந்துடுச்சா!”

    “ஹிஹி! ஏதோ டென்ஷன்ல..”

  “இருக்கட்டும் பரவாயில்லை! நான் வேணும்னா பெட்ரோல் தரேன்! ஆனா நீங்க உங்க கிட்ட இருக்கிற கடையில வாங்கின அந்த பொருளை தரனும்.”

    “ என்னது…!”

    “ஆமாம்! மொத்தமா கூட வேணாம்! ஆளுக்குப் பாதி எடுத்துப்போம்!”
    “என்னயா பேரம் பேசறே! நான் காசு கொடுத்து வாங்கி வந்திருக்கேன்! திருடிட்டு வரலை!”

     “இருக்கட்டுமே! ஆனா இல்லாதவன் இருக்கறவன் கிட்ட பிடுங்கித்தானே ஆகனும்! நானும் சும்மா கேக்கலை! உங்களுக்கு பெட்ரோல் தரேன்னு சொல்றேனே!”

    “வழியை விடு! நான் தள்ளிட்டு போனாலும் போவேன்! உன் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்!”

    ”சார் கோபப்படாதீங்க! எங்க வீட்டுல அது இல்லாம இருக்க முடியாது! ஒரு வாரமா சாப்பாடே ருசிக்கலை! ப்ளீஸ் பாதி இல்லாட்டி கூட பரவாயில்லை! ஒரு கால்வாசி … இல்லை ஒரு ரெண்டு…”

      அவன் கெஞ்ச.. எனது மனம் கொஞ்சம் இளகியது.

    “சரி! சரி அழாதீங்க! ஒரு லிட்டர் பெட்ரோலாவது கையிலே வச்சிருக்கீங்களா? அஞ்சு லிட்டர் தரேன்! சார்! ஆனா ஒரு அரைக்கிலோ வெங்காயமாவது கொடுப்பீங்களா?”

     “கண்டிப்பா…” என்று என் பையில் இருந்து சில வெங்காயங்களை எடுத்துக் கொடுக்க அவன்,

   இப்போதைக்கு இந்த பெட்ரோலை ஊத்திக்கிட்டு வீட்டுக்கு போங்க! நாளைக்கு அஞ்சு லிட்டர் பெட்ரோல் வீட்டுல கொண்டுவந்து தரேன்.. என்று சரேல் என்று மறைந்தான். அம்மா சொன்ன பேச்சை கேட்காத நான் “உள்ளி” கொள்ளை போனதே என்று தலையிலடித்துக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்!
  

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Viewing all 1537 articles
Browse latest View live