கதம்ப சோறு! பகுதி 30
எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான் இவன் ரொம்ப நல்லவன் டா!
ஆம் ஆத்மி கட்சியை எந்த நேரத்தில் கெஜ்ரிவால் ஆரம்பித்தாரோ தெரியவில்லை! அந்த கட்சி டெல்லி தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதும் அவரது கோமாளித்தனங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. சினிமா முதல்வன் பாணியில் ஆண்ட அவரது ஆட்சி ஒன்றரை மாதத்தில் முடிந்து போனது. அதற்கப்புறம் அவரக்கு அடிமேல் அடிதான். இப்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட குதித்திருக்கிறார். வாராணாசியில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்த போது கறுப்புமையால் அடித்து விரட்டினார்கள். அதற்கு சில நாட்கள் முன்பு டில்லியில் தக்சின் புரி என்ற இடத்தில் குடிகார இளைஞன் ஒருவன் கன்னத்தில் அறைந்தான். அரியானாவிலும் தாக்கப்பட்டார்.உத்தரப்பிரதேசத்தில் பிரசாரத்தின் போது பல இடங்களில் செருப்பு வீசப்பட்டது. பல இடங்களில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. இப்போது டெல்லியில் பிரச்சாரத்தின் போது ஆட்டோ டிரைவர் ஒருவர் மாலை போடுவது போல போட்டு கன்னத்தில் அறைந்து இருக்கிறார். ஆட்டோ டிரைவர்களுக்கு பல நல்ல திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறி ஏமாற்றிவிட்டார் அதனால் தாக்கினேன் என்று அந்த டிரைவர் கூறியுள்ளார். கெஜ்ரிவாலுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடையாது வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். திறந்த வேனில் நின்றபடி எளிமையாக எல்லோரையும் அணுகுவதால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாவதாக கூறுகின்றனர். எவ்வளவோ எதிர்பார்ப்புகள் அவர் மீது வைத்திருந்தனர் மக்கள். அவரோ அவசர கதியில் ஓர் அரசாட்சியை நடத்தியதால் கோபத்தில் உள்ளனர். எவ்ளோ அடிச்சாலும் தாங்கிறான் இவன் ரொம்ப நல்லவன் டா! என்று தாக்குதலும் தொடர்கிறது! வித்தியாசமான தலைவர் தான்!
நீலகிரி குழப்பம்!
நீலகிரியில் திமுக வேட்பாளர் ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. க வேட்பாளர் குருமூர்த்தியின் மனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளர் மனுவும் நிராகரிக்கப்பட்டதால் அங்கு திமுகவிற்கு சரியான போட்டி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வேட்பு மனுவுடன் ‘ஏ’ பி’ படிவங்கள் சமர்பிக்காததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வேட்பாளர் குருமூர்த்தியோ படிவங்களுடன் காரில் வருகையில் கார் பழுதானதால் தாமதம் ஆகிவிட்டது. பின்னர் தேர்தல் அதிகாரியை சந்திக்க முடியாமல் அவர் மீட்டிங்கில் இருந்தார். அதனால் ஆறு மணிக்கு படிவங்கள் கொடுத்தேன். அப்போது ஏற்றுக் கொண்டவர் இப்போது தள்ளுபடி செய்துவிட்டார். எனவே என் மனுவை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று வழக்குத் தொடுத்துள்ளார். ஒரு தேசிய கட்சி வேட்பாளராய் நிற்பவர் வேட்புமனுவை ஒழுங்காக சமர்பிக்காமல் இது மாதிரி நொண்டி சாக்குகள் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை! இங்கும் பணம் விளையாடி இருக்கிறது என்றே தோன்றுகிறது. இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு எப்படி மோடி டீ ஆற்றப் போகிறாரோ தெரியவில்லை!.
அச்சச்சோ யுவராஜ்!
இந்திய கிரிக்கெட்டின் ரசிகர்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்படுபவர்கள்! இந்தியா கிரிக்கெட்டில் தோற்றுவிட்டால் இந்தியநாடே தோற்றுப்போனது போல கொந்தளிப்பார்கள். இந்திய ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகாத இந்திய வீரர்களே இல்லை எனலாம். கவாஸ்கரின் மீது ஈடன் கார்டனில் அழுகிய முட்டை வீசப்போய் இனி ஈடன் கார்டனில் ஆடவே மாட்டேன் என்று முழங்கினார் கவாஸ்கர். அதுபோலவே 1987 அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் ஈடனில் களம் இறங்கவில்லை! இந்தியா தோற்றுப்போனது. யுவராஜ் சிங் இந்திய அணியின் மிகச்சிறந்த பினிஷராக வலம் வந்தவர். ஆரம்ப நாள் முதலே அவரது பீல்டிங் திறமையும் பேட்டிங்க் வலிமையும் இந்தியாவிற்கு சிறப்பாக பங்களித்தது. சில காலம் பார்மில் இல்லாமல் இருந்தார். பின் மீண்டார். 2007 டி 20 வெல்ல அவரது பங்களிப்பு இன்றிமையாதது. 2011 உலக கோப்பையிலும் ஆல்ரவுண்டராக அசத்தியவர் கேன்சர் பாதிப்பில் சிக்கி இப்போது மீண்டு வந்துள்ளார். ஒரு வீரருக்கு தன்னம்பிக்கை மிக முக்கியம் அது யுவராஜிடம் நிறைய உண்டு. நிற்க, இப்போதைய உலக கோப்பை ஆட்டத்திற்கு முன் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். அப்போது அவருக்கு கொஞ்சம் பயிற்சி கிடைத்திருக்கும். நீண்ட நாள் ஓய்வில் இருந்த அவரை திடீரென களத்தில் இறக்க பார்ம் இல்லாமல் தடுமாறினார். கடைசி ஆட்டத்தில் அவரை முன்னதாக களம் இறக்கியது தோனி செய்த தவறு. அன்றைய போட்டியில் எல்லோரும் நிதானமாகத்தான் ஆடினர். மைதானத்தின் ஈரப்பதம் அதற்கு ஒரு காரணம். அடுத்து இலங்கையின் கட்டுக்கோப்பான பந்து வீச்சு. அன்று நம்மைவிட இலங்கையினர் சிறப்பாக ஆடினர் வென்றனர். இதில் யுவராஜின் மீது கோபப்பட என்ன இருக்கிறது? அவர் வீட்டின் மீது கல் வீசுவது எல்லாம் தேவையா? ஆனால் அது நடக்கிறது! பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த அரசியல்வாதிகளை கூட மீண்டும் ஆட்சியில் அமர்த்துகிறோம்! ஆனால் விளையாட்டில் தோற்றால் வீரன் மீது கல்லடிக்கிறோம்! என்னே இந்தியரின் உணர்வு! பாவம் யுவராஜ்!
மோட்டுவும் பந்துலுவும்!
நிக்கிலோடியன் என்ற சேனல் என் செல்ல மகளின் புண்ணியத்தால் அதைத்தான் தினமும் பார்க்க வேண்டி இருக்கிறது! பின் அதில் தானே நிஞ்சா அட்டோரி போடுகிறான். அவனின் பரம ரசிகையாகி விட்டாள் என் மகள். சோட்டா பீமையும் விட்டு வைப்பதில்லை! இந்த நிக் சேனலில் மோட்டு பந்துலு என்றொரு காமெடி நிகழ்ச்சி. சிங்கம் என்றொரு இன்ஸ்பெக்டர் கேரக்டர். மோட்டு என்று தொப்பை மிகுந்த சமோசா விரும்பி! அவனது நண்பன் கண்ணாடிக்கார பந்துலு. ஜான் என்றொரு திருடன், டாக்டர் ஜட்கா என்ற ஒரு விஞ்ஞானி என்று சுவையான கதாபாத்திரங்கள். கார்டூன் கேரக்டர்களுக்கு பின்னணியில் குரல் கொடுக்கும் நம்மவர்கள் அசத்துகிறார்கள். என்ன ஒரு குறை பூசனிக்காய் மண்டையா! போன்ற கவுண்டமணி ஸ்டைல் வசனங்கள் குழந்தைகளை ஈர்த்து பிறரை திட்ட உதவ வைக்கும் என்பதுதான். மற்றபடி பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
சமையல் கார்னர்!
உப்புப் போளி!
போளியை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. சுவையான ஒரு டிஷ் அது. நீரிழிவு நோயாளிகள் நம்மால் போளி சாப்பிட முடியவில்லையே என்று வருத்தப்படலாம். அவர்களுக்காக உருவானதுதான் இந்த உப்பு போளி. பழைய மங்கையர் மலர் இதழில் இதன் செய்முறையை திருச்சியைச் சேர்ந்த சாந்தா நாராயணன் என்பவர் எழுதி இருந்தார். அதை உங்களுக்காக பகிர்கிறேன்!
தேவையானப் பொருட்கள்:
மைதா 2 கப்
நல்லெண்ணை தேவையான அளவு
மஞ்சள்தூள், உப்பு, ஒரு சிட்டிகை
கடலைப்பருப்பு 1 டம்ளர்
பூர்ணம் வைக்க
பச்சை மிளகாய் 4
வரமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
கொத்துமல்லி கறிவேப்பிலை 1 கைப்பிடி
தேங்காய்த் துறுவல் 1 பெரிய கரண்டி
பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை வாணலியில் வாசனை போக இலேசாக வறுத்துக்கொள்ளவேண்டும். அதனை கிள்ளுப்பதத்தில் வேக வைத்து நீரை வடிகட்டி இத்துடன் இஞ்சி, பச்சைமிளகாய் வரமிளகாய் தேங்காய் துருவல் பெருங்காயத் தூள், உப்பு அனைத்தும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். கரகரப்பாக கைகளால் உருட்டும் அளவுக்கு பதம் இருக்க வேண்டும்.
மைதா மாவில் நல்லெண்ணை, மஞ்சள் தூள், உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த மாவை சின்ன சின்ன வட்டமாகத் தட்டி அதன் நடுவில் உப்பு பூர்ணத்தை வைத்து பந்து போல மூடி உருட்டிக்கொள்ளவும்.
வாழை இலை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரின் மீது எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை போளி தட்டுவது போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சூப்பர் உப்பு போளி ரெடி!
சரி சரி யாராவது செஞ்சி எனக்கு ரெண்டு பார்சல் அனுப்புங்க!!?
மூலிகை மருத்துவ டிப்ஸ்!
பூண்டைத் தோல் நீக்கி சிறிது சிறிதாய் அரிந்துத் தேனில் கலந்து உண்டுவரத் தேமல் படை நீங்கும்.
நன்னாரி வேரை அரைத்து உடம்பில் தேய்த்து வர எல்லா வகை தோல் நோய்களும் குணமாகும்.
பூவரசங்காயை வெட்டி அதன் சதைப்பகுதியை தேமலின் மீது பூசி வர குணமாகும்.
அம்மான் பச்சரிசி இலைகளை கிள்ளினால் வரும் பாலை முகப்பரு மீது பூசி வர பரு உதிர்ந்து விடும்.
மஞ்சளுடன் மருதாணி இலைகளை சேர்த்து அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வர கால் வெடிப்பு மறையும்.
கருநொச்சி இலைகளை மென்று துப்பினால் வாய்ப்புண் நீங்கும்.
ஏலக்காயின் உள்ளிருக்கும் விதைகளை பொடி செய்து நீரில் கலந்து குடிக்க வயிற்றுப்போக்கு குணமாகும்.
பக்கத்து வீட்டுக்காரனிடம் மாற்றிய செக்!
ஒரு கஞ்சப் புருசன் தனது மனைவியின் பிறந்த நாளன்று பிஸினஸ் விஷயமா வெளியூர் போயிருந்தான்.
எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் அனுப்புங்கன்னு மனைவி
போன் பண்ணினாள். அதுவும் ஆயிரம் ரூபாய்க்கு செக் அனுபுங்கள் என்று சொல்லியிருந்தாள் மனைவி. அவன் தான் மகா கஞ்சனாச்சே! ஒரு செக் எழுதி அதில் ஆயிரம் ரூபாய் என்பதற்கு பதிலாக ஆயிரம் முத்தங்கள்னு எழுதி அனுப்பினான்.
ரெண்டு நாள் கழிச்சி மனைவிக்கு போன் செய்து, நான் அனுப்பிய செக் கிடைச்சுதா?ன்னு நக்கலா கேட்டான்.
“ ம் கெடச்சுது! பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட அதை கொடுத்து பணமா மாத்திட்டேன். பாவம் அதை எனக்கு கொடுப்பதற்குள் அவர் ரொம்பவே திணறிப் போயிட்டார்ன்னு சொன்னா மனைவி!
இப்ப அவன் கணவன் முகம் போன போக்கை பாக்கணுமே!
(படிச்சதில் பிடிச்சது)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.