தடி கொடுத்த பரிசு! பாப்பாமலர்!
சின்னமனூர் என்ற ஊரில் வேலுச்சாமி என்ற குடியானவன் வசித்து வந்தான். அவனுக்கு முனியம்மா என்ற மனைவி உண்டு. முனியம்மா பெரிய வாயாடி! வேலுச்சாமியை தினமும் திட்டிக்கொண்டே இருப்பாள். ஒழுங்காக சமைத்து சோறு போட மாட்டாள். வேலுச்சாமி உழைத்து களைத்து எடுத்து வரும் கூலியை மட்டும் பிடுங்கி வைத்துக் கொள்வாள். உனக்கு யார் வடிச்சு கொட்டறது? என்று பேசுவாள்.
பொறுத்து பொறுத்துப் பார்த்த வேலுச்சாமி இனி தன் மனைவி திருந்த மாட்டாள் என்று முடிவு செய்தான். இவளிடம் ஏச்சும் பேச்சும் வாங்குவதற்கு பதில் காட்டில் போய் உயிரை விட்டுவிடலாம் என்று முடிவு செய்து, “முனியம்மா! எனக்கு இன்றைக்கு மட்டும் கட்டுச்சோறு கட்டிக்கொடு! நான் காட்டிற்கு போகப்போகிறேன்! இனி திரும்ப மாட்டேன்! அங்கேயே உயிரைவிடப்போகிறேன்!” என்றான்.
“ தொலைஞ்சது சனியன்!” என்று முனியம்மாவும் கொஞ்சம் சோறு கட்டிக் கொடுக்க அதை எடுத்துக் கொண்டு காட்டிற்குள் நுழைந்தான் வேலுச்சாமி.
காட்டிற்குள் ஒரு மலையடிவாரம் அங்கு சுனை ஒன்று வழிந்தோடிக் கொண்டிருந்தது. மரநிழல் குளிர்ச்சியாக இருந்தது. வேலுச்சாமி அந்த சுனை நீரில் குளித்துவிட்டு கட்டுச்சோற்றைப் பிரித்தான். உடனே சாமி கும்பிட வேண்டும் என்று தோன்றவே கட்டுச்சோற்றை அப்படியே வைத்துவிட்டு கண்களை மூடி ஜெபம் செய்ய ஆரம்பித்தான்.
அந்த சுனையின் அடிவாரத்தில் ஒரு மரத்தில் முனி ஒன்று வசித்து வந்தது. குளித்து முடித்து பட்டை அடித்துக் கொண்டு சோற்றை திறந்து வைத்துவிட்டு ஜெபம் செய்யும் வேலுச்சாமியை அந்த முனி எவனோ மந்திரவாதி என்று நினைத்துக் கொண்டது. தம்மை பிடிக்கத்தான் வந்திருக்கிறான் என்று அஞ்சிய அது வேலுச்சாமியிடம் வந்து, “ஐயா! சாமியாரே! என்னை பிடிக்காதீர்! நான் இங்கு ரொம்ப நாளாய் இருக்கிறேன்! என்னை பிடிப்பதால் உனக்கு என்ன லாபம்?” என்று கேட்டது.
வேலுச்சாமிக்கு முதலில் முனியைப் பார்த்து கொஞ்சம் பயம்! ஆனாலும் அது பணிவாக பேசியதும் உஷார் ஆகிவிட்டான். “ உன்னை பிடித்துக் கொண்டு போய் யார் மீதாவது ஏவுவேன்! அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு விரட்டுவேன்! வேப்பிலையால் அடி கொடுப்பேன்! நிறைய பணம் கிடைக்கும்!” என்று சொன்னான்.
“ ஐயா! அந்த பணம் கிடைத்து என்ன பயன்?”
“வேளா வேளைக்கு சோறு கிடைக்கும் இல்லையா?”
“சோறுதான் பிரச்சனை என்றால் நான் அதை தீர்த்து வைக்கிறேன்! என்னிடம் ஒரு அதிசயத் தாம்பாளம் உள்ளது! அதை கழுவி வைத்து, தாம்பாளமே! அன்னம் கொடு! என்று கேட்டால் விருந்தே வைக்கும்! என்னுடைய குருநாதர் கொடுத்த அந்த தாம்பாளத்தை உனக்குத் தருகிறேன்! என்னை விட்டுவிடு!”
“சரி! சரி! அந்த தாம்பாளத்தை கொடுப்பதானால் விட்டு விடுகிறேன்!”
முனி உடனே அந்த அதிசயத் தாம்பாளத்தை கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு திரும்பினான் வேலுச்சாமி. வழியில் ஒரு கிழவி வீடு ஒன்று இருந்தது. இருட்டிப் போகவே அந்த வீட்டிற்கு சென்று, பாட்டி! இன்று இரவு தங்கிக் கொள்ளவா? என்று கேட்டான்.
“தங்கிக் கொள்! ஆனால் சாப்பாடுதான் போட முடியாது! என்னிடம் எதுவும் இல்லை!”
“பரவாயில்லை! உனக்கும் சேர்த்து நான் சாப்பாடு போடுகிறேன்!”
“எப்படி போடுவாய் தம்பி?”
“இந்த தட்டுப் போடும்!” என்ற வேலுச்சாமி! தட்டை கழுவி “தாம்பாளமே சாப்பாடு போடு!” என்று சொல்ல தட்டு நிறைய சாப்பாடும் பட்சணங்களும் வர கிழவி அதிசயித்துப் போனாள். அன்று இரவு வேலுச்சாமி உறங்கியதும் தட்டை மாற்றிவிட்டாள் கிழவி.
பொழுது விடிந்ததும் தட்டோடு வீட்டுக்கு சென்ற வேலுச்சாமியை “ எங்க வந்தே? உனக்கு வடிச்சு கொட்ட நம்மாள ஆகாது!” என்றாள்.
‘நீ ஒண்ணும் வடிச்சு கொட்ட வேணாம்! இந்த தட்டு சாப்பாடு போடும்!’ வீறாப்பா சொன்னான் வேலுச்சாமி
“ எங்க போடச்சொல்லு பாக்கலாம்!”
தட்டை கழுவி, “ தாம்பாளமே சோறு போடு!” என்றான். தட்டுதான் மாறிவிட்டதே எங்கு சோறு வரும். வரவில்லை. அவன் மனைவி திட்ட ஆரம்பித்தாள். வேலுச்சாமி, “சரி! இந்த முறை திரும்பி வர மாட்டேன்! கொஞ்சம் சோறு கட்டித்தா!” என்றான். “சோறாவது மண்ணாங்கட்டியாவது! மரியாதையா போய்ச்சேர்! என் முகத்தில் முழிக்காதே!” என்றாள் முனியம்மா.
மீண்டும் வேலுச்சாமி, கானகம் வந்து சேர்ந்தான். வழக்கம் போல சுனையில் குளித்துவிட்டு கரையில் சோகமாக அமர்ந்தான். முனி மீண்டும் வந்தது. “ நான் தான் தாம்பாளம் கொடுத்தேனே! ஏன் மீண்டும் வந்தாய்? என்று கேட்டது.
வேலுச்சாமி உஷாராகி, தாம்பாளம் தந்தால் விட்டு விடுவேன் என்று நினைத்தாயா? எனக்கு காசும் வேண்டும். இல்லாவிட்டால் உன்னை பிடித்துப் போய் விடுவேன் என்றான்.
“சரி சரி! இந்த ஆட்டுக் குட்டியை எடுத்துப் போ! இது போடும் புழுக்கை எல்லாம் பொன்னாக மாறும்! உன் தரித்திரம் தீரும்!” என்னை திரும்பவும் தொந்தரவு செய்யாதே! என்றது முனி.
ஆட்டுக்குட்டியை ஓட்டிக்கொண்டு வழக்கம் போல கிழவியின் வீட்டுக்கு வந்தான் வேலுச்சாமி. கிழவி இந்த முறை என்ன கொண்டு வந்திருக்கிறானோ என்று பார்த்தாள். “வா தம்பி! இந்த முறை சோறு கூட இருக்கிறது! நீ வயிறார சாப்பிட்டுவிட்டு தங்கி போகலாம்!” என்று அழைத்தவள் சோறு போட்டாள்.
ஆட்டை வெளியில் கட்டிப் போட்ட வேலுச்சாமி, அம்மா! ஆடு புழுக்கைப் போட்டால் கூப்பிடுங்கள்! என்றான்.
அதிலென்ன அதிசயம்! என்றாள் கிழவி.
யாருக்கும் சொல்லாதீர்கள் அம்மா! இந்த ஆடு போடும் புழுக்கை எல்லாம் பொன்னாக மாறும். என்றான்.
சரி சரி! என்றவள் அந்த ஆட்டையும் இரவோடு இரவாக மாற்றிவிட்டாள்.
ஆட்டுக்குட்டியுடன் வீடு திரும்பிய வேலுச்சாமி, முனியம்மா! இந்த ஆடு புழுக்கை போட்டால் பொன்னாக மாறும்! இனி நம் தரித்திரம் தீரூம்! என்றான். முனியம்மா நம்ப வில்லை! ஏன் இப்படி புளுகுகிறீர்கள்! ஆட்டுப்புழுக்கை எங்காவது தங்கமாக மாறுமா? என்று கேட்டாள். அந்த சமயம் பார்த்து ஆடு புழுக்கை போட்டது. ஆனால் தங்கமாக மாறவில்லை!. முனியம்மாவிற்கு கோபம் தலைக்கேறியது. இப்படி பொய் சொல்லத்தான் வந்தீர்களா? நீங்களும் உங்கள் ஆடும்! மரியாதையாக வெளியே போங்கள்! என்று விரட்டிவிட்டாள்.
வேலுச்சாமி மிகவும் வருத்தமுடன் மீண்டும் சுனைக்கு வந்தான். அங்கு இப்போது ஒரு முனிவர் இருந்தார். அவர் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து கொண்டார். “மகனே! இங்கு வாழும் முனியை ஏமாற்றிய உனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனாலும் அப்பாவியான உனக்கு உதவ நினைக்கிறேன்! இந்த தடியை வைத்துக் கொள்! இது உனக்கு இழந்ததை பெற்றுத் தரும்” என்று சொல்லி தடியை கொடுத்தார்.
வழக்கம் போல கிழவியின் வீட்டை அடைந்தான் வேலுச்சாமி. தம்பி! இப்போது என்ன கொண்டு வந்திருக்கிறாய்! நீ பெரிய மந்திரவாதி போல் இருக்கிறதே! வரும்போதெல்லாம் எதையாவது கொண்டு வருகிறாய்! இளித்தாள் கிழவி.
வேலுச்சாமி, “பாட்டி! இந்த தடியை பத்திரமாக வைத்துக் கொள்! நான் குளித்துவிட்டு வருகிறேன்! அதனிடம் எதையும் கேட்டுவிடாதே!” என்று சொல்லிச் சென்றான்.
வேலுச்சாமி அப்படி நகர்ந்ததும் தடியை கையில் எடுத்து பார்த்த கிழவி, இதுவும் எதாவது அதிசயத் தடியாகத்தான் இருக்க வேண்டும். எதற்கும் கேட்டுப் பார்ப்போம்! என்று ”தடியே போடு! தடியே போடு!” என்று கேட்க, அது அவளை அவளை போட்டுத் தாக்கியது. முன்னும் பின்னும் விளாசு விளாசு என்று தடி விளாச, ஐயோ அம்மா! என்று அலறினாள் கிழவி. வேலுச்சாமி அலறல் சத்தம் கேட்டு வேகமாக வந்தான். அவனைக் கண்ட கிழவி, “தம்பி! என்னை மன்னித்துவிடு!இந்த தடியை நிறுத்து! நான் திருடிய தாம்பாளத்தையும், ஆட்டுக்குட்டியையும் தந்துவிடுகிறேன்!” என்றாள்.
“ஏய்! கிழவி! நீதான் இத்தனைக்கும் காரணமா? உனக்கு வேண்டியதுதான்! பாவம் வயசானவள் என்று உன்னை இத்தோடு விடுகிறேன்!”
“தடியே! போதும் நிறுத்து!” தடி அடிப்பதை நிறுத்தியது. தாம்பாளத்தையும் ஆட்டுக்குட்டியையும் தந்தாள் கிழவி. சற்று நேரம் அங்கேயே தங்கி சோதித்து பார்த்து மூன்றையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
“மறுபடியும் எங்கே வந்தாய்?” மனைவி கோபமாக கேட்கவும்,
“சோறு சாப்பிட!”
“உனக்கெல்லாம் வடித்து கொட்டமுடியாது!”
“நீ வடித்து கொட்ட வேண்டாம்! இந்த தட்டு போடும்!” என்ற வேலுச்சாமி, தட்டை கழுவி ”தாம்பாளமே! சோறு போடு”என்றான். தட்டு நிறைய பட்சணங்களுடன் சோறு வர அதிசயத்தாள் முனியம்மா. ஆடும் அந்த சமயம் புழுக்கை போட அது பொன் புழுக்கை ஆனது.
வாயெல்லாம் பல்லாக, “என்னங்க! என்னை மன்னிச்சுடுங்க! உங்களைப்போய் திட்டினேனே! அடிச்சேனே! என்னை ஒரு நாலு அடி சாத்துங்க! இனிமே உங்களை எதுவும் சொல்ல மாட்டேன்!” என்றாள் முனியம்மா!
“அப்படியா! கண்டிப்பா அடிக்கணுமா!”
“வைக்கோலாலா நாலு அடி அடிங்க! நான் உங்க பொண்டாட்டிதான்!”
“நான் உன்னை அடிக்க வேண்டியது இல்லை! இந்த தடி பார்த்துக்கொள்ளும்! தடியே! போடு இவளை!”
தடி, அவளை விளாசித்தள்ள இன்னும் வேகமா போடு! என்றான்.
முனியம்மாவால் அடி தாங்க முடியவில்லை! “என்னை மன்னிச்சுருங்க! இனிமே உங்க சொல்படி கேப்பேன்! அடிக்கறதை நிறுத்த சொல்லுங்க! வேளா வேளைக்கு சோறு சமைச்சு போடுறேன்!” என்று காலில் விழுந்தாள்.
“அப்படி வா வழிக்கு! ”என்ற வேலுச்சாமி தடியை நிறுத்த சொன்னான்.
அதற்கப்புறம் அவர்கள் தாம்பாளம், ஆடு, தடியின் உதவியோடு பலகாலம் சுகமாக வாழ்ந்தார்கள்.
(செவிவழிக்கதை தழுவல்)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!