பள்ளிகொண்ட சிவன்! சனிப்பிரதோஷ சிறப்பு தரிசனம்!
காக்கும் கடவுள் கருணா மூர்த்தியான விஷ்ணு பல இடங்களில் பள்ளிகொண்ட கோலமாக காட்சி அளித்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை பார்த்திருப்பீர்கள்! ஆனால் ஈசன் பள்ளிக்கொண்ட நிலையில் எந்த இடத்திலும் அருள்பாலிப்பதை கண்டிருக்க முடியாது. ஆனால் சிவன் பள்ளிகொண்டிருக்கிறார். அது எங்கே?
பள்ளிகொண்ட சிவனை காணும் முன் சிவன் எதற்கு பள்ளிகொண்டார் என்று பார்க்கலாம்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதத்தை பெற முயற்சித்தனர். அப்போது வாசுகியை கயிறாகவும் மந்தார மலையை மத்தாகவும் பயன்படுத்தினர். வலி தாங்க முடியாத வாசுகி விஷத்தை கக்க ஆலகால விஷம் பரவியது.
தேவர்களும் அந்த விஷத்தின் வெப்பம் கொடுமை தாள முடியாமல் தவித்து சிவனை சரணடைந்தனர். அப்போது சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி விஷத்தை திரட்டி எடுத்து வரச்சொன்னார். அவரும் விஷத்தை ஒரு நாவற்பழ வடிவில் திரட்டி எடுத்து வந்தார். அதை சிவன் முழுங்க உடன் இருந்த பார்வதி என்ன காரியம் செய்து விட்டீர்கள் என்று விஷம் உள்ளே இறங்காமல் இருக்க கழுத்தினை பிடித்தாள். விஷம் நெஞ்சோடு நின்றது.சிவன் திருநீலகண்டன் ஆனார்.
இந்த நிகழ்வே பிரதோஷ கதையாக சொல்லப்படுகிறது. விஷம் பரவிய சமயம் பிரதோஷ காலம் தேவர்கள் இங்கும் அங்கும் ஓடினர். அதை நினைவு படுத்தவே சோமசூக்த பிரதட்சணம் பிரதோஷ காலத்தில் செய்யப்படுகிறது.
இப்படி விஷம் உண்ட சிவன் நந்தி மீது நர்த்தனம் புரிந்தார். பின்னர் பார்வதியுடன் கைலாயம் செல்லும் வழியில் பார்வதியுடன் இந்த தலத்தில் தங்கி ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது. பார்வதியின் மடியில் தலைவைத்து படுத்திருக்கும் கோலத்தில் சிவன் சுதை சிற்பமாக உள்ளார். எல்லா ஆலயங்களிலும் சிவன் லிங்க வடிவில் காணப்படுவார். இங்கு தம்பதி சமேதராக சுய ரூபத்துடன் இருப்பது இன்னொரு சிறப்பு.
மேலும் இந்த ஆலயத்தில் அனைத்து தெய்வங்களும் தம்பதியராக இருப்பதும் ஒரு சிறப்பு. பிரதோஷம் உருவான தலம் என்றும் முதல் முதலில் பிரதோஷ வழிபாடு இங்குதான் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது.
சுருட்டப்பள்ளி என்னும் இந்த தலம் சென்னையில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதி செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது. கோவில் நிர்வாகமும் ஆந்திர மாநிலத்தினுடையதாக உள்ளது.
இந்த தலத்தில் இறைவன் பள்ளிகொண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி அமுதாம்பிகை என்று வழங்கப்படுகிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தலம் ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. எல்லா பிரதோஷமும் விஷேசமாக கொண்டாடப்பட்டாலும் சனிப்பிரதோஷம் ஒரு திருவிழா போல மிக விமரிசையுடன் கொண்டாடப்படுகிறது.
இங்கு தாம்பத்ய தட்சினா மூர்த்தி தம்பதி தாராவுடன் அருள்பாலிக்கிறார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட இழந்த பொருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த தலத்தில் வால்மீகி முனிவருக்கு சிவன் காட்சி கொடுத்தார். இதன் காரணமாக வால்மீகிஸ்வரர் இங்கு எழுந்தருளி உள்ளார்.
மூலவரைவால்மீகிஸ்வரர்என்கிறார்கள். இவருக்குஎதிரில்ராமலிங்கம்உள்ளது. இந்தசன்னதிக்குவெளியேதுவாரபாலகருக்குபதில்சங்கநிதியும், பதுமநிதியும்உள்ளனர். அம்மன்மரகதாம்பிகைசன்னதிக்குவெளியில்துவாரபாலகியருக்குபதில்பாற்கடலிலிருந்துகிடைத்தகாமதேனுவும், கற்பகவிருட்சமும்உள்ளது.
இத்திருக்கோவிலில் தெய்வங்கள் தம்பதி சமேதராகக் காட்சியளிக்கின்றனர். சர்வ மங்களாம்பிகை உடனுறை பெருமான் பள்ளி கொண்ட பரமேஸ்வரன், மரகதாம்பிகையுடன் வால்மீகிஸ்வரர், சித்தி, புத்தி சமேத விநாயகர், பூரணா, புஷ்கலாவுடன் சாஸ்தா, கவுரிதேவியுடன் குபேரன் தாராவுடன் தட்சிணாமூர்த்தி ஆகியோர் இங்கே வீற்றிருக்கிறார்கள்.
அதிசயமாக பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இத்திருக்கோலத்தைக் கண்டு மகிழ தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்துவிட்டார்கள். தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் அந்த மாலை நேரத்தில் ஆனந்த நடனம் ஆடிக்காட்டினார். தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இத்திருகோவில் ஸ்தல புராணம்.
அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். பள்ளி கொண்ட நாதனை சனிப்பிரதோஷ காலத்தில் வணங்கினால் இழந்த செல்வம் கிடைக்கும் பிரிந்த தம்பதியர் சேர்வர், இழந்த பதவி கிடைக்கும் வேண்டிய பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6மணி முதல் 12.30 வரை
மாலை 4.30 மணி முதல் 8.00 மணிவரை.
சனிப் பிரதோஷம் நாளை சனிக்கிழமை சிவன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவோம்! சிறப்படைவோம்!